-ல் போட்டுத் தாக்கியது
ஹிரோஷிமா என் அன்பே
- 'நகைப்புக்குரிய மனிதனின் கனவு' என்ற கதையில் தஸ்தாவெயஸ்கி
நேற்றைய பதிவில் ஹிரோஷிமா கொடுமைகளை முன்னோட்டோமாக சொன்னது 'Hiroshima mon amour' (ஹிரோஷிமா என் அன்பே) என்ற பிரெஞ்சு படத்தை பற்றி அலசுவதற்காகவே. ஹிரோஷிமா மொன் அமுவா படத்தை பற்றிய சிறுகுறிப்பு

இயக்குநர் : அலென் ருஷ்னே (Alain Resnais)
கதை : மார்கரெட் தூரா
மொழி : பிரெஞ்சு
ஆண்டு : 1959
பெற்ற விருதுகள் : கேன்ஸ் அவார்ட், Internation film critics award
நடிகர்கள் : இமானுல் ரீவா(நாயகி), இஜி ஒக்காடா(நாயகன்)
சில வரிகளில் கதை சொல்ல வேண்டுமானால் ஒரு பிரெஞ்சு நடிகை, ஒரு ஜப்பானிய ஆடவனை ஹிரோஷிமாவில் சந்திக்கிறாள். இருவரும் தங்களின் கசப்பான முந்தைய வாழ்க்கையின் நினைவுகள் வழியாக சென்று தங்களை நிகழ்காலத்தில் அடையாளம் காண்கிறார்கள் என்பதை இயக்குனர் அலென் ரூஷ்னே நிகழ்கால காட்சிகளையும், புத்திசாலிதனமான ஃபிளாஷ்பேக்களை கலந்து ஒரு காவியத்தை படைத்திருக்கிறார்.
1959, 1960 களில் உலக சினிமா ஒரு முக்கிய திருப்புமுனையை சந்தித்தது. முக்கியமாக பிரெஞ்சு சினிமாவில் 'தி 400 ப்ளோஸ்' தந்த பிரான்ஸ்வா த்ரூஃபோவும், அலென் ருஷ்னேயும் பிரெஞ்சு புதிய அலை சினிமா உருவாதற்கு காரணமாக இருந்தவர்கள். 1952-லிருந்து இன்று வரையிலான பிரெஞ்சு சினிமாவை எடுத்துக்கொண்டால் 'ஹிரோஷிமா மோன் அமுவா' முதல் 10 இடத்துக்குள் இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் படைப்பு திறனும், மார்கரெட் தூராவின் மனோதத்துவத்தை சார்ந்த கதையம்சமும் தான்.
போருக்கு பின் ஹிரோஷிமாவில் நிகழ்ந்த கொடுமையினை காதலின் வேதனைக்கு குறியீடாக்குகிறார் இயக்குநர். முதல் காட்சியில் படு க்ளோசப்பில் இரண்டு உடல்களின் தோள்கள் தழுவி கிடக்கும் காட்சி. அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லும் அதே வேளையில் அந்த உடல்களின் மீது சாம்பல் மழையாக பொழிகிறது. கொஞ்ச நேரத்தில் ரேடியோ ஆக்டிவ் தனிமங்களாக அது மிளிர்கிறது. அதே இரு உடல்கள் இன்னும் முயங்கிக் கிடக்கின்றன. அங்கு ஆக்ரோஷமான செயல்கள் இல்லாமல் மென்மையான தழுவலை சொல்ல தோளும் கையும் மட்டுமே இயக்கத்தில் இருக்கின்றன. கொஞ்ச நேரத்தில் ரேடியோ அக்டிவ் தனிமங்களின் மினுமினுப்பு மறைந்து உடல்களின் மேல் வியர்வைத் துளிகள் பூத்து இருக்கின்றன.
அந்த இரண்டு உடல்களும் பேச ஆரம்பிக்கின்றன. அதில் ஆண் குரல் பெண்ணிடம் சொல்கிறது "நீ ஹிரோஷிமாவில் எதையும் பார்க்கவில்லை"? இந்த இடத்தில் இருவரும் ஹிரோஷிமாவில் இருக்கின்றனர் என்பதை இயக்குநர் உணர்த்துகிறார். அந்த பெண் பேச ஆரம்பிக்கிறாள் "ஹிரோஷிமா ஆஸ்பத்திரியை பார்த்தேன். ஹிரோஷிமா மியூசியத்திற்கு மூன்று முறை சென்றேன். ஹிரோஷிமாவில் எல்லாத்தையும் பார்த்து விட்டேன்" என்ற அவள் விவரிக்க விவரிக்க அந்த ஆணும் "நீ ஹிரோஷிமாவில் எதுவும் பார்க்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே வர, இயக்குநர் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியபோது நடந்த கொடுமைகளை ஒரு விவாரண படம் போல காட்டிக் கொண்டே போகிறார். நேற்றைய பதிவில் நான் அணுவீச்சின் கொடுமையை விளக்கியது போக, அந்த படத்தில் வந்திருந்த காட்சியை எடிட் செய்து போட்டிருந்தேன். அந்த காட்சியை காண இங்கே அல்லது இங்கே சொடுக்கி 9 MB அளவுள்ள கோப்பை பெற்றுக் கொள்ளவும்.
காலையில் எழுந்திருந்த நாயகி ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து ஹிரோஷிமாவை பார்த்தபடி தேநீர் பருகுகிறாள். அறைக்கு திரும்பி வந்தவள் ஜப்பானிய நாயகன் படுத்திருக்கும் காட்சி தீடிரென இறந்து கிடக்கும் ஒரு ராணுவ வீரனை அவளுக்கு நினைவுப் படுத்துகிறது. பிறகு கேஷூவலாக நகரும் காட்சியின் வழியாக தான் தெரிகிறது 'அந்த பிரெஞ்சு பெண் நடிகையும், ஜப்பானிய கட்டிட கலை நிபுணரும் முந்தைய நாள் இரவு ஒரு பாரில் சந்தித்து, பிடித்தவுடன் படுக்கையில் இணைந்திருக்கிறார்கள். நாயகன் சொல்கிறான் ஹிரோஷிமா நிகழ்வின் போது தான் தூரதேசத்துக்கு போயிருந்ததால் தான் தப்பித்து குடும்பத்தை இழந்த சோகத்தை சொல்கிறான். அந்த பிரெஞ்சு நடிகை 'அமைதி' என்ற படத்தில் நடிக்க ஹிரோஷிமா வந்ததாகவும், மறுநாள் பாரீஸ் புறப்படுவதாகவும் சொல்லி விட்டு அவனை பிரிவதிலேயே குறியாக இருக்கிறாள்.
ஜப்பானிய நாயகன் ஏறக்குறைய அவள் மீது பைத்தியமாகி அவளின் பின்புலத்தை தெரிந்துக் கொள்ள விழைகிறான். அவளின் பின்புலத்தை அறிந்துக் கொள்ள ஏறக்குறைய மனோதத்துவ நிபுணரின் பாங்குடன் வெகு இயல்பான நடவடிக்கைகளுடன் அந்த பெண்ணின் ஆழ்மனதில் சென்று ஒவ்வொன்றாக சூட்சுமாக வெளிக் கொண்டு வருவதே இந்த படத்தின் பலம்.
பிரெஞ்சு பெண் எங்கு சென்றாலும் நாயகன் தொடர்ந்து சென்று கடந்த கால வாழ்க்கையை ரொம்ப இயல்பாக கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணின் மனதிலிருந்து அவளுடைய முதல் காதலின் காயத்திலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. "காதல் வாழ்நாள் மிகக் குறுகியது" என்று ஆரம்பிக்கிறாள். மெல்ல மெல்ல நாயகன் அவளின் சொந்த ஊரைப் பற்றி கேட்க, பாரீஸ் பக்கத்தில் உள்ள நவேர் என்பது தான் தன் சொந்த ஊர் என்று மகிழ்ச்சியுடன் அவள் சொல்வதுடன் உரையாடல் ஆரம்பிக்கிறது. ஜம்ப் சீன்ஸ் எனப்படும் முறையில் காட்சிகள் நவேருக்கும், ஹிரோஷிமாவின் நிகழ்காலத்துக்கும் முன்னும் பின்னும் நமக்கு குழப்பம் ஏற்படாத வகையில் போய் வருகிறது. நாயகன் ஹிரோஷிமாவின் நிகழ்வின் போது நாயகி எங்கிருந்ததாக வினவுகிறான்.
ஏறக்குறைய மனதின் அடியில் புதைந்து போன நவேரின் நினைவலைகளில் முழ்கி மெதுவாக பேச ஆரம்பிக்கிறாள். இரண்டாம் உலகப்போர் முடிவின் காலகட்டத்தில் அவளது ஊரில் உள்ள ஜெர்மானிய போர் வீரன் ஒருவன் மீது காதல் கொள்கிறாள். மெல்ல அவளது முதல் காதலின் ஆழத்தை விவரிக்கிறாள். சட்டென்று எதோ ஞாபகம் வந்தவளாக ஜப்பானிய நாயகனிடமிருந்து கிளம்ப எத்தனிக்கிறாள்.
அப்போது ஜப்பானிய நாயகன் அந்த பிரெஞ்சு நடிகையிடம் தன்னை அந்த ஜெர்மானிய வீரனின் இடத்தில் வைத்து "நான் இல்லாத போது உனக்கு என்ன நிகழ்ந்தது?" என்று கேட்கிறான். ஏற்கனவே ஹிரோஷிமாவும், ஜப்பானிய நாயகனும் அவளது முதல் காதல் சூழ்நிலையை உணர்த்த ஆரம்பித்ததும் திரும்ப பேசுகிறாள். நவேரில் அவள் பைத்தியமாகி சின்ன அறைக்குள் அடைப்பட்டு கிடந்த காட்சியை விளக்குகிறாள். சுயநினைவின்றி சுவற்றை பிராண்டுவதும், கை நகங்களில் வழியும் இரத்ததை நக்குவதும் போன்ற காட்சிகளால் அவள் சுயநினைவின்றி அலைந்த போது அனுபவித்த கொடுமையை ஹிரோஷிமாவின் நிகழ்வுக்கு பிறகு நடந்த கொடுமையை காட்சிகளின்றி நமக்கு உணர வைப்பார் இயக்குநர்.
ஜப்பானிய நாயகனின் கேள்விகளால் இன்னும் இன்னும் அழமாக உள்மனதில் இறங்கி கொண்டே ஜெர்மானிய வீரனான அவள் காதலனுக்கு நிகழ்ந்ததை சொல்லுவாள். அவள் காதலனுடன் இணைய ஓடி வரும் போது ஜெர்மானிய வீரன் யாராலேயோ சுடப்படுவான். அவள் கண் முன்னமயே துடித்துக் கொண்டிருப்பான். அவ்வளவு சீக்கிரம் அவன் சாகவில்லை. கடைசியில் அவன் சாகும் போது அவளும் செத்துப் போனதாக உணருகிறாள். அந்த காட்சியில் தான் நமக்கு புரியும் ஏன் கதாநாயகி சுயநினைவிழந்து பைத்தியமாகிறாள் என்று.
காலம் செல்ல செல்ல அவனுடைய நினைவும் மறந்து போக மெதுவாக சுயநினைவுக்கு வருகிறாள். அவளது பெற்றோர்கள் அவளை பாரீசுக்கு அனுப்புகிறார்கள். அப்போது தான் ஹிரோஷிமாவில் குண்டு விழுந்ததாக பத்திரிக்கையில் படித்ததாக கூறுகிறாள். மீண்டு வந்த அவளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க, நடிகையும் ஆகிறாள். இந்த எமோஷனல் காட்சிகளை மிக தத்ரூபமாக ரீவா என்ற நாயகி நடித்திருப்பாள்.
14 வருடங்களுக்கு பிறகு அவளது முதல் காதல் காயத்தை இதுவரை கணவனிடம் கூட சொல்லாமல் ஜப்பானிய நாயகனிடம் சொன்னதும் காயம்பட்ட மனது ஆறுகிறது. அந்த ஜப்பானிய நாயகனும் திருமணம் ஆனவன் தான். இருந்தாலும் பிரிந்து செல்ல நினைக்கும் அந்த பிரெஞ்சு நடிகையை ஹிரோஷிமாவில் இருக்குமாறு வேண்டுகிறான். கடைசி காட்சிகள் அவளின் முதல் காதல் முழுவதுமாக மறைந்துக் கொண்டிருக்க, ஹிரோஷிமாவும் ஜப்பானிய நாயகனும் அந்த முதல் காதலை முற்றிலுமாக நிரப்பியிருப்பதை உணருகிறாள். அவள் மனதில் நிகழும் மாறுதல்களை நல்ல காட்சிகளுடன் விளக்கியதோடு படம் முடிவடைகிறது.
இந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், இயக்குநரின் திறனும் இன்றளவும் விவாதிக்கப்பட்டும், ஒரு திரைப்பாடமாக ஏற்று கொள்ளப்பட்டும் வருகிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு விவரணமாக சொல்லப்படும் ஹிரோஷிமா காட்சிகள் ஹிரோஷிமா மியூசியத்தில் இருந்த வீடியோ காட்சிகள் என்று கூறுகின்றனர். ஆதாரம் இல்லை.
இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
எப்படி உங்களால எப்படி இவ்வளவு தகவல் சேகரித்து எழுத முடியுது.
உங்களுடய கடின உழைப்பு தெரிகின்றது. வாழ்துக்கள்.
நல்ல ஓர் அருமையான படத்தை பார்த்தது போல இருந்தது உங்கள் விமர்சனம்.
நேரம் கிடைக்கும் பொழுது ENGLISH PATIENT என்ற படம் பாருங்கள் சற்று இந்த சாயல்
இருக்கலாம்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
இந்த வார நட்சத்திரமா இருந்துக்கிட்டு, நீங்க 'ஜொலிக்கிற ஜொலிப்பு'
கண்ணைக் கூசுது!!
உங்க ஒவ்வொரு பதிவிலும் இருக்கற 'அசாத்திய உழைப்பு' கண்கூடாத் தெரியுது!
இவ்வளவு மெனக்கெட்டு என்னை போன்றவர்களால் செய்யவே முடியாது.
நல்ல நல்ல பதிவுகளாவே போட்டுக்கிட்டு வர்றீங்க. ஜமாய்ங்க!!!!
நல்லா இருங்க. வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
//எப்படி உங்களால எப்படி இவ்வளவு தகவல் சேகரித்து எழுத முடியுது.//
//உங்க ஒவ்வொரு பதிவிலும் இருக்கற 'அசாத்திய உழைப்பு' கண்கூடாத் தெரியுது!//
எல்லாம் ஒரு ஆர்வ கோளறு தான். ஆனால் ரொம்ப ஒன்னும் மெனக்கெடவில்லை.
சிவா,
//ENGLISH PATIENT என்ற படம் பாருங்கள் //
இந்த படத்தை இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு இயக்குநர் இயக்குது தானே. அதுவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டது தானே?
மாண்டீ,
//Hiroshima mon amour டிவிடியில் பார்த்திருந்தீர்களானால், அதையடுத்து வரும் ரெனேயின் சுவாரஸ்யமான பேட்டி குறித்தும் எழுதியிருக்கலாம்!! //
ஆமாயில்லை. எனக்கு அந்த ஐடியாவே வரலே.
ரெனெயின் மற்ற படைப்புகளின் அறிமுகத்துக்கு நன்றி. அந்த படைப்புகளையும் தேடிப் பார்க்கிறேன்./
திடீரென ஒரு எண்ணம்...இது போன்ற உலக விஷயங்கள் ஏன் நம் இந்திய தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதே இல்லை...?
//திடீரென ஒரு எண்ணம்...இது போன்ற உலக விஷயங்கள் ஏன் நம் இந்திய தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதே இல்லை...? //
நியாயமான கேள்வி. அது போல் தமிழ் சினிமாக்களில் ஏன் போர்களை அடிப்படையாக வைத்து யாரும் படம் எடுப்பதில்லை. வழக்கமான பதில் 'சந்தைப்படுத்தமுடியாது' என்பது தானாகத் தான் இருக்கும்
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
ஹிரோஷிமா
இரண்டாம் உலகப்போரில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளில் ஜப்பானின் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ஆகஸ்ட் 6, 1945-ம் ஆண்டு ஹிரோஷிமாவின் மீதும், ஆகஸ்ட் 9,1945-ம் ஆண்டு நாகசாகியின் மீதும் அமெரிக்கா அணு ஆயுத தாக்குதலை தொடுத்தது மோசமான விளைவின் பிறகு, ஆகஸ்ட் 15, 1945-ல் ஜப்பான் சரணடைந்ததோடு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
அணு தாக்குதலுக்கும் முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்கியிருந்த போது அது செய்த அட்டகாசமும், அட்டூழியமும் வரலாற்றின் கரைபடிந்த பக்கங்களில் உள்ளது. 1937 மத்தியில் ஜப்பான் சீனாவில் உள்ள மஞ்சூரியாவை கைபற்றிய பிறகு டிசம்பரில் நான்கிங் என்ற இடத்தில் 200,000 முதல் 300000 சீனர்களை காரண காரியமில்லாமல் கொன்று குவித்தது. பெண்களை வன்புணர்வு செய்தனர். போருக்கு பின் சீனர்களை உயிருடன் கொன்று புதைத்த மிகப்பெரிய புதைகுழியை கண்டுபிடித்தார்கள். 1941 ஜூலையில் ஜப்பான் இந்தோ-சீனாவையும்,கிழக்கு ஆசியாவையும் ஆக்கிரமித்த பிறகு ஜப்பானின் மீது அது வரை போரில் கலந்துக் கொள்ளாத அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. இதை பொறுக்க முடியாத ஜப்பான் டிசம்பர் 7, 1941, காலை 7:45 மணிக்கு ஜப்பானியர்கள் வாஷிங்டனுடன் உடன்படிக்கை விசயமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் அமெரிக்காவின் கப்பற்தளங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரை தாக்கியது.
பேர்ல் ஹார்பர் நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா பிரிட்டன் உதவியுடன் உக்கிரமாக உலகப்போரில் இறங்கியது. ஜப்பானின் மீது கொண்ட வஞ்சினம் தான் அமெரிக்காவை முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஜப்பான் மீது பல்முனை தாக்குதல்களை அமெரிக்கா தொடுக்க ஆரம்பித்தது. நீயா? நானா? என்ற போட்டியில் நானே என்று அமெரிக்கா நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.
1938-ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனி விஞ்ஞானிகள் அணுவை பிளந்துவிட்டார்கள் என்ற செய்தி பல நெருக்கடியை கொடுத்தது. ஜெர்மனி முதலில் அணு ஆயுதத்தை தயாரித்து விடுமோ என்ற பயம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. ஹிட்லரின் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் உலகம் மிக மோசமடைந்து விடும் என்ற பயம். ஹிட்லரின் யூத வெறி காரணமாக அணுவை பிளந்த விஞ்ஞானிகளுக்கு சரியான இலக்கில்லாமல் போய் விட்டது.ஜெர்மனியில் அணு ஆராய்ச்சி சரியாக போகவில்லை. ஜெர்மனியை விட்டு வந்த யூதனான ஐன்ஸ்டீன் முதலானோர் அமெரிக்காவை வலியூறுத்த அன்றைய அதிபர் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், 'மன்காட்டன் ப்ராஜக்ட்'(manhattan project) என்ற ரகசிய அணு ஆய்வு ப்ராஜக்ட் ஒன்றை நிறுவினார்.
ராபர்ட் ஜே ஆப்பன்ஹைமர் தலைமையில் நாட்டில் தலைச்சிறந்த அணுவிஞ்ஞானிகள் ஆராய 200,000 பேர்களை கொண்டு ஒரு ரகசிய அணு ஆயுத வடிவமைப்பு நடந்துக் கொண்டிருந்தது. கடுமையான ஆராய்ச்சியின் பலனாக யூரேனியம்-235, ப்ளுட்டோனியம் போன்ற கனிமங்களை பிளந்து சங்கிலித் தொடர் வினைகளின் மூலம் எண்ணி பார்க்க முடியாத அளவு சக்தி உண்டாக்க முடியுமென நிறுபித்தனர்.1945, ஜூலை 16 ப்ளூட்டோனியம் கொண்டு தயாரிக்கப்பட்ட 'பேஃட் பாய்' (fat boy) என்ற முதல் அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டது. சோதனை முயற்சியாக அன்று நியூமெக்ஸிகோவில் ட்ரினிட்டி (Trinity) என்ற பெயரில் வெடிப்பு நிகழ்த்தினார்கள். உயரே கிளம்பிய காளான் புகையும், வெளிச்சமும், வெடி அதிர்வும் பல மைல்களுக்கு அப்பால் இருந்த விஞ்ஞானிகளையும் மூச்சடைக்க வைத்தது. அந்த அளவு சக்தியின் வெளிப்பாடு எங்கேயும் அவர்கள் கண்டதில்லை. உலகின் முதல் அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக முடிந்தது.ஆப்பன்ஹைமர் சோதனை முயற்சி முன்பு வரை எண்ணியிருந்த அணு ஆற்றலுக்கு 10 மடங்கு அதிகமிருப்பதை எண்ணி வியந்து போனார். டிரினிட்டி அணு வெடிப்பின் வீடியோ க்ளிப்பிங்ஸ்க்கு இங்கே சொடுக்கவும்.
அமெரிக்காவுக்கு ஜப்பானால் நெருக்கடி அதிகமாகி கொண்டே போனது. ஜப்பானை வென்று முழுவதும் ஆக்கிரமிக்கும் வரை இரண்டாம் உலகப்போருக்கு முடிவு வராது என புதியதாக பதவிக்கு வந்திருந்த அதிபர் ட்ரூமென் கணக்கு போட ஆரம்பித்தார். வழக்காமான வழியில் சென்று போரிட்டு வென்றால் 100 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை இழக்க வேண்டிவரும் என்று எண்ணினார். அதற்கு ஒரே தீர்வு அணு ஆயுதத்தை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது. மன்காட்டன் ப்ராஜக்ட்டில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது. 2 பில்லியன் அந்த காலத்தில் செலவழித்து தயாரிக்கப்பட்ட ஆயுதம் சும்மா தூங்கி கொண்டிருக்க முடியுமா? என்று பல பேரின் ஆதங்கம்.
ஜப்பானுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காமல் ஜப்பானின் சில முக்கிய நகரமான க்யாட்டோ, ஹிரோஷிமா,யோககாமா,கோகுரா போன்ற நகரங்கள் அணு ஆய்தத்தால் அமெரிக்கா தாக்க பட்டியலிட்டது. கடைசியில் ஹிரோஷிமா தான் முதல் குறி என்று தீர்மானிக்கப்பட்டது. கர்னல் பால் திப்பெட் (Paul tibbets) கமெண்டராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 6, 1945 என்று நாளும் தீர்மானிக்கப்பட்டது. திப்பெட் தலைமையில் புறப்படும் குழுவிற்கு அதுவரை அணுகுண்டு என்றால் என்ன? அதன் விளைவு என்ன? என்று தெரியாது. மன்காட்டன் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க வந்த போது சோதனை அணுகுண்டு வெடிப்பு பற்றிய படத்தை, ப்ரொஜடர் வேலை செய்யாததால் போட்டு காட்ட முடியவில்லை. விஞ்ஞானிகள் விளக்கியதிலிருந்தும், புகைப்படங்களிலிருந்தும் நடக்க போகும் விபரீதத்தை அறிந்து உறைந்து போனார்கள். குண்டு போட்டவுடன் போர் விமானத்தை அதிர்வலை தாக்கும் என்பதால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

'இனோல கே' (ENOLA GAY) என்ற B-29 வகை போர் விமானத்தில் 'லிட்டில் பாய்' என்ற யூரேனியம்-235-ல் ஆன அணு ஆயுதம் ரெடியாக ஏற்றப்பட்டது. லிட்டில் பாய் அணு ஆயுதத்தின் மொத்த எடை 4,045KG, சுற்றளவு 0.7 மீட்டர், நீளம் 3.2 மீட்டர், வெடிக்கும் போது 12,000 டன் டி.என்.டியை ஒருங்கு சேர வெடித்தால் உண்டாகும் சக்தி. லிட்டில் பாயின் வெடிப்பை தூண்டும் சர்க்கியூட்டுகள் இன்னும் பொருத்தபடவில்லை. ஹிரோஷிமாவை நெருங்கும் போது பொருத்தப் போவதாக கூறப்பட்டது.இனோலா கே மற்ற இரண்டு உளவு விமானங்களுடன் கிளம்புகிறது. கிளம்பிய 15 நிமிடத்தில் லிட்டில் பாய் என்ற அணுகுண்டில் அசெம்பிளி வேலைகள் நடைபெறுகின்றன. சரியாக மூன்று மணி நேரம் கழித்து இனோலா கே மற்ற இரண்டு விமானங்களுடன் Iwo Jima என்ற இடத்தில் வானில் சந்திக்கின்றன.
காலை 6:15 மணி (ஹிரோஷிமா நேரப்படி) அளவில் ஒரு உளவு விமானம் முன் சென்று வானிலை ஹிரோஷிமாவில் மிகச் சரியாக இருக்கிறது என்று திப்பெட்டிடம் அறிவிக்கிறது. காலை 6:30 மணி அளவில் திப்பெட் தன் குழுவிடன் 'இதோ ஹிரோஷிமா' என அறிவிக்கிறார். இன்னும் 1 மணி 45 மணி நிமிடங்கள் இருக்கும் நிலையில் குழு அணுகுண்டின் சர்க்கியூட்டுகளை உயிருட்டும் பணி நடக்கிறது. ஹிரோஷிமாவை நெருங்கும் நேரத்தில் விமானத்தின் உயரத்தை சரியான அளவிற்கு கொண்டு வருகிறார்கள். வானம் தெளிவாக இருந்தததால் ஹிரோஷிமாவின் நடுவில் உள்ள T வடிவில் உள்ள அயோய் பாலத்திற்கு குறி வைக்கிறார்கள்.
சரியாக ஹிரோஷிமா நேரப்படி காலை 8:15-க்கு மணிக்கு கவுண்ட் டவுண் ஆக அணுகுண்டு விமானத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. 18000 அடி உயரத்தில் அணுகுண்டு தன்னால் எரியூட்டப்படுகிறது. விமானம் திரும்பி கண்மண் தெரியாத வேகத்தில் வந்த வழியில் விரைகிறது. 43 நொடிகளில் ஒளி விமானத்தை நிரப்புகிறது. பர்ப்பிள், சிகப்பு கலவையினூடே கருப்பு கலரில் காளான் வடிவில் அடர்த்தியான புகை ஹிரோஷிமா நகரையே மறைக்கிறது. ஒரே நிமிடத்தில் 20000 அடி உயரத்தை அடைந்த காளான் புகை கொஞ்ச நேரத்தில் 30000 அடிக்கு உயர்கிறது. திப்பெட் விமானத்தில் அறிவிக்கிறார் "வரலாற்று சிறப்புமிக்க முதல் அணுகுண்டை வெடித்து விட்டோம்".

கீழே ஹிரோஷிமாவில் 12000 கிலோடன் டி.என்.டி ஒரு சேர எல்லோர் தலையிலும் வெடிக்கிறது. கண்ணை கூசும் வெளிச்சம். அதை தொடர்ந்து சூரியனை மறைத்த கறுப்பு. எங்கும் இருட்டு. வெடித்த பகுதியை சுற்றி வெப்பநிலை 7000 பாரன்ஹீட்டுக்கு உயருகிறது, மணிக்கு 980 மைல் வேகத்தில் வெடி அழுத்தம் 1 மைலுக்குள் இருக்கும் எல்லோரையும் சம்பலாக சிதறடிக்கிறது. அணு வெடிப்பு ஆல்பா,பீட்டா,காமா, நியூட்ரான் கதிரியக்கங்களை வெளியிடுகிறது.

2 மைல்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாம்பல் ஆகிறார்கள். 2 மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களின் கட்டிடம் சிதைந்து, தீ மூடிய உடலின் பாகங்களை தவிர மற்ற எல்லா பாகங்களையும் சுட்டு பொசுக்கிறது. தீ காயத்தில் தப்பியவர்களை கதிரியக்கம் உடனே கொல்கிறது. எங்குமே மரண ஓலம். வெப்பத்தை கண்டு ஊரின் நடுவில் ஓடும் ஆற்றில் குதிக்கிறார்கள். ஆறு முழுவதும் தீக்கனலாக எரிகிறது. உடம்பில் போட்டிருந்த துணி தான் தொங்குகிறது என்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. உடம்பில் தோல் பாலம் பாலமாக உரிந்து தொங்குகிறது. பாதிப்படைந்தவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

அணுகுண்டு வெடித்த 3 மணி நேரம் கழித்து மொத்தமே 6 போட்டோகளே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு போட்டோகிராபர் விளக்குகிறார். "...ஹிரோஷிமா நகரெங்கும் தீப்பிடித்து எரிகிறது. நகரின் பக்கத்தில் உள்ள டெய்சி பள்ளியிலிருந்து குழந்தைகள் தீக்காயங்களுடனும்,மற்ற பாதிப்புகளுடனும் வெளியே வருகிறார்கள். என்னுடைய கேமிரா வழியாக பார்க்கிறேன். குழந்தைகள், பெற்றோர்கள், ஆடவர்கள் யாவரும் 'என் உடம்பு எரிகிறது என் உடம்பு எரிகிறது' என கதறுகிறார்கள். நிறைய பேர் தண்ணீர் வேண்டும் தண்ணீர் வேண்டும் என இலக்கின்றி அலறுகின்றனர். எத்தனை கொடூரமான குணம் எனக்கு, இந்த கொடிய வேளையில் புகைப்படம் எடுக்கிறேனே என என் மனசாட்சி பிடுங்கி தின்கிறது. அது என் தொழில் என்று சமாதானம் அடைகிறேன். எப்படியோ திரணின்றி சட்டரை அமுக்கி முதல் படத்தை எடுத்தேன். அடுத்து கேமிராவை திருப்பிய போது தீக்காயத்தால் அலறி துடித்து கொண்டிருக்கும் குழந்தை அரைநிலையில் எரிந்த பிணத்தின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அது அந்த குழந்தையின் தாயார் தான். என்னால் கேமிராவின் வீவ் ஃபைண்டரின் வழியாக பார்க்க முடியவில்லை. கண்ணில் கண்ணீர் முட்டி வீயூவ் ஃபைண்டரை மறைக்கிறது"
இனோலா கே வெற்றிகரமாக அமெரிக்காவில் நுழைய உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. சரியாக 16 மணி நேரம் கழித்து அமெரிக்காவின் அதிபர் ட்ரூமென் அறிக்கையை வாசிக்கிறார். உலகின் முதல் அணு ஆயுதத்தை அமெரிக்கா தான் தயாரித்தது. போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நினைப்பின் ஜப்பானின் மேல் பயன்படுத்தப்பட்டது என்கிறார்.
எஞ்சிய உறுதியான கட்டிடம்

ஹிரோஷிமாவில் மட்டும்
இறப்பு/காணாமல் போனவர்கள்: 70000 - 80000
காயம் பட்டவர்கள்: 70000
மக்கள் தொகை : 35,000 per sq mile
மொத்த கேஸூவாலிட்டி ; 140,000 - 150000
சிதிலமடைந்த பரப்பு : 4.7 Sq mile
இதில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த புற்று நோய், வயிற்றுபோக்கு, முடிஉதிர்தல் என்று அடுத்தடுத்த வருடங்கள் இறந்தவர்கள் நிறைய பேர். தப்பித்தவர்களுக்கு கதிரியக்கத்தால் பிறந்தவர்கள் ஊனமான குழந்தைகளே.
திரும்ப 3 நாள் கழித்து, நாகசாகியில் அமெரிக்கா இதை விட வலிமை வாய்ந்த அணுகுண்டை போடுகிறது. அங்கும் பாதிப்பு அதிகம் என்றாலும், மலைகள் சூழ்ந்து இருந்ததால் உயிர் இழப்பு ஹிரோஷிமாவை விட குறைவு. இத்துடன் ஜப்பான் சரணைடைகிறது.
ஹிரோஷிமாவில் உயிர் பிழைத்தவர்களின் மனப்பதிவுகளை படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சில பதிவுகளுக்கு பிறகு எனக்கு அதற்கு மேல் தொடர தைரியமில்லை. எடுத்துக்காட்டாக...

சின் ஷி 3 வயது பையன். அவனுக்கு 3 சக்கர வண்டி என்றால் உயிர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட சமயத்தில் கிமிக்கோ என்ற நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அதில் இருவரும் உயிர் இழந்தார்கள். உயிர் பிழைத்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளை தோட்டத்திலே புதைத்தார்கள்.
40 வருடங்கள் கழித்து குழந்தைகளை நல்ல கல்லறையில் புதைக்க அவனது பெற்றோர்கள் புதைந்த இடத்தை தோண்ட ஆரம்பிக்கிறார்கள். பக்கவாட்டில் முதலில் துருபிடித்த பைப் வருகிறது. இழுத்துப்பார்த்ததில் அது சின் ஷின் ட்ரை சைக்கிள். அவனது தாய் மெல்ல விசும்ப தொடங்குகிறாள்.
இன்னும் தோண்டும் போது வெள்ளையாக ஏதோ தெரிகிறது. சாப் ஸ்டிக்கை வைத்து மெதுவாக மண்ணை விளக்கி பார்த்தால் சிறிய சிறிய எலும்புகள். சின் ஷியின் எழும்புகள். 40 வருடமாக பெற்றோர்கள் மனதில் புதைந்திருந்த சின் ஷி கண்ணீராக வெடித்து வெளியேறுகிறான்.
சின் ஷி.... சின் ஷி....
ஹிரோஷிமா பாதிப்புகளை சொல்லும் சிறிய வீடியோ படத்தை இங்கே டவுன்லோட் பண்ணிக் கொள்ளுங்கள். அதை நானே எடிட் செய்தது. மேலுள்ள சுட்டி வேலை செய்யவில்லையெனில் இங்கே இறக்கிக் கொள்ளவும்.
இந்த கருத்தை ஒட்டிய ஒரு திரைப்படத்தை நாளை பார்ப்போம்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நல்ல பதிவு. நான் இதைப்பற்றி pearl harbor பற்றிய திரைப்படம் பார்த்தபோதே படித்தேன். இனமும் அணுக்கதிர்களின் பாதிப்பால் திண்டாடும் மக்களை பற்றிய எண்ணம் வருகின்றது. என்ன கொடூரம். இன்னமும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னமும் அமெரிக்கா தனது புது போர்கருவிகள், விமானங்களை பரிசோதிக்க போருக்கு செல்வதும், கீழை நாடுகளில் மருந்துகளை சோதனை செய்வதும் குறையவில்லை. ஆக்கலுக்கு இன்றி அழிவிற்கு சக்தியை பயன் படுத்தும் போது அறிவியல் வளராமலேயே இருந்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது.
குறிப்பாக, ஹிரோஷிமா/ நாகசாகியில் அணுகுண்டு உபயோகப்படுத்தியிராவிட்டால், போர் வெகு காலத்துக்கு தொடர்ந்து, பாதிப்புகள் இன்னமும் பலமடங்கு அதிகரித்து இருக்கும் என்றார்.
விபரீதமான வாதம் என்றாலும் ஓரத்தில் துளியுண்டு உணமி இருப்பதும் தெரிகிரது..? !!!
ஜப்பான் சீனாவில் புரிந்த கொடுமைகளை நினைத்தால் இன்றைக்கு அமெரிக்க புரிகிற கொடுமைகள் நினைவுக்கு வருகின்றன. அணுகுண்டுகள் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் தொங்கிக்கொண்டுருக்கும் காலத்தில்தான் நாம் இருக்கிறோம்.
தன்மான சிங்கங்களாக திகழந்த ஜப்பான் ரஷ்யா உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றிருக்கும் வேளையில் தன் மானம் இடம் கொடுக்காமல் இழுத்தடித்தது. அந்த வேளையில் அமெரிக்க ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட, ரஷ்யாவும் ஜப்பானுக்கு எதிராக திரண்டு ஜப்பானின் இடங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. செய்வதறியாது தவித்த வேளையில் நாகசாகி குண்டும் இடி போல் ஜப்பான் தலையில் இறங்கியதும் சரண்டர் ஆகியது.
அணுகுண்டு போட்டது பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. போரை முடிவுக்கு கொண்டு வந்தது, அது நியாயம் என்று சொல்லும் அதே வேளையில் குண்டு போட்டு பொதுமக்களை கொன்றது 'போர் கொலை' என குற்றம் சாட்டவும் இன்னொரு சாரார் தயங்கவில்லை. குறைந்தது நகரின் மேல் குண்டு போடாமல் வேறு எதாவது வகையில் அணுகுண்டின் ஆற்றலை அமெரிக்கா காட்டியிருக்கலாம் என்கிறார்கள். நாகசாகியின் மேல் குண்டு போட்டது மிகவும் கண்டிக்கிறார்கள். ஒரு சாரார் சொன்னது ஹிரோஷிமா அணுகுண்டு யுரேனியம் கொண்டு தாயாரித்து பரிசோதனை பண்ணினார்கள். நாகாசாகியின் மீது புளுட்டோனியம் குண்டு தயாரித்து அமெரிக்கா சோதனை பண்ணியது எனவும், ஜப்பானுக்கு எங்களிடம் இன்னும் அணு ஆயுதங்கள் நிறைய இருக்கின்றன என்று அமெரிக்கா காட்டவும் குண்டு போட்டதாகவும் சொல்கிறார்கள்.
நான்கிங்கில் ஜப்பான் சீனர்களை கொன்று குவித்த எண்ணிக்கையை விட ஹிரோஷிமா நாகாசாகியில் இரையானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்ற வாதமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதை விட கொடுமை மன்காட்டன் விஞ்ஞானி குழு ஹிரோஷிமா வந்து தங்கள் கண்டுபிடிப்பின் விந்தையினை பார்த்து ஆய்வு செய்து ரிப்போர்ட் தயாரித்தார்கள் :-(
தாங்கள் எடிட் செய்த படமும் பார்த்தேன், ARR தான் இசையமப்பாளர் போல!
என்ன இருந்தாலும், அமெரிக்கர்களின் நியாயப்படுத்தும் வாதத்தை ஏற்றுக்கோள்ள முடியாது. அவர்கள் தள்ளிப்போட்டதாக சொன்னால், அது பெரிதாக வெடிப்பதற்குத்தானாக இருக்கும்.
தப்பு ஜீவா தப்பு. இனூயிட் பற்றிய பதிவு மாதிரி விசயத்தையும் அந்த சினிமாவுடன் சேர்த்து சொல்ல நினைத்திருந்தேன் பதிவு நீளமாக போய்விட்டதால் விசயத்தை மட்டும் முன்னாடி சொல்லி விட்டேன். சினிமா பின்னாடி வரும். எனக்கும் ஒரு நாள் ஒப்பேத்துன மாதிரியும் ஆச்சி.
//தாங்கள் எடிட் செய்த படமும் பார்த்தேன், ARR தான் இசையமப்பாளர் போல!//
:-))) ரொம்ப கஷ்டப்பட்டு ARR-ஐ புக் செய்தேன் இதற்காக.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
உலக சினிமா - ஒரு ஓரப்பார்வை
என்றைக்கு ப்ளாக்கில் பதிய ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து எனக்கு உலக சினிமாவை பார்க்கும் வாய்ப்பும் அதிகரித்தது. இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே நான் இருந்தாலும் உலக சினிமாவை நான் பார்ப்பது எதை நோக்கிய தேடல் அல்லது எதிர்பார்ப்பு என்பது எனக்கே தெரியவில்லை. குவார்ட்டரும், கட்டிங்கும் ஊத்தி அடித்தால் ஏற்படும் அதே போதையை மாறுபட்ட சினிமாவை பார்ப்பதிலும், அலசுவதிலும் ஏற்படுகிறது.
பதிவுகளிலே ஆங்காங்கே உலக சினிமாக்களை பற்றி வந்துக்கொண்டிருந்த போதும் ஆரம்பத்தில் உலக சினிமாவைப் பற்றிய முழு அறிமுகத்துக்கு எந்த நூலும் படிக்க கிடைக்கவில்லை. முதலில் எங்கேயாவது நூலை நுனியை பிடித்து ஏறலாம் என நன்கு அறிமுகமான குரோசோவாவில் ஆரம்பித்தேன். என்னுடைய உலக சினிமா பரப்பளவை ஜப்பானை விட்டு விரிவாக்கி ஈரானிய சினிமாவில் பயணத்தை தொடர்ந்து, அவ்வப்போது ஹாலிவுட்டில் இளைப்பாறி, பிரெஞ்சு சினிமாவை கண் குளிர பார்த்துக் கொண்டே, ருஷ்ய சினிமாவை நோக்கி பயணத்தை தொடர்கிறேன்.
குழந்தை பிறந்திருந்த போது மதுரைக்கு சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த 'உலக சினிமா' என் கவனத்தில் இருந்து கொண்டே இருந்தது. மதுரை இலக்கிய பண்ணையில் எஸ்.ராவின் உலக சினிமாவை பார்த்த போது அதன் அட்டைப்படத்தை கண்ணால் தான் அனுபவிக்க முடிந்ததே தவிர 500 ரூபாயான புத்தக விலையைப் பார்த்ததும் மூர்ச்சையாகி விட்டேன். 500 ரூபாய் கொடுத்து அந்த புத்தகத்தை வாங்குவதில் என் மனைவியை தவிர வேறு எந்த பிரச்சனையுமில்லை.ஆனால் புத்தகத்தில் உள்ள விசயங்கள் அவ்வளவாக வெளியே அலசப்படாத போது புத்தகத்தை வாங்கினால் பயனுள்ளதாக இருக்குமா? என்ற கேள்வி எனக்கு திகிலை மட்டுமே ஊட்டியது. ஏனெனில் ஒரே ஒரு புத்தகத்தை தான் மேல் ஷெல்பில் அடுக்கி வைத்திருந்தார்கள். அதை தொட்டு படித்துப் பார்க்கக் கூட பயம். மேலும் நான் உலக சினிமாவை 'அ','ஆ' என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆகையால் படித்திருந்தாலும் ஒன்றும் புரிந்திருக்காது என்பது வேறு விசயம்.
அண்மையில் சிங்கப்பூர் நூலகத்தில் உலகசினிமா புத்தகத்தை பார்த்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஏனெனில் அச்சமயம் உலக சினிமாவில் ப்ரீ-கேஜி வரை தேறியிருந்தேன். முதல் நாள் என்னுடைய நூலக அட்டையில் கடன் வாங்க இடமில்லை. தமிழ் சினிமா புத்தகம் எடுக்க யாரும் வரமாட்டார்கள் என்பதை அங்கு அழகாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகமே சாட்சியம் சொல்லும். தைரியமாக அடுத்த நாள் சென்று அந்த புத்தகத்தை எடுத்தேன்.
இந்த நட்சத்திர வாரத்தில் என்னை சினிமா பற்றி மட்டுமே பேச வைக்கும் அளவை விட மிக கனமான அறிமுக புத்தகம் எஸ்.ராவின் உலக சினிமா. எனக்கு உலக சினிமாவைப் பற்றி விரிவான பார்வையை கொடுத்தது அந்த புத்தகம் தான் என்றால் மிகையாகாது.
இனி 'உலகசினிமா' புத்தகத்தை பற்றி:
நல்ல கனமான அட்டையில் 750 பக்கத்தை உள்ளடக்கிய மிகவும் அடக்கமான புத்தகம். புக்மார்க் செய்து கொள்ள நல்ல நீளமான சிகப்பு கயிறு கொடுத்திருக்கிறார்கள். அட்டையை கவர் செய்கிற மாதிரியான கவரின் சைடில் ராமகிருஷ்ணனின் அருமை பெருமைகளை வழக்கமாக விளக்கியிருப்பார்கள். புத்தகத்தை வெளியிட்டவர்கள் 'கனவு பட்டறை'. முதல் பதிப்பு டிசம்பர் 2004.

சவுத் இண்டியன் மீல்ஸ் சாப்பிட்டால் எப்படி முதலில் நெய் ஊற்றி பருப்பு சாதம்,பிறகு வரிசையாக சாம்பார்,மோர்குழம்பு இல்லையென்றால் காரக்குழம்பு,ரசம், தயிர், பாயசம் என்ற அளவிலேயே எல்லா தலைப்புகளும் சுவைப்பட தொகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் பகுதியில் ஆரம்பக் கால சினிமா வரலாற்றைப் பற்றி அலசுகிறது. சினிமா தோன்ற உதவிய மூததையர்களான வில்லியம் ஹென்ரி ஃபாக்ஸ் டால்பர், எடிசன், லூமியர் சகோதரகளையும், அவர்கள் கண்டுபிடித்த கருவிகளையும் அலசுகிறது. பிறகு ஆரம்பகால சினிமா கண்டுபிடிப்புகளையும், ஹாலிவுட் தோன்றிய வரலாறையும் பிரெஞ்சு சினிமா வரலாறையும் விரிவாக அலசுகிறது.இரானிய, இத்தாலிய, ரஷ்ய, ஜெர்மானிய, கொரிய திரைப்படங்களின் வரலாற்றையும் மிகச் சிறிதாக அலசிவிட்டு தொடர்கிறது.
இரண்டாம் பகுதி மிக முக்கியமானது.உலகில் சிறந்த நூறு படங்களை சின்ன சின்ன அறிமுகங்களுடன் ஏராளமான படங்களுடன், இயக்குநர், வருடம்,நாடு போன்ற விசயங்களுடன் சுருக்கமாக நச்சென்று இருக்கிறது. இந்த நூறு படங்களும் தேர்வுகுழுவின் விருப்பப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த நூறு படங்களில் சொல்லப்படாத சிறந்த 100-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளேயும் வெளியேயும் இருக்கலாமென ஆசிரியர் ஒத்துக் கொள்கிறார். நான் IMDB-ல் சிறந்த 250 படங்களை தேடிய போது அதிகமான ஹாலிவுட் படங்களே சொல்லப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அது பார்வையாளர்களின் வாக்கெடுப்புபடி அடுக்கப்படுகிறது. நான் அந்த நூறுபடங்களில் சில படங்களை பார்த்த போது அவரது சாய்ஸில் தப்பில்லை என்று தான் தோன்றுகிறது.
முன்றாம் பகுதி 'உரையாடல் தொடர்கிறது' என்ற தலைப்பில் சிறந்த உலக சினிமா இயக்குநர், நடிக நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் பேட்டிகளை தமிழ்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு எஸ்.ராவின் நண்பர்கள் முரளி மனோகர்,புவனேஷ், சா தேவதாஸ்,ஜி.குப்புசாமி, ஹரன் ஆகியோர்கள் உதவியிருக்கிறார்கள். இதுவும் மிக அருமையான பகுதி. குரோசவா, தொசிரே முபுனே, ரித்விக் கடாக், சமீரா மெக்மல்பப், மர்லின் மன்றோ, மனோஜ் ஷியாமளன்,அல்பாசினோ என பல கலைஞர்களின் பேட்டிகள் 36 எண்ணம் தேரும்.
நான்காம் பகுதி 'சினிமா சில பார்வைகள்' என்ற தலைப்பில் திரைப்படங்களை ஒப்பீடுகளுடன் கொஞ்சம் ஆழமாக அலசுகிறது. எடுத்துக்காட்டாக 'சினிமாவுன் நானும்' என்று ஐசன்ஸ்டீன் சொல்லுவதையும், இவான் தி டெரிபிள் என்ற ரஷ்ய படத்துக்கு ஸ்டாலின் ஐசஸ்டீனை விசாரித்த டிரான்ஸ்கிரிப்ஷனும், 'தி கிரேட் டிக்டேட்டர்' என்ற சார்லி சாப்ளினின் முதல் பேசும் படத்தில் ஹிட்லர் வேடத்தில் இருக்கும் சாப்ளின் பேசுவதாக வரும் வசனத்தையும்,இலக்கியமும் திரைப்படங்களும் என்ற தலைப்பில் பி.கே.நாயர் பேசுவதையும் கட்டுரைகளாக ஆசிரிய தொகுத்திருக்கிறார். இது ஒரு 24 எண்ணம் தேரும்.
ஐந்தாம் பகுதி அகிரா குரோசவா, ஹிட்ச்காக், ஸ்பைக் லீ, சத்யஜித் ரே முதலான உலகில் தலை சிறந்த 50 இயக்குநர்களைப் பற்றி அருமையான அறிமுகப்பகுதியாக அமைகிறது. இயக்குநர்களின் அறிமுகத்தின் போது அவர்களின் தலைச்சிறந்த படங்களைப் பற்றிய அறிமுகமும், சின்ன கதை குறிப்புமாக சுவையாக தொகுத்திருக்கிறார்.
பகுதி ஆறும், ஏழும் இந்திய சினிமாவைப் பற்றி பேச ஒதுக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆறாம் பகுதியில் இந்தியாவின் ஆரம்பகால சினிமாவை பற்றியும், தாதா சாகிப் பால்கே, சாந்தாராம் சினிமா, சத்யஜித் ரே-தாகூர் சினிமா முதலானவற்றை அலசுகிறது.
ஏழாம் பகுதியில் சிறந்த 27 இந்திய இயக்குநர்களை பற்றிய அறிமுகப்பக்கம். அதில் மகேந்திரன், மணிரத்தினம்,பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற தமிழ் இயக்குனர்களும், எம்.டி.வாசுதேவன் நாயர், மிருணாள் சென் , நிமாய்கோஷ் போன்ற மற்ற இந்திய இயக்குனர்களைப் பற்றிய அருமையான அறிமுகம்.
எட்டாம் பகுதி திரைப்படவிழாக்கள், விருதுகள், சினிமா இதழ்கள்,100 சிறந்த சினிமாப் புத்தகங்கள் என பல தலைப்புகள் உள்ளன.
குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்டரிகளை பற்றி ஒன்பதாம் பகுதியிலும்,சினிமாவின் எதிர்காலம் பற்றி சின்ன தலைப்புகளில் பத்தாம் பகுதியிலும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.
ஹஹஹஹ....ம்ம்ம்ம்... மூச்சு விட்டுக் கொள்கிறேன்.
கண்ணில் பட்ட சில குறைகள்;
புத்தகம் அருமையாக வந்திருந்தாலும் சில குறைகள் கண்ணில் பட்டு தொலைக்கிறதே.
1.ஆங்காங்கே வார்த்தை பிழைகளை கண்டேன்.புத்தகம் தயாரித்த அவசரம் தெரிகிறது.
2.மற்ற மொழிகளில் எனக்கு அறிமுகமில்லா சமயத்தில் பிரெஞ்சு படங்களை பற்றி என் பதிவுகளில் அலசும் போது ரோசவசந்த், ரவியா ஆகியோர் விளக்கம் தந்த இயக்குநர்களின் பிரெஞ்சு பெயர்கள் புத்தகத்தில் தப்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் அந்த பெயர்கள் சீராக கையாளப்பட்டிருந்தால் பரவாயில்லை. நிறைய இடத்தில் சீரற்ற தன்மையை பார்க்கிறேன். உதாரணத்துக்கு 'தி 400 புளோஸ்' படத்துக்கு அறிமுகம் தரும் போது இயக்குநரை 'பிரான்சிஸ் த்ரூஃபா' என்று அழைத்து விட்டு, 'உலகின் தலைச்சிறந்த இயக்குநர்' என்ற தலைப்பில் அவரை 'ப்ரான்ஸ்வா த்ரூஃபோ' என்று சரியாக அழைக்கிறார்கள். தலை சிறந்த இயக்குநர்கள் பக்கத்தை தொகுத்தவர் யார் என்று பார்த்தேன்.வெ.ஸ்ரீராம் என்று இருந்தது. பெயர்களின் சீரமையை பார்க்க தவறியிருந்தார்கள்.
3.அது போக 'நாலாவது கண்'சந்திரன் ஒரு பிரச்சனையை முன் வைத்திருந்தார். அது இங்கு out of context என்றாலும் என்னை கொஞ்சம் அந்த புத்தகத்துடன் சரி பார்க்க வைத்தது. ஆம், சந்திரனின் 'ஆஸ்கார் பரிசின் கதை'யும் இடம் பெற்றிருந்தது.
மேலோட்டமான சுவை முத்துக்கள்
அந்த புத்தகத்திலிருந்து மேலோட்டமாக சில சுவையான செய்திகளை தொகுத்திருக்கிறேன்.
1. நெப்போலியனை கதாபத்திரமாகக் கொண்டு 163 திரைப்படங்கள் வந்துள்ளன.
2. காந்தியாக நடித்து புகழ்பெற்ற பென் கிங்ஸ்லியின் இரண்டு தலைமுறை முன்னோர்கள் இந்தியர்கள். அவர் அப்பாவின் பூர்வீகம் குஜராத். உண்மையான பெயர் கிருஷ்ணா மஞ்சி.
3. காந்தி படத்திற்கு முன்பே மகாத்மா காந்தியைப் பற்றி முதல் டாகுமெண்டரி எடுத்தவர் ஏ.கருப்பன் செட்டியார்.
4. சிறுவயதில் பார்த்த ஒரு குடிகாரனின் நடையை பார்த்து தான் சாப்ளின் படங்களில் அதே மாதிரி ட்ரேட் மார்க் நடையில் நடந்து புகழ் பெற்றதாக சொல்கிறார்.
உண்மையில் இந்த மாதிரி விசயங்களை உள்ளடக்கிய தகவல் சுரங்கமாக விளங்குகிறது எஸ்.ராவின் உலக சினிமா. வாசிப்பில் எல்.கே.ஜியை தாண்டாத எனக்கு யமுனா ராஜேந்திரன் போன்றோர்களின் புத்தகங்கள் எனக்கு கொஞ்சம் ஹை-கிளாஸ். என்னை போன்றோர்கள் முதல் ஹை-க்ளாஸ் வாசிப்பாளர்கள் வரை குறிப்புக்கு வைத்து போற்ற வேண்டிய புத்தகம் இந்த உலக சினிமா. உலக சினிமா குறித்த ஆய்வு கட்டுரைகளும்,சிறப்பு பார்வைகள் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட எஸ்.ரா திட்டமிட்டுள்ளார். 500 ரூபாய்க்கு வஞ்சகமில்லாத புத்தகம். அடுத்த தடவை ஊருக்கு போனால் கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கி விடுவேன். மேலும் இதை பற்றி ஆசிரியர் சொல்வதை பார்க்க இங்கே சொடுக்கவும்.
கட்டாயம் என்னுடைய இந்த பதிவு பரவலாக வசிக்கப்படாது என்பது தெரியும். உலக சினிமா ஆர்வம் உள்ள மக்கள் தமிழ்மணத்தில் நிறையவே இருக்கிறார்கள். நிறைய பேருக்கு உலக சினிமா பார்க்கும் மனோபாவ மாற்றமும் நிகழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன. அவர்களுக்கும் எனக்கும் இந்த பதிவு பயன்படட்டும். அடுத்து வரும் பகுதி என்னுடைய குறிப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன். உங்களுக்காகவும். படங்களின் பெயர்களை குறிப்பிடுவதால் சில பேருக்கு பிரச்சனையாக தோன்றலாம். இது என்னுடைய ஆர்வத்திற்காக மட்டுமே.
Self Interest
எஸ்.ரா பட்டியலிட்ட கீழ்கண்ட 100 படங்களையும் பார்த்து விடுவது என நினைத்திருக்கிறேன்.படத்தின் தமிழ்பெயர்,இயக்குநர்,ஆண்டு,நாடு,ஆங்கில பெயர் என்ற வரிசையில் உள்ளது.
தி பெர்த் ஆப் எ நேஷன்,D.W.கிரிஃபித்,1915,அமெரிக்கா,The birth of a nation
தி கேபினட் ஆப் டாக்டர் கலிகர்,ராபர்ட் வெய்னே,1919,ஜெர்மனி,The cabiner of Dr.Galigari
தி பேட்டில் ஷிப் பொடொம்கின்,செர்ஜி ஐசன்ஸ்டீன்,1925,ருஷ்யா, the battleship potemkin
எர்த்,அலெக்ஸாண்டர் டவ்சென்கோ,1930,ருஷ்யா,earth
தி மாட்ர்ன் டைம்ஸ்,சார்லி சாப்ளின்,1915,அமெரிக்கா, the modern times
நாஸ்பரதோ,F.W.முர்னூ,1922,ஜெர்மனி,Nasferatau, A symphony of terror
ஸ்டேஜ் கோச்,ஜான் ஃபோர்டு,1939,அமெரிக்கா, Stage coach
கான் வித் த விண்ட்,விக்டர் ஃப்ளமிங்,1939,அமெரிக்கா, Gone with the wind
தி ரூல்ஸ் ஆப் த கேம்,ழான் ரெனார்,1939,பிரெஞ்சு,The rules of the game
காசாபிளாங்கா,மிகேல் கர்ட்ஸ்,1942,அமெரிக்கா,casablanca
சிட்டிசன் கேன்,ஆர்சன் வெல்ஸ்,1941,அமெரிக்கா,citizen kane
ப்யூட்டி அன் த பீஸ்ட்,ழான் காக்து,1946,பிரான்ஸ்,Beauty and the beast
தி பை சைக்கிள் தீஃப்,விட்டோரியா டிசிகா,1948,இத்தாலி,The bicycle theif
ரஷோமான்,அகிரா குரோசாவா,1950,ஜப்பான், Roshomon
லா ஸ்ராடா,பெட்ரிகோ பெலினி,1954,இத்தாலி,La Strada
டோக்கியோ ஸ்டோரி,யசுஜிரோ ஒசு,1953,ஜப்பான், tokyo story
பிரத்லெஸ், ழான் லாக் கோடார்ட்,1960,பிரான்ஸ்,Breathless
உகசு மோனாகதாரி,கென்சி மிசோகுஷி,1953, ஜப்பான்,Ugestu Monogatari
பிக்பாக்கெட்,ரொபேர் பிரெஸ்ஸான்,1959, பிரான்ஸ்,pickpocket
தி 400 புளோஸ், ப்ரான்ஸ்வா த்ரூஃபோ,1959,பிரான்ஸ்,the 400 blows
மை அங்கிள்,ழாக் தாதி,1958,பிரான்ஸ்,my uncle
லாரன்ஸ் ஆப் அரேபியா,டேவிட் லீன்,1962,இங்கிலாந்து,lawrence of arabia
தி செவந்த் ஸீல்,இங்மார் பெர்க்மான்,1957,ஸ்வீடன்,the seventh seal
பதேர் பஞ்சாலி,சத்யஜித் ரே,1955,இந்தியா,pather panjali
தி வொயிட் நைட்ஸ், லூசினோ விஸ்காண்டி,1957,இத்தாலி, the white nights
மேகே தாக தாரா,ரித்விக் கடாக்,1960,இந்தியா,meghe dhaka tara
சைக்கோ,ஆல்பிரட் ஹிட்ச்காக்,1960,அமெரிக்கா,psyco
டெத் பை கேங்கிங்,நகிஷா ஒஷிமோ,1968,ஜப்பான், death by ganging
2001 ஏ ஸ்பேஸ் ஒடிசி, ஸ்டான்லி குப்ரிக்,1968,அமெரிக்கா,2001 a space odyssey
உமன் இன் சாண்ட் டியூன்ஸ்,ஹிரோஷி தேஷிகாரா,1964,ஜப்பான்,women in sand dunes
புளோ அப்,ஆண்டோனியோனி,1966,இத்தாலி,blow up
பெல் டி ஜோர்,லூயி புனுவல்,1967,பிரான்ஸ்,belle de jour
ஜீ, காஸ்டா காவ்ராஸ்,1969, பிரான்ஸ்,Z
தி கலர் ஆப் போமாகிரானட்ஸ்,செர்ஜி பரஜினேவ்,1969,ஆர்மீனியா, the color of pomegranates
அகுர்,தி ராத் ஆப் காட்,வெர்னர் ஹெர்சாக்,1972,மேற்கு ஜெர்மனி, Aguirre, The wrath of god
தி காட் பாதர்,பிரான்சிஸ் போர்டு கப்பலோ,1972,அமெரிக்கா, The god father
சைனா டவுண்,ரோமன் பொலான்ஸ்கி,1974,அமெரிக்கா, china town
மே பூல்ஸ்,லூயி மால், 1990, பிரான்ஸ், may fools
ஆனி ஹால்,வூடி ஆலன்,1977,அமெரிக்கா, Annie hall
தி மேரஜ் ஆப் மரியா பிரான்,ரெய்னர் வெர்னர்,ஃபாஸ்பைண்டர், மேற்கு ஜெர்மனி,The marriage of Maria Braun
ரேகிங் புல்,மார்டின் ஸ்கார்ஸஸி,1980,அமெரிக்கா, Raging Bull
காந்தி,ரிச்சர்ட் அட்டன்பெரோ,1982,பிரிட்டன்,Gandhi
தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama
அமேதியாஸ்,மிலாஸ் போர்மென்,1984,அமெரிக்கா,Amadeus
இ.டி,ஸ்டீவன் ஸ்பில்பெர்க்,1982,அமெரிக்கா,E.T
தி விங்க்ஸ் ஆப் டிசையர்,விம் வெண்டர்ஸ்,1987,மேற்கு ஜெர்மனி, The wings of desire
சினிமா பாரடிஷோ,குசாபே டொர்னாடோ,1998,இத்தாலி, cinema paradiso
லேண்ட்ஸ்கேப் இன் த மிஸ்ட்,அஞ்சலோ தியோபெலஸ்,1988,கிரீஸ்,landscape in the mist
எ சிட்டி ஆஃப் சேட்னஸ்,ஓசியோ ஹெசின் ஹௌ,1989,தைவான், a city of sadness
ரைஸ் தி ரெட் லேர்ண்டன்,ஜாங் இமு,1991,சைனா,raise the red lentern
தி ஆக்ட்ரஸ்,ஸ்டேன்லி க்வான்,1992,ஹாங்காங், the actress
தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano
தி ஆப்பிள்,சமீரா மெக்மல்பஃப்,1998,ஈரான்,the apple
தி லாஸ்ட் எம்பிரர்,பெர்னார்டோ பெர்டோலுசி,1982, அமெரிக்கா, the lost emperor
தி சைக்கிளிஸ்ட்,மொசான் மெக்மல்பப்,1989, ஈரான், the cyclist
ஹிரோஷிமா மை லவ், அலென் ரெனெ,1959,பிரான்ஸ், hiroshima my love
மதர் அண்ட் சன்,அலெக்ஸாண்டர் சுக்ரோவ்,1997,ரஷ்யா,mother and son
சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac
டைடானிக்,ஜேம்ஸ் கேமரூன்,1997,அமெரிக்கா,titanic
எமிலி,ஜீன் பியாரே ஜெனட்,2001,பிரான்ஸ், Amelie
ரன் லோலா ரன்,டாம் டைக்கர்,1998,ஜெர்மனி, run lola run
இன் த மூட் ஆப் லவ்,அங் ஹர் வி, 2000, ஹாங்காங்,in the mood of love
இல் பொஸ்டினோ,மிக்கேவ் கர்ட்ஸ்,1994,இத்தாலி,La postino
தி செண்ட் ஆப் கிரீன் பபாயா,ட்ரான் ஆன் ஹங்,1993, வியட்நாம், The scent of green papaya
லை இஸ் ப்யூட்டிபுல்,ராபர்ட்டோ பெனிகனி,1997,இத்தாலி. Life is beautiful
தி சன்'ஸ் ரூம்,நானி மொராட்டி,2001,இத்தாலி, the son's room
மெபிஸ்டோ,இஸ்வான் சாபோ,1981,ஹங்கேரி,mephisto
ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov
பிளேட் ரன்னர்,ரிட்லி ஸ்காட்,1982,அமெரிக்கா,Blade runner
தி பில்லோபுக்,பீட்டர் க்ரீன்வே,1996,அமெரிக்கா,The pillowbook
யெல்லோ எர்த்,ஜான் கெய்ஸி,1984,சைனா, Yellow earth
ஆல் அபவுட் மை மதர்,பெட்ரோ அல்மோடோவர்,1999,ப்ரான்ஸ்,all about my mother
வெஸ்ட் சைடு ஸ்டோரி,ஜெரோம் ராபின்ஸ்&ராபர் ஒய்ஸ்,1961,அமெரிக்கா,west side story
தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields
பெயிண்டட் பயர்,இம்-குவான் பீக்,2002,கொரியா,painted
புளூ,கீஸ்லோவ்ஸ்கி,1993,போலந்து,blue
டென் கமாண்ட்மெண்ட்ஸ்,சிசில் பி டிமிலி,1956,அமெரிக்கா,ten commandments
பல்ப் ஃபிக்ஷன்,குவாண்டின் டொரண்டினோ,1994,அமெரிக்கா,pulp fiction
தி காஸ்பல் அக்கார்டிங் டூ செயிண்ட் மாத்யூ,பாலோ, பசோலினி,1964,இத்தாலி,The gospel according to saint matthew
சிங்கிங் இன் த ரெயின்,ஜீன் கெலி ஸ்டான்லி டாமென்,1951,அமெரிக்கா, singing in the rain
போனி ஆண்டு கிளைட்,ஆர்தர் பென்,1967,அமெரிக்கா,bonnie and clyde
கிங்-காங்,மெரின் கூப்பர்,1933,அமெரிக்கா,king-kong
மால்கம் எக்ஸ்,ஸ்பைக் லீ,1992, அமெரிக்கா,Malcom X
ஆசஸ் அண்ட் டைமண்ட்ஸ்,ஆந்த்ரே வாஜ்தா,1958,போலந்து,Ashes and diamonds
தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc
மெமரீஸ் ஆப் அண்டர் டெவலப்மெண்ட்,தாமஸ் கிதாரெஸ் அலியா,1968, கியூபா,Memories of under development
நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land
தி பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்,கிளோ பொண்டோகர்வா,1965,பிரான்ஸ்,The battle of algiers
ஆன் த வாட்டர் பிரண்ட்,எலியா கசன்,1954,அமெரிக்கா,On the waterfront
சன்செட் பொலிவார்ட்,பில்லி ஒயில்டர்,1950,அமெரிக்கா, sunset boulivard
டாங்கோ,கார்லோஸ் சுரா,2000,ஸ்பெயின்,tango
தி விசார்ட் ஆப் ஓஸ்,விக்டர் ப்ளெமிங்,1939,அமெரிக்கா,the wizard of oz
பென் ஹர்,வில்லியம் வைலர்,1959,அமெரிக்கா,Benhur
ஃபெண்டாசியா,பென் ஷார்ப்கீன்,1940,அமெரிக்கா,Fantasia
மெட்ரோ பாலிஸ்,பிரிட்ஜ் லாங்,1927,ஜெர்மனி,metropolis
தி சில்ரன் ஆப் ஹெவன்,மஜித் மஜிதி,1997,ஈரான், the children of heaven
சிட்டி ஆப் காட்,பெர்னாண்டோ மெய்ரிவியஸ்,2002,பிரேசில், city of god
ஸ்டார் வார்ஸ்,ஜார்ஜ் லூகாஸ்,1977,அமெரிக்கா, Star wars
குளோசப்,அபாஸ் கிராஸ்தமி,1990,ஈரான், close-up
ஸ்பிரிட்டட் அவே,ஹயகோ மியாசகி,2001,ஜப்பான், spirited away
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அவர் காந்தியாக நடிக்க வந்தபோது, அவர் இந்தியர் இல்லை என்று சொல்லப்பட, தன் குஜராத்திப்பாரம்பரியத்தைச் (மறுபுறம் ஆங்கிலப்பாரம்பரியம்) சுட்டிக்காட்டியதை Inside the Actors Studio இலே சொல்லியிருந்தார். ஆனால், அவர் பெயர் கிருஷ்ணா மஞ்சியா, கிருஷ்ணா பஞ்சியா? ;-)
ஏ.கே.செட்டியாரின் விவரணம் தொலைந்துபோய்விட்டாலும், அது குறித்த சிறுநூலொன்று அண்மையிலே தமிழிலே வெளிவந்திருக்கின்றது.
வணக்கம். எனக்கு நட்சத்திர வாரம் மே இறுதியில், இதே புத்தகத்தை வைத்து
நான் எழத நினைத்தை அப்படியே எழதி உள்ளீர்கள், பாராட்டுக்கள். நீங்கள் உலக சினிமா
பிரியர் என்றால் அவசியம் எஸ்,ரா புத்தகத்தை வாங்க வேண்டும். இது தமிழில் மாபெரும்
முயற்சி. கனவு பட்டறையை மனதாரப் பாராட்ட வேண்டும்.
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
//தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama//
அட கடவுளே, நாராயாமா போட்ட ஓட்டு என்ற ரீதியில் ஆகிவிட்டது இங்கே; அதன் சரியான பெயர் Ballad of Narayama (ஷோஹீ இமாமுரா - இயக்குனர்)
//தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano//
இயக்குனர் பெயர் ஜேன் காம்ப்பியன் (Jane Campion) - பெண்.
//சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac//
அது Cyrano de Bergerac.
//ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov//
அது Andrei Rubelev - இதைப்பற்றி நான் விரைவில் எழுதுவேன்.
//தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields//
இயக்குனர் பெயர் ரோலண்ட் ஜாஃப் - Roland Joffe.
//தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc//
The Passion of Joan of Arc - Carl Dryer
//நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land//
அது போஸ்னியப் படம்.
எண்ணிப் பார்த்தால் 42 படங்கள் பார்த்திருக்கிறேன்... Blade Runner, Titanic, The marriage of Maria Braun போன்றவற்றையெல்லாம் இங்கே எதிர்பார்க்கவில்லை (இருக்கக்கூடாது எனவில்லை... எஸ்.ராமகிருஷ்ணனே சொல்லியிருப்பது போலத்தான் - அவரவர் பட்டியல் வேறுபடத்தான் செய்யும்). ஃபாஸ்பைண்டரின் The marriage of Maria Braun, போர்ப் பின்னணி, கணவனின் தியாகம், கணவன் மொத்த ஜெர்மனிக்குமான குறியீடு என்பதுபோன்ற அர்த்தங்கற்பிப்புக்கள் தாண்டிப் பார்த்தால், வெகு சாதாரணமான melodramaவாகப் பட்டது. என்னளவில், ஃபாஸ்பைண்டரின் Despair மிகவும் பிடித்திருந்தது. வெகுவாக அதிமதிப்பீடு செய்யப்பட்ட இயக்குனர்களில் ஃபாஸ்பைண்டரும் ஒருவர் என்பது என் அபிப்ராயம். Blade runner - simply overhyped crap. Zhang Yimouவின் Raise the red lantern பார்க்கவில்லை, ஆனால் இதே இயக்குனர்தான் சமீபத்தில் Hero என்று அமெரிக்காவின் இதயங்களைக் கொள்ளைகொண்ட ஒரு சீன ஆக்-ஷன் படம் எடுத்தார். நல்ல படம்தான் அது கூட. ழாக் தாத்தி (Jacques Tati) கிட்டத்தட்ட குழந்தைகளுக்கான ஒரு கோமாளி போல - அவரது படங்கள் ஒன்றோ இரண்டோ இங்கே நூலகத்தில் திரையிட்டபோது பார்த்ததுண்டு. Nosferatu இன்னுமொரு சுவாரஸ்யமான, விரும்பத்தக்க தேர்வு. மேற்கொண்டு இங்கே அதுகுறித்துச் சொல்வதை விடுத்து, இந்த அவசரச் சுட்டியைப் பார்க்கலாம்.
அடுத்தமுறை இந்தியா போகும்போது கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும். புத்தகம் குறித்த தகவல்களை விபரமாகப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி விஜய். இங்கே வந்தபிறகுதான் டாவ்ஜெங்கோவின் Earth பார்த்தேன். அற்புதமான படம் - அதன் திரைக்கதை, புத்தகமாகவும் வந்திருக்கிறது. துறை சார்ந்த இதுமாதிரி தகவற்புத்தகங்கள் தமிழில் வருவது வெகுவாக வரவேற்கப்படக்கூடிய ஒன்று. தமிழ் சினிமா ரசனை தன்னை விரித்துக்கொண்டால் நன்றாயிருக்கும்.
நல்ல பதிவு!
சிறந்த 100 படங்கள் லிஸ்ட்லே ( இது சிறந்த படங்கள் வரிசையிலே எஸ்.ரா எழுதுனது
தெரியாமலேயே) நிறையப் படங்கள் பார்த்திருக்கேனே!
எப்படியாவது நான் ஒரு எஸ்.ரா புத்தகத்தையாவது படிக்கணும்!
என்றும் அன்புடன்,
துளசி.
இப்படி ஒருவரின் உருவ அமைப்பை விமர்சிப்பது அவ்வளவு நாகரீகமாக இல்லை விஜய் சார்.
//ஏ.கே.செட்டியாரின் விவரணம் தொலைந்துபோய்விட்டாலும், அது குறித்த சிறுநூலொன்று அண்மையிலே தமிழிலே வெளிவந்திருக்கின்றது. //
அந்த புத்தக்த்திலும் இந்த டாகுமெண்டரியை பற்றி விரிவாகவே எஸ்.ரா சொல்லியிருக்கிறார். ஒரு வேளை நீங்கள் சொல்லும் புத்தக்த்திலிருந்து தொகுக்கப்பட்டிருக்குமோ? அதையும் பார்க்க வேண்டும்.
மாண்டி,
என்னுடைய தட்டச்சிலும் இருக்கலாம், புத்தகத்திலும் இருக்கலாம். மாலையில் புத்தகத்தை சரி பார்த்து சொல்கிறேனே :-)
//நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land//
அது போஸ்னியப் படம்.//
இதை என்னால் அடித்து சொல்ல முடியும். எனென்றால் தட்டச்சும் போது எனக்கு சந்தேகம் இருந்தது. இருமுறை பார்த்து தான் தட்டச்சினேன். புத்தகத்தில் சுலோவேனியா என்று தான் இருக்கிறது.
அனானிமஸ்,
//இப்படி ஒருவரின் உருவ அமைப்பை விமர்சிப்பது அவ்வளவு நாகரீகமாக இல்லை விஜய் சார்//
அய்யய்யோ, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே. சில எழுத்தாளர்களின் எழுத்து புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்க வைக்கும். சில சமயம் எழுத்தாளர்களின் எழுத்தால் அவர்களின் மற்ற புத்தகத்தை படிக்கும் போது அயர்ச்சி ஏற்பட்டால் அவர்கள் புகைப்படம் பார்க்கும் போது படிக்கும் உத்வேகம் கொடுக்கும். எஸ்.ராவின் எழுத்து ரொம்ப பிடிக்கும். அவரை காணும் போதெல்லாம் துணையெழுத்தும், உபபாண்டமும் தான் கண்ணில் வந்து நிற்கும். ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிப்பேன். தவறாக அந்த வரி வழிகாட்டுவதை பார்த்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. வரிகளை மாத்தியிருக்கிறேன். சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த வரியை தூக்கிவிடலாம்.
நன்றி ஈழநாதன்,துளசியக்கா,அனானிமஸ்,பெயரிலி, மாண்டீ.
நான் முடிந்தால் அந்தப்புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன்.
ஏ.கே. செட்டியார் எழுதிய புத்தகம் 'அண்ணலின் அடிச்சுவட்டில்' என்று வந்திருக்கிறது. படித்தேன். செட்டியாரின் மகத்தான உழைப்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர் உலகெங்கும் அலைந்து திரிந்து காந்தியைப்பற்றி எடுக்கப்பட்டிருந்த படத்துண்டுகளை எல்லாம் சேகரித்து அந்த டாகுமெண்டரியைச் செய்திருப்பார். சிறிது காலம் காந்தியின் ஆசிரமத்திலும் தங்கி படமாக்கியிருப்பார்.
புத்தகத்தைப் படிக்கும்போது அவரது உழைப்பு, முயற்சி இவை குறித்து பாராட்டமுடியுமென்றாலும், சுயமரியாதை கட்சிகளை எதிர்க்கவிரும்பிய, அதே சமயத்தில் அதன் பேரெழுச்சியை நேரடியாக எதிர்க்கமுடியாத ஒருவரின் 'காந்தியை கடவுளாக்கும்' அற்புத முயற்சியைப் பற்றியது அது என்றே நான் புரிந்துகொண்டேன். சென்னையில் பால்க்காரர்கள் செய்யும் கலப்படம் வரை கால மாற்றத்தை பதிவு செய்த செட்டியார் தமிழ் நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த சமூக, அரசியல் மாற்றத்திற்கு தமது கண்களை இறுக மூடிக்கொண்டார். அவரது அத்தனை எதிப்புணர்வும் நாடு நாடாக ஓடி காந்தி படம் சேகரிக்கவும் அவரை ஒரு கடவுள் நிலைக்கு கற்பிப்பதையும் செய்யத்தூண்டியது. காந்தியின் ஆணையின் பேரில் பெரியார் நடத்திய கள்ளுக்கடைப் போராட்டத்தைப் பற்றியோ, வைக்கம் ஆலய நுழைவுப்போராட்டத்தில் பெரியார்-காந்தியின் இடங்களைப் பற்றியோ ஒரு தகவலை, கருத்தை, தனது காந்தி படத்தில் காட்டக்கூட அவரால் முடியாத அளவுக்கு அவருக்கு பெரியாரின் மேலான வெறுப்பு ஓங்கி இருந்ததாகவே நான் புரிந்துகொண்டேன். அதற்கான மனநிலை பற்றிய குறிப்புகளை அந்தப் புத்தகத்தில் இருந்தே பெறலாம்.
அந்தப்புத்தகம் சினிமா, அரசியல் போன்ற காரணங்களுக்காக வாசிக்கப்படவேண்டும் என்றே சொல்வேன்.
IMDB இலே தேடினேன்; தயாரிப்பு நாடுகள்: Bosnia-Herzegovina / Slovenia / Italy / France / UK / Belgium என வருகின்றது.
தங்கமணி ஏ. கே. செட்டியாரின் நூல் பற்றிய விபரத்தைத் தந்திருக்கின்றார்.
ஆனால், கொஞ்சம் விவரமாக நோக்கினால், ஐஎம்டிபி தமிழில் வந்தால் போலிருக்கிறது. எஸ்.ரா சொல்லியது போல அவரவர் தேர்வுகள் வேறாக இருக்கலாம். ஆனால், ஈரானிய இந்நாளைய இயக்குநர்களைப் பற்றி பேசும்போது அதே அளவில் ஐரோப்பிய இயக்குநர்களையும் (மைக்கேல் விண்டர் பாட்டம் ) அமெரிக்க இயக்குநர்களையும் (டிம் பர்டன், ஸ்டீபன் சோடன்பர்க் ) சேர்க்கவில்லை. இந்தியாவில் மாற்று சினிமா என்று பேசும் போது அதன் வரையறைக்குள் வரும் நிறைய நபர்களின் பேர்களாவது தந்திருக்கலாம். "கொரில்லா சினிமா" என்றழைக்கப்படும், மைக்கேல் மூர் மாதிரியான ஆட்கள் செய்யும் படங்களைப் பற்றிய குறிப்புகளும் குறைவு. இங்கே தமிழகத்தில் அதற்கு ஈடாக "ஒரு நதியின் மரணம்" என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் பொலீஸ் அடக்குமுறையினால் உயிரிழந்தவர்களை பற்றிய ஒரு குறும்படம் தந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தியேட்டர்களும், மாற்று சினிமாவும் பூத்து குலுங்கும் நேரமிது. மும்பாயில் மட்டும், நான் பார்த்த அளவில் குறைந்தது 15-20 படங்கள் தேரும். இவற்றையெல்லாம் விரிவாக எழுதாவிட்டாலும், கோடிட்டு காட்டாமல் போயிருப்பது மனதினை நெருடுகிறது.
இது தாண்டி, ஸ்டுடியோக்கள் தவிர்த்து உலகெங்கும் விவரணப்படங்களையும், ஆவணப்படங்களையும் மட்டுமே தரும் பிபிசி பிலிம்ஸ், டாக்குயரமா, பிலிம் நெட்வொர்க், என்.ஜி.சி பிலிம்ஸ் பற்றிய விவரங்கள் என் கண்ணில் படவில்லை. இவையனைத்தும் ஒரு திரைப்பட வரிசையில் மிக முக்கியம். இதுதாண்டி, எனக்கு புத்தகத்தில் கடுப்படித்தது திருப்பி, திருப்பி, எல்லா புத்தகங்களிலும், அலசி, ஆராய்ந்து காயப்போட்ட சத்யஜித்ரே புராணம், சியாம் பெனகல் புராணம், ஸ்பீல்பெர்க் புராணம். இவை சினிமாவைப் பற்றி பேசும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியும். உலக சினிமாவினைப் பற்றி அறிந்துக் கொள்ள முயல்பவர்களுக்கு, இவர்களைப் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். தமிழ் இயக்குநர்கள் என்று வரும்போது அந்நியாயமான இருட்டடிப்பு நடந்திருக்கிறது. பாரதிராஜா பற்றி பேசும் போது அலைகள் ஒய்வதில்லை, முதல் மரியாதை போன்ற படங்கள் இல்லை. ஜுலி கணபதி, வண்ண வண்ண பூக்கள் எழுதும் எஸ்.ரா, "மறுபடியும்" எப்படி பாலுமகேந்திரா படமென்று மறந்தார் என்று தெரியவில்லை. இதுதாண்டி, இந்நாளைய இந்திய இயக்குநர்கள் பற்றீ பேச்சு வரும் போது, சந்தோஷ் சிவனின் "டெரரிஸ்ட்", அஸ்தோஷ் கொளரிகரின் "லகான்" போன்றவற்றை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை. இது தவிர தற்போதைய இந்திய இயக்குநர்களைப் பற்றிய செய்திகளொன்றும் காணோம்.
மொத்தத்தில் இது ஒரு நல்ல புத்தகம், முதலில் உள்ளே வருபவர்களுக்கு மட்டுமே. கொஞ்சம் உலக சினிமாக்கள், இணைய தளங்கள் என்று பார்த்து விட்டீர்களேயானால் அப்புறம் இந்த புத்தகம் ஒரு ரெப்ரென்ஸ் கைடு மாதிரி ஆகிவிடும். நான் இங்கு சொன்ன கருத்துக்களை எஸ்.ராவிற்கும் அனுப்பியிருக்கிறேன். நான் சொன்னதில் ஏதேனும் தவறிருந்தால், மன்னிப்பினை இப்போதே கேட்டுவிடுகிறேன்.
நரேன், சந்தோஷ் சிவனின் ரெரரிஸ்ட்டைவிட, மல்லி நல்ல படமென்று கேள்விப்பட்டிருக்கின்றேன். சந்தோஷ் சிவனின் படங்கள் வெளிநாட்டு விழாக்களின் விருதுகளை இலக்காக கொண்டு இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அவரது படங்கள் குறித்த கட்டுரையொன்றில் வாசித்ததாய் நினைவு. ரெரரிஸ்ட் படத்தின் அபத்தத்தை நீங்கள் In the name of buddha பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். அப்படியான இன்னொரு அபத்தம், 'உயிரே'.
//நான் இங்கு சொன்ன கருத்துக்களை எஸ்.ராவிற்கும் அனுப்பியிருக்கிறேன். நான் சொன்னதில் ஏதேனும் தவறிருந்தால், மன்னிப்பினை இப்போதே கேட்டுவிடுகிறேன். //
இதில் எதுவும் தவறு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. உலகசினிமாவின் ஆரம்ப பார்வையாளன் என்ற விளிம்பினில் நின்று தான் இந்த பதிவை எழுதினேன். நீங்கள் சொன்ன இந்திய சினிமா பற்றிய சில கருத்துக்களை எண்ணிப் பார்க்க தவறவில்லை. 500 ரூபாய்க்கு இது போதுமென்று நினைத்தாரோ? இல்லை புத்தக கண்காட்சி வெளியீடுக்கு அவசரப்பட்டாரோ தெரியவில்லை. இந்திய சினிமாக்களை பற்றியே இதே தடிமனில் இன்னொரு புத்தகத்தை போடலாம். உலக சினிமா என்றதால் இந்திய அல்லாத உலக சினிமாக்களுக்கு அதிகம் கவனம் செலுத்தியிருப்பதாக தோன்றுகிறது. அதுவுமில்லாமல் இந்த மாதிரி சினிமாவை பற்றி ஓரளவு எல்லாவற்றையும் ஒருங்கே தொகுத்து வந்திருப்பது எனக்கு தெரிந்த வரையில் இது தான் முதல் புத்தகம் என நினைக்கிறேன் (சரியா??).
மாற்று சினிமாவை பார்க்க எண்ணி திக்கு தெரியாமல் அலைந்துக் கொண்டிருந்த எனக்கு இது ஒரு நல்ல ரெப்பரண்ஸ் என்றே நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, எம்.எஸ்.ஆபிஸ் படிக்க வேண்டுமானல் முதலில் 'MS OFFICE FOR DUMMIES' என்ற புத்தகத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு வேளை அதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டால் டம்மிஸ் புத்தகம் கொஞ்சம் அபச்சாரமாகத் தான் தெரியும். அது போல் பிற்காலத்தில் இந்த புத்தகம் எனக்கு தோன்றலாமென நினைக்கிறேன்.
இப்போதைக்கு இந்த புத்தகம் நல்ல கைடு.ஒரு வேளை இரண்டாவது புத்தகத்தில் நல்ல மேட்டர்கள் வரலாமென நினைக்கிறேன். பார்க்கலாம்.
இதுதாண்டி, என் மீது, பாசமும், மதிப்பும் வைத்திருக்கும், இணைய மகா ஜனங்களுக்கு. எனக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்று தோன்றினால் (நீ கொட்ற் குப்பைக்கு பரிசு கேக்குதா பரிசு, போடாங்...) என்னுடைய இப்போதைய தேவை, இதுதான் - டாக்யுரமா வெளியிட்டிருக்கும்
12 DVD கலெக்ஷன் வாங்கி பத்திரமாக FedEx-இல் அனுப்பி வையுங்கள். நான் சுயசரிதை எழுதும்போது 3 பக்கங்கள் அனுப்பி வைப்பவர்களுக்கு :)
அந்த தொகுப்பை ஈஸியாக பிடித்துவிடலாமென நினைக்கிறேன். சிங்கப்பூரில் தேடிப்பார்க்கிறேன்.(எனக்கு 3 பக்கம் ???? :-)).
அதுபோக உதிரியாக லைப்ரரியில் பார்த்தது எடுக்காமல் விட்டது...
Best Boy – 1979
Murder on a Sunday Morning - 2001
Murder on a Sunday Morning கையில் எடுத்து அதை விட தெரிந்த படமொன்று கையில் கிடைத்ததால் விட்டு விட்டேன். தேடி எடுத்து பார்த்து விடுகிறேன் முதலில்.
பி.கு: நுயு புக் லாண்ட் சீனிவாசன் (மோர் தருவாரே..)என் தலையில் எப்படியோ கட்டப் பார்த்தார். எடை காரணமாக நான் மசியவில்லை.
:)
மணிக்கூண்டு,
//எனக்கு நட்சத்திர வாரம் மே இறுதியில், இதே புத்தகத்தை வைத்து
நான் எழத நினைத்தை அப்படியே எழதி உள்ளீர்கள்//
இதெல்லாம் பதிவு வாழ்க்கையில சகஜமப்பா... நன்றி.
நல்ல தகவலை கொடுத்த தங்கமணிக்கு நன்றி.
ரவியா! பிலிம் நியூஸ் ஆனந்தம் புத்தகம் வாங்கிட்டீங்களா? நானும் படிக்கனும்னு வச்சிருக்கேன். பார்க்கலாம்.
நல்ல விரிவான பதிவு. தேடித்தேடி பார்த்தேன். எனக்கு பிடித்த சில படங்களைப் பற்றிய அறிவிப்பே இல்லை.
1.untouchable-ஷான் சொனரி, கெவின் ஸ்டேசி நடித்த மதுவிலக்கின் விளைவுகள், அதன் மூலம் வரும் கடத்தல் பற்றிய மிக நல்ல படம்.ஷான் ஜேம்ஸ்பாண்டாக அல்லாமல், பெண்களின் அருகாமையின்றி நடித்திருப்பார். அருமையான நடிப்பு.
2. scent of a woman - அல்பசீனோ நடித்து வந்த ஒரு போர்வீரனின் மனநிலை பற்றியத்
3. படத்தின் பெயர் நினைவில் இல்லை- பாலியல் தொழிலாளிகள் தங்கள் நிலை குறித்து மற்ற பெண்களோடு தங்களை ஒப்பிட்டு நீதிமன்றத்தில் வாதிடுவது போன்றது.
4. traffic- போதை பொருள், பெண்கள் கடத்தல்கள் பற்றியது
ஒருவேளை இவை பாகம் 2 வருமாயிருக்கும். இதி எழுதுவதன் நோக்கம், பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற எண்ணம்தான்.
ஒருவேளை இவை பாகம் 2 வருமாயிருக்கும். இதி எழுதுவதன் நோக்கம், பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற எண்ணம்தான்./
இதுவும் USA அலைவரிசையிலே வந்த Traffic தொடரும் (இதை நான் பார்க்கவில்லை) உம் கிட்டத்தட்ட அலைவரிசை-4 இன் Traffik தொடரின் இன் பாதிப்பினைக் கொண்டவையாகவே எனக்குப் படுகிறன. மூல Traffik மனித உணர்வுகளின் நுட்பங்களைக் கவனத்திலே கொண்டு - இருக்கையின் நுனியிலே இருத்தலையும் நகம் கடித்தலையும் மட்டும் நோக்காகக் கொள்ளாமல்- அவற்றினையும் வெளிக்காட்டும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது.
இது தாண்டி, பத்மா, நீங்கள் அன்டச்சபிள் பிடிக்குமென்றால், நீங்கள் பார்க்க நான் சிபாரிசு செய்யும் இன்னொரு படம் பிலடெல்பியா (1993) டாம் ஹாங்ஸ், டென்சில் வாஷிங்டன் நடித்த படம். எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட ஒரு வக்கீலை அவனுடைய லா பெர்ம் வேலை நீக்கம் செய்து விடுவார்கள். அவனுடைய வழக்கினை எந்த லா பெர்ம்ங்களும் எடுத்துக் கொள்ளாது. ஒரு சின்ன வக்கீலைப் பிடித்து அவன் அவனுடைய நியாயத்தினை நிறுவதற்காக போராடும் படம் தான் இது. இது பிலடெல்பியாவில் நடந்த உண்மை சம்பவம் என்று சொல்லப்பட்டது. சரியாக தெரியவில்லை. அருமையான டிராமா இது. படத்தின் பின்பாதியில் நடக்கும் கோர்ட் நிலவரங்கள் அற்புதமாக இருக்கும்.
அந்த வருடம் (2000) சிறந்த நடிகைக்கான தேர்வில், அமெரிக்காவின் 'கண்மணி' என்ற ஒரே காரணத்துக்காக சாதாரணப் பாத்திரநடிப்பொன்றுக்கு பரிசைக் கொடுத்து, Requiem for a Dreamன் Ellen Burstynக்குக் கொடுக்காமல் விட்டார்கள் என்பதற்காகவே ஆஸ்கர் குழுவினரைத் தலைகீழாகத் தொங்கவி்ட்டு அடிக்கலாம்.
பத்து நிமிடங்கள் புத்தகத்தைப் புரட்டியதில், எனக்கும் நாராயணின் எண்ணங்களே மனதி வந்து போனது. 'வெயிலைக் கொண்டு வாருங்கள்'/துணையெழுத்து போன்றவற்றை கொடுத்தவரிடமிருந்து உணர்வுரீதியான பதிவுகளை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது புக் ஆஃப் லிஸ்ட்ஸ் மாதிரி காட்சியளித்தது. இந்தப் புத்தகத்தை அமெரிக்கா வருவதற்கு முன் பார்த்திருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ;-)
>> traffic- போதை பொருள், பெண்கள் கடத்தல்கள் பற்றியது
ஒருவேளை இவை பாகம் 2 வருமாயிருக்கும்.---
இதன் விரிவான இரண்டாவது பாக அலசல்கள், தொலைக்காட்சி தொடராக, யு.எஸ்.ஏ சானலில் வந்திருக்கிறது. அறிவியல் புனைகதை மாதிரி 'நிஜம் நிறைய கலந்த' அரசியல் ஆய்வுக்கதை என்று (பெயரிலி கருதுவதைப் போல்) சொல்லலாம்.
>>The Traning Dayயிற்கு விருது கொடுத்ததை வைத்தே யாரின் கையில் ஒஸ்கார் விருதுகள் இருக்கின்றன என்பது புரியும்
டென்ஸல் எல்லாப் படங்களையும் போலவே இதிலும் கலக்கியிருந்தாலும், ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்றால் இப்படித்தான் என்னும் பிம்பத்தை சார்ந்து வந்த படத்திற்கே கௌரவித்திருக்கிறார்கள்!!!
டென்சில் வாஷிங்டன் என்றால் என் நினைவில் நிற்கும் படம் மால்கம் X. 1992 ஆம் ஆண்டில் சிறந்த நடிகர் அக்டாமிக் விருது வாங்கினார் அந்த படத்தில். கறுப்பர்களின் வழிக்காட்டியான மால்கம் X -ன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பைக் லீ பொறி பறக்க எடுத்திருப்பார். மிக மிக அருமையான படம்.
//// எரின் ப்ரோக்கவிச் (ஜூலியா ராபர்ட்ஸ்)//
மாண்டீக்கு இருக்கும் அதே கேள்வி தான் எனக்கும். வழக்கமான அதே அலப்பரை நடிப்பு தான் அங்கேயும்.
பிலடெல்பியா, ஆக எனக்கு பிடித்த டாம் ஹாங்ஸ் நடித்தது. அந்த கோர்ட் காட்சிகளில் கலக்கியிருப்பார்கள். டாம் ஹாங்ஸ் என்றவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வரும் இன்னொரு படம் 'க்ரீன் மைல்ஸ்'
ஏதோ தோணும்போது எழுதுறேன்... என்று சொன்னாலும் நிறைய உழைப்பு தெரிகிறது - குறிப்பாக இந்த நட்சத்திர வாரத்தில். ஆனால், இதெல்லாம் இந்த ஒருவார/மாத தேடலில் அல்ல என்று தெரியும். அதனால் உங்கள் ஆர்வம் கண்டு வியந்து - வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்(வழக்கம்போல) தொடர்ந்து கலக்குங்க...
இதுவரை நீங்கள், நாராயணன் போன்றவர்கள் அவ்வப்போது உலகத்திரைப்படம் என்று என்னுடைய வயித்தக்கலக்கிக் கொண்டிருப்பீர்கள். உங்கள் நட்சத்திரவாரம் வந்தாலும் வந்தது - வயிற்றோட்டம் நிற்கவில்லை:)
அடப்பாவிங்களா... அப்போ நான் 30 வருடமா பார்த்ததில் ஒன்றுகூட நல்ல/உலகத் திரைப்பட வரிசையில் வராதா என்று மனதுள் புலம்பிக்கொண்டிருந்தேன்.
ஆனால் உங்களின்:
இந்திய சினிமாக்களை பற்றியே இதே தடிமனில் இன்னொரு புத்தகத்தை போடலாம்.
என்று படித்தபிறகுதான்... ஓஹோ எஸ்.ரா போலவே நீங்களும் இந்திய சினிமா அல்லாது வேறுதிரைப்படங்களைப் பற்றி கருத்துக்கள் பகிர்ந்துகொள்கின்றீர்கள் என்று சமதானம் செய்துகொண்டேன்.
நடக்கட்டும், தொடர்ந்து கலக்குங்க:)
இதே மால்கம்X பற்றி தமிழில் இரவிக்குமார் ஒரு அருமையான புத்தகம் எழுதியிருப்பார். சிறிய, ஆனால் விஷயமுள்ள புத்தகம்.
// எரின் ப்ரோக்கவிச் (ஜூலியா ராபர்ட்ஸ்)//
யோவ் அந்த படத்துக்கான ஆஸ்கர் கதைக்கு கொடுத்திருக்கணும். டைட்டா டீசர்ட் போட்டுவந்தவங்களுக்கு கொடுத்ததுல, மாண்டீ டிரிட்மெண்ட் தான் ஆஸ்கர் குழுவினருக்கும்.
அதெல்லாம் சரி, யாராவது "ஸீ இன்சைடு" பார்த்துட்டிங்களா?
//இவ்வளவு பெரிதாய் ஒரு நீள்பதிவு வெறும் திரைப்படம் பற்றி, வருத்தமே மேலிடுகிறது. சேகுவாரா, belly-dance, கம்யூனிசம், sex-workers இதுபற்றியெல்லாம் blog-ல் எப்போது படிக்க கிடைக்குமோ? //
நீங்க வருத்தபடுறதுல கொஞ்சம் கூட நியாயமே இல்லை.ப்ளாக் என்பது ஒரு தனிநபரால் அவர் கருத்துக்களை முன் வைத்து மற்றவர்கள் கருத்துக்களை பெறுவதற்கே என்பது என் கருத்து. ப்ளாக்கர்கள் அவர்களுக்கு தெரிஞ்சதை தான் ப்ளாக்குகளில் எழுத முடியுமே தவிர பத்திரிக்கை நோக்கில் சேகுவாரா, belly-dance, கம்யூனிசம், sex-workers -களை எல்லாம் ஒரே ப்ளாக்கர் எழுதும் அளவுக்கு அந்த ப்ளாக்கர் சகலகலா வல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
நீங்கள் சொல்லும் கருத்துக்களையும் தமிழ் ப்ளாக்கர் முன் வைக்க மறப்பதில்லை. தேவையானால் http://www.thamizmanam.com சென்று பாருங்கள். பலதரப்பட்ட அருமையான கருத்துக்களையும்/பார்வைகளையும் படிக்கலாம்.
ஒரு கேள்வி... சினிமாவை முன் வைத்து எழுதுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? என் சட்டியில் இருப்பது என் ப்ளாக்கர் அகப்பையில் வரும். வீணாக மற்றதை தேடி ஏமாற வேண்டாம். என் வாசிப்பும் அனுபவமும் விரிவடையும் போது நீங்கள் கேட்டதும் என்னுடைய பதிவுகளில் வரலாம். அது வரை மற்ற நண்பர்களின் பதிவுகளையும் படியுங்கள்.
/*******************
/தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama//
அட கடவுளே, நாராயாமா போட்ட ஓட்டு என்ற ரீதியில் ஆகிவிட்டது இங்கே; அதன் சரியான பெயர் Ballad of Narayama (ஷோஹீ இமாமுரா - இயக்குனர்)
**********************/
புத்தகத்தில் உள்ள பிழை
/************************
//தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano//
இயக்குனர் பெயர் ஜேன் காம்ப்பியன் (Jane Campion) - பெண்.
***************************/
தட்டச்சு பிழை. புத்தகத்தில் ஜான் கேப்பியன் என்றிருக்கிறது.
/**********************
//சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac//
அது Cyrano de Bergerac.
*************************/
புத்தக்கத்தில் உள்ள பிழை
/****************************
//ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov//
அது Andrei Rubelev - இதைப்பற்றி நான் விரைவில் எழுதுவேன்.
*****************************/
புத்தகத்தில் உள்ள பிழை
/****************************
//தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields//
இயக்குனர் பெயர் ரோலண்ட் ஜாஃப் - Roland Joffe.
**************************/
ரொனால்டு ஜாப்ரி என்று தான் புத்தகத்தில் உள்ளது. பிழை
/**************************
//தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc//
The Passion of Joan of Arc - Carl Dryer
*******************/
தட்டச்சு பிழை
The Passion of Joan of Arc
ப்ரூஃப் மறந்த புத்தக உலகில் இதெல்லாம் சகஜமப்பு :P)
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
நானுக் ஆப் தி நார்த்-உலகின் முதல் ஆவணப்படம் (1922)
ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் துருவங்களின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டான். எப்போதுமே இருட்டு தான். இரவில் நார்தர்ன் லைட் (northern light) எனப்படும் வர்ணஜாலத்தை வானம் ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும்.நார்தர்ன் லைட் என்பது வெள்ளை, மஞ்சள், பச்சை, சிகப்பு போன்ற வர்ணங்களால் வானத்தின் ஓரிடத்தில் பூசி இயற்கை நர்தனம் ஆடிக் கொண்டிருக்கும்.(அறிவியலர்கள் யாராவது அதன் பின் உள்ள அறிவியலை விளக்குவார்களா?)

குளிரையே பிரதானமாக இருக்கும் வடதுருவத்தில் வாழும் ஒரே இனத்து மக்கள் இனூயிட்(Inuit) எனப்படும் எஸ்கிமோக்கள் மக்களே. எப்படி கருப்பர்களை நிகர் அல்லது நீக்ரோ என்று அழைத்தால் கோபம் வருமோ அதைப் போல வடத்துருவ மக்களை எஸ்கிமோக்கள் என்றழைத்தால் கோபம் வரும். அமெரிக்காவின் சில பழங்குடிகளால் எஸ்கிமோக்கள் என்று பெயரிடப்பட்டது. எஸ்கிமோக்கள் என்றால் 'மாமிசத்தை சமைக்காமல் சாப்பிடுபவர்கள்' என்று பெயர். துருவ மக்கள் தங்களை இனூயிட் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள். இனூயிட் என்றால் 'மக்கள்' என்று பொருள்படும்.
இந்த இனூயிட்கள் எப்படி சமூகமாக வாழ்கிறார்கள் என்பதையும், ஏறக்குறைய வெளிஉலகத்தொடர்பு இல்லாமலேயே குடும்பத்தில் அன்பு மற்றும் கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள் என்பதையும், அசூர இயற்கை முன்பு இனூயிட்கள் வலுவிழந்து தங்களை எப்படி காத்துக் கொள்கிறார்கள் என்பதையும் முதல் முதலில் 'நானுக் ஆப் தி நார்த்' என்ற ஆவணப்படமாக தயாரித்த பெருமை ராபர்ட் ஃப்ளஹர்டியை(Robert Flaherty) தான் சேரும். இவர் தான் டாகுமெண்டரி படங்களின் தந்தை என்றழைக்கபடுகிறார். இந்த முதல் ஆவணப் (டாகுமெண்டரி) படம் வெளிவந்த ஆண்டு 1922. இந்த படத்தை பற்றிய பார்வைக்கு முன் இனூயிட்களைப் பற்றி கொஞ்சம் அலசலாம்.
இனூயிட்கள் யார்?
போன வாரம் ஒரு தற்செயல் நிகழ்ச்சி நடந்தது. முந்திய நாள் இரவில் 'நானுக் ஆப் தி நார்த்' பார்த்து விட்டு இந்த வாரத்தில் இனூயிட்களைப் பற்றி எழுதலாம் என நினைத்திருக்கும் போது பாலாஜி-பாரியின் பதிவு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இனூயிட்களைப் பற்றி சொல்லும் அவர் பதிவு சுருக்கென மிக அழகாகயிருந்தது.

இனூயிட்கள் வட அமெரிக்கா ஆர்டிக் பகுதியிலிருந்து கிழக்கு கிரீன்லேண்டு வரையிலான ஏறக்குறைய 6000 கிலோமீட்டர் வரை உள்ள பனி பிரதேசங்களிலும், ஆர்டிக் கனடா, வடக்கு அலாஸ்காவையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிக்கும் உலகின் சிறுபான்மை மக்கள். அவர்களின் தோற்றத்தை(origin) பின்னோக்கி பார்த்தோமானால் அலஸ்காவில் பெரும்பான்மையாக வாழ்ந்து caribau எனப்படும் பனிகலைமான்கள், பனிக்கரடி, திமிங்கலம், சீல், வால்ரஸ் போன்ற மிருகங்களை நம்பியும், உணவுக்காவும் வேட்டையாடி வாழ்ந்தவர்கள். பனிப்பிரதேசங்களில் உணவுக்காக நாடோடிகளாக திரிந்தவர்கள். அலாஸ்காவிலிருந்து வட கிரீன்லேண்டு, ஆர்டிக் கனடா போன்ற இடங்களில் பரவிய இனூயிட்கள் ஆச்சரியப்படக் கூடிய வகையில் ஒரே பண்பாடு, கலாச்சாரம், மொழி என்று வாழ்கிறார்கள்.
இனூயிட்ஸ்களின் வாழ்க்கையை ஐரோப்பியர்களின் முன், பின் என இரண்டாக பிரிக்கிறார்கள். ஐரோப்பியர்களின் முன் என்ற பிரிவினையில் இனூயிட்ஸ்கள் பனி பிரதேசத்தை தவிர மற்ற உலகை அறியாதவர்கள். வேட்டையாடி உணவுக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள். வால்ரஸின் தந்தம், திமிங்கலத்தின் எலும்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடி பொதுவில் உண்டு வாழ்ந்தவர்கள்.செடி,கொடி,மரங்களை வடதுருவத்தில் பார்க்க முடியாதாகையால் கடலில் மிதந்து வரும் கட்டைகளை கொண்டு தற்காலிக இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்கள். குளிர்காலத்தில் இடம் பெயரும் போது இக்ளூ (igloo) எனப்படும் பனிவீடுகளில் வசிப்பார்கள். இந்த பனிவீடுகளைப் பற்றி பின்னால் விளக்குகிறேன்.
18-ம் நூற்றாண்டு பக்கத்தில் ஐரோப்பியர்கள் அண்ட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் செல்ல வடமேற்கு கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க ஆர்டிக் வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. பனிக்கண்டத்தை தடையாக கண்டவர்கள், அங்கு இனூயிட்ஸ்களை கண்டுக் கொண்டார்கள். ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் இனூயிட்ஸ் வாழ்க்கையில் குறுக்கிட்ட பிறகு அவர்களுடைய வாழ்க்கை வெகு வேகமாக மாறத் தொடங்கியது. சீல் வால்ரஸ், பனிக்கரடி தோலுக்காக ஐரோப்பியர்கள் இரும்பு போன்ற பயனுள்ள பொருட்களை பண்டமாற்றினார்கள். துப்பாக்கி கொண்டு வேட்டையாட தொடங்கினார்கள். இனூயிட்ஸ்கள் திமிங்கல வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டனர். கிறிஸ்துவ மிஷன்கள் உள்ளே நுழைய அவர்கள் பின்பற்றிய கலாச்சாரமும் பண்பாடும் மிக வேகமாக மாறுதல் அடைந்தது. கனேடிய அரசாங்கத்தின் பெருமுயற்சியல் அவர்களின் நாடோடி வாழ்க்கையை விடவைத்து இனூயிட்ஸ்களுக்கு குடியரசை அமைத்துக் கொடுத்தது.
'நானுக் ஆப் தி நார்த்'(Nanook of the north)

மறுபடியும் இனூயிட்களின் வாழ்க்கையை படமாக்க ஒரு செல்வந்தரின் பெரும் உதவியுடன் கேமிரா மற்றும் எடுத்த படத்தை இனூயிட்களுக்கு காட்ட தேவையான கருவிகளுடன் சென்றார்.இந்த தடவை பல இனூயிட்களை குறி வைக்காமல் ஒரே ஒரு இனூயிட்டின் கேரக்டரை முன்னிலைப்படுத்தி எடுக்க எண்ணம் கொண்டு சென்றார். அந்த கேரக்டரில் நடிக்க கிடைத்தவர் 'நானுக்' என்றழைக்கப்பட்ட அல்லாக்கரியல்லாக். அவருடைய மனைவி நைலா மற்றும் அவர் குடும்பத்தை சுற்றியே இந்த படம் ஆவணப்படுத்துவதாக அமைத்தார். நானுக்கின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருப்பதையும், இயற்கையின் பல பரிணாமங்களையும் எதிர்க்கொள்ளுமாறு அமைந்த வாழ்க்கையினையும், உணவு தேடி வேட்டைக்கு அலையும் முறையில் அவர்கள் திறமை பலவீனப்படுத்தும் தன்மையினையும் ஃப்ளஹர்டி அருமையாக இந்த ஆவணப்படத்தில் கோர்த்திருப்பார்.இதற்காக ஃப்ளஹர்டி பல ஆண்டுகள் இனூயிட்கள் கூடவே கழித்தார்.
ஃப்ளாஹர்டி இந்த படம் எடுக்கும் போது உண்மையான சினிமா இயக்குநராக இல்லாததால் சில கேமிரா கோணங்கள் மோசமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்த அரிய ஆவணப்படத்தின் முன் இந்த குறைகளெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. ஊமைப்படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் 1990 வாக்கில் இசை மட்டும் சேர்க்கப்பட்டது.
படத்தில் முக்கிய காட்சிகளாக சொல்ல வேண்டுமானால் கோடைக்காலத்தில் நானுக் அவருடைய துணை நண்பர்களுடன் வால்ரஸ் வேட்டையாடும் காட்சியும், உறைந்த பனிகளை உடைத்து மீன் பிடிக்கும் காட்சியும், க்ளூ எனப்படும் பனிவீடு கட்டும் காட்சியும், பனிக்காற்றிலிருந்து தப்பிக்க போராடும் போராட்டங்களையும் நம் நகவிரலை கடிக்க வைக்கும் விறுவிறுப்புடன் நகர்கிறது.
கோடைகாலத்தில் தூரத்தில் உள்ள வால்ரஸ் தீவில் வால்ரஸ் இருக்கிறது என்பதை அறிந்து பனி விலங்குகள் தோலால் மூடப்பட்ட படகில் நானுக் ஆர்வமாக புறப்படுகிறார். தீவை அடைந்து தந்திரமாக தவழ்ந்து சென்று 4 டன் எடையுள்ள வால்ரஸை பிடிக்கும் காட்சிகள் படமெடுக்கும் போது 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக ஃப்ளாஹர்டி சொல்கிறார். கொன்ற வால்ரஸை அவருடைய இருப்பிடத்திற்கு கூட கொண்டு செல்லாமல் பசியால் பச்சைக்கறி சாப்பிடும் அந்த காட்சி மிக தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கும்.
இக்ளூ (igloo)

வேட்டைக்காக செல்லும் இனூயிட்கள் இரவில் உறையும் பனியிலிருந்தும், பனிக்காற்றை எதிர்கொள்ளவும் பனியால் கோளவடிவில் கட்டும் வீடு இக்ளூ எனப்படுகிறது. நானுக் இக்ளூ கட்டும் காட்சி இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. கட்டியான பனிக்கட்டிகளை செங்கல் மாதிரி வால்ரஸ் தந்தத்தால் அறுத்து வட்டமாக பவுண்டேஷன் போட ஆரம்பிக்கிறார்கள். பனிக்கட்டி ப்ளாக்குகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி doom வடிவில் பனி வீட்டை கட்டுகிறார்கள். ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவே வாசல் விடப்படுகிறது. பனிவீட்டின் மேலே வெப்பக்காற்று வெளியேறுவதற்காக சிறு ஓட்டையும் விடப்படுகிறது. வெளிச்சம் உள்ளே நுழைய கூரையில் பளிங்காக உள்ள ஐஸ்கட்டியை எடுத்து பதிகிறார்கள். இந்த பணி சில மணித்துளிகளில் நிறைவடைகிறது. இரவில் பனி உறைய ஆரம்பிக்கும் போது க்ளூ பனி ப்ளாக்குகளில் உள்ள இடைவெளிகள் ஏதுவும் இல்லாமல் ஐஸ்ஸாக உறைகிறது. க்ளூவின் உள்ளே வால்ரஸ் கொழுப்பால் சிறிய விளக்கு ஒன்று எரிந்துக் கொண்டேயிருக்கும். இது க்ளூ உள்ளேயிருக்கும் ஐஸை லேசாக உருகவைத்து இடைவெளியில்லாமல் பாலிஸாகிறது. இரவின் கொடுரமான பனிக்காற்றிலிருந்து விடுதலைக் கிடைத்தாகி விட்டது.
அந்த ஐஸ் வீட்டினுள்ளேயே பனிக்கட்டிகளின் மேலேயே பனிமான், கரடி தோலை மேலே போட்டு வால்ரஸ் தோலை போர்த்தி படுக்க ஆரம்பிக்கின்றனர்.

மறுநாள் சீலை தேடி வேட்டைக்கு நாய்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் வண்டியுடன் கிளம்புகிறார்கள். உறைந்திருக்கும் கடலில் அங்காங்கே அபூர்வமாக ஓட்டைகள் தென்படும். சில நேரங்களில் சீல் ஓட்டை பக்கத்தில் வந்து வெளிக்காற்றை சுவாசிக்கும். இனூயிட்கள் பொறுமையாகக் காத்திருந்து அந்த பனி ஓட்டையின் வழியாக அந்த சீலை பிடிக்கும் காட்சியும் அற்புதமாக அமைந்திருக்கும்.
குளிர்காலத்தில் நீரை தேடி அலைய முடியாததாகையால் எச்சிலால் தன் குழந்தையை குளுப்பாட்டுவாள் நைலா. அது போல் இரவில் கழட்டி வைத்த நானுக்கின் வால்ரஸ் காலணி இறுகிவிட, காலையில் நைலா வாயாலே கடித்து காலணியை மென்படுத்தும் காட்சியும், பனியில் வழுக்கிப் போக ஸ்லெட்ஜ் வண்டியின் அடிப்பாகத்தை நானுக் நாக்கால் நக்கி எச்சில் படுத்தும் காட்சியும் இயற்கையாக எடுத்திருப்பார்கள்.
ஃப்ளஹர்டி படம் எடுத்த முடித்த பிறகு நானுக் மற்ற இனூயிட்ஸ்களுக்கு போட்டு காட்டியிருக்கிறார். அவருடைய மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தை இல்லை என்கிறார். ஃப்ளஹர்டியை சுற்றி சுற்றி வந்த நானுக் பிரியா விடை கொடுத்தான். படம் எடிட் செய்யப்பட்டு 1922-ல் வெளியிட அது வரை ஆவணப்படங்களை கண்டிராத மக்களின் முன்பு சூப்பர் ஹிட் ஆகியது, படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து ஃப்ளஹர்டிக்கு ஒரு செய்தி வருகிறது. அது நானுக் உணவு கிடைக்காமல் பட்டினியால் செத்து விட்டான் என்பது தான். பட்டினி சாவு அன்றைய காலக்கட்டத்தில் இனூயிட்களிடம் சர்வசாதரணம்.

இனூயிட்கள் உயிர் ஆவிகளின் மேல் பயங்கர நம்பிக்கையிருந்தது. இறந்தவனின் பெயரை புதிதாக பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் வரை அந்த பெயரை உச்சரிக்கமாட்டார்கள். இனூயிட்கள் சீல் அல்லது வால்ரஸை வேட்டையாடினால் முதலில் அதன் வாயில் பனிக்கட்டிகளை போட்டுவிட்டு பிறகு தான் உண்ண ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் செத்த உயிர் தண்ணீர் கேட்டு அவதியுறும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போல் பெண்கள் மானின் தோலை சாப்பிடக்கூடாது என்ற தடையும் இருந்தது. வீட்டில் ஒரு முதியவர் இருந்தால் இனூயிட்கள் பெருமதிப்பு கொடுப்பார்கள்.அவர்களுக்கும் சேர்த்து உணவு சேகரிப்பார்கள். குடும்பமாக வாழும் இனூயிட்களின் கலாச்சார பண்பாடுகளை எண்ணி ஃபிளஹர்டி ஆச்சரியப்பட்டு போகிறார்.
'நானுக் ஆப் தி நார்த்' பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். இந்த படத்தின் ட்ரெய்லர் இங்கே கிடைக்கும். அந்த சுட்டி இல்லையென்றால் இந்த சுட்டி. ட்ரெய்லர் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது. அது உங்கள் தனிப்பார்வைக்கு மட்டுமே. வணிக நோக்கத்திற்கு அல்லாமல் கொடுப்பதால் காப்பிரைட் பற்றியெல்லாம் தெரியாது. அதிகபட்சமாக, பார்த்து விட்டு அழித்து விடுங்கள்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
மற்றப்படி, சூப்பர் பதிவு போங்கள்
//
உத்திரவாதமே வேண்டாம் தலீவா. இந்த மாதிரியான செயின் ரியாக்ஷன் நல்லது தான். அப்போது தான் இந்த மாதிரி புதிய பகுதி மக்களை பற்றி றைய பேர் தெரிந்துக் கொள்ளலாம்.ஆக மொத்தம் பொறி கிளப்பிய பாலாஜி பாரிக்கு நன்றி. எப்படி என்ன ஓட்டங்கள் ஒருங்கிணைகிறது பாருங்கள்.
naan munthi ezuthiyathu:
http://mathy.kandasamy.net/musings/?s=inuit
another movie you should see is 'Atanarjuat'. It's in 'Inuktitut' with english subtitles.
There's so much to learn about/from these people.
We should also write/think about how our lifestyle is affecting these people. The level of mercury in these places are quite high.
http://www.protectingourhealth.org/press/2003/2003-0305-TorontoStar-mercury.htm
http://www.oceanconservancy.org/site/PageServer?pagename=bpm_feature1_3
-ஆத்மன்
நரேன், அஸ்மத், இன்னுயிட் கிடக்கட்டும். இப்போது, அமெரிக்காவின் முதல் மனிதன் யார் என்பதுகூட, மிகவும் இழுபறியான அறிவியல்/ஆய்வு/அரசியல் ஆன சங்கதியாக இருக்கின்றது.
ஆஹா!! கிளம்பிட்டாங்கையா...கிளம்பிட்டாங்கையா....இந்த மாதிரி ஒரு செய்தி நமக்கு எவ்ளோ சந்தோசத்த தருது. இல்ல?.
அப்புறம் மறக்காம இன்னொன்னும் சொல்லனும். இந்த வரிசைல சுவாரசியமானது நம்ம தோடர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் வாழ்க்கை முறை. இந்த கதைகள ஒரு தொடராக யாராவது எழுத வந்தா சூப்பரா இருக்கும்.
அருணா அவர்கள் சொன்ன மாதிரி, இந்த சங்கதிகள் மூலம் ரிவர்ஸ் கியர்ல போய் இயல்பான விசயங்கள பார்க்கப் பழகுவோம்.
நன்றிகள் நண்பர்களே!!
//அலாஸ்காவிலிருந்து வட கிரீன்லேண்டு, ஆர்டிக் கனடா போன்ற இடங்களில் பரவிய இனூயிட்கள் ஆச்சரியப்படக் கூடிய வகையில் ஒரே பண்பாடு, கலாச்சாரம், மொழி என்று வாழ்கிறார்கள்.//
இது உண்மையிலேயே ஆச்சர்யப்படத் தக்கதுதான்.
நன்றிகள்.
அருமையான பதிவு! நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது!
உங்க நட்சத்திர வாரத்தை அட்டகாசமா நடத்திக்கிட்டு இருக்கீங்க!!!
வாழ்த்துக்கள். நல்லா இருங்க!!!
என்றும் அன்புடன்,
துளசி.
More Here: http://www.goingtoalaska.com/conditions.php
http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0865476381/qid=1114558919/sr=1-1/ref=sr_1_1/103-0726663-7506240?v=glance&s=books
பாரி, நரேன், நீங்கள் என்று இன்னூட்ஸ் பற்றி தொடர்ச்சியாக எழுதுகையில் அதிக விசயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. கனடாவில் ஆதிக்குடிகள் (aboriginal people) இருக்கும் மூன்று முக்கிய பிரிவுகளில் Inuits ஒருவகையினர் (மற்றவர்கள் First nations & Metis). மேலதிக விபரத்திற்கு கனடா அரசாங்கப் பக்கத்திற்கு...
http://www.cic.gc.ca/english/citizen/look/look-06e.html
....
நரேன், இப்படியான பதிவுகளைப் பார்க்கும்போதுதான், வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் தொகுத்து ஒரு புத்தகமாய் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது. ஒரு பதிவை புத்தகம் ஆக்கும் திட்டம் குறித்து எழுதுங்களேன் நரேன்.
கார்த்திக், மூர்த்தி, டிசே & துளசியக்கா.
மதி,
உங்களின் சுட்டியை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் சொல்லும் மெர்குரி அளவு துருவ பகுதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பத்தைப் பற்றி பல இடங்களில் படித்திருக்கிறேன். ஆனால் கவனம் செலுத்தியதில்லை. நேரம் கிட்டும் போது மெதுவாக எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்.
//அமெரிக்கா நிறுவனம், ஜில்லெட்டிடம் ஸ்பான்ஸ்சர்ஷிப் வாங்கியிருக்கிறதா என்ன... மொத்தமாய் வழித்து விட்டு இருக்கிறார்கள் :)
//
:-))))))))))))
//டிசே: நரேன், இப்படியான பதிவுகளைப் பார்க்கும்போதுதான், வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் தொகுத்து ஒரு புத்தகமாய் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது.//
இதை கடுமையாக ஆதரிக்கிறேன் :-). கொஞ்ச நாள் முன்பு சிங்கை பாலுமணிமாறன் ஒரு நற்செய்தி சொன்னார். மலேசியா தென்றல் பத்திரிக்கை ஆசிரியரான அவருடைய நண்பர் ஒருவர் ப்ளாக்குகளிலிருந்து நல்ல கட்டுரைகளை பதிவு ஆசிரியரின் அனுமதி எடுத்து போடுவதற்கு விழைந்திருப்பதாகச் சொன்னார். உண்மையில் இது ஒரு நல்ல sign. பார்க்கலாம் பலரின் எண்ணம் ஒருங்கிணையும் போது ஏதாவது நடக்கும். முயல்வோம்.
Aurora Borealis எனப்படும் northern lights-ஐ பற்றி அறிந்துக் கொள்ள
http://www.imv.uit.no/english/science/publicat/waynorth/wn1/contents.htm
இனூயிட்களை பற்றி பறவைகண் பார்வையில் பார்க்க...
http://www.civilization.ca/educat/oracle/modules/dmorrison/page01_e.html
பார்க்க:
வலைப்பதிவுகள் புத்தகமாகலாமா?
அன்பு, சிங்கப்பூர் 17வது திரைப்பட விழாவை மிஸ் பண்ணுகிறேன். அதைப்பற்றிய பதிவை சிங்கை முரசில் போட எண்ணினேன். நேரம் என்னை கடிப்பதால் பதிவும் போடல, படமும் பார்க்கல. ஆறுதலுக்கு தமிழ்மணத்திலேயே திரைப்பட விழா நடத்திரலாம்னு தான் :-)
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
மன்மத லீலையால் வென்றாரா சூப்பர் ஸ்டார்?
அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சூப்பர் ஸ்டார்களுக்கு இருந்த இரசிக கண்மணிகளும் ஒரே இலக்கண வரையறைகளுக்குள் தான் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இன்றைய சூப்பர் ஸ்டாருக்கும்,முதல் சூப்பர் ஸ்டாருக்கு இருந்த அதே அந்ததுஸ்து அதே மாதிரியான ரசிகப்பட்டாளங்கள் தான் இருக்கின்றன. என்று தமிழ் நாட்டில் சினிமா தோன்றியதோ அன்றே ரசிகர்களும் தோன்றியிருக்கிறார்கள். வரலாறு இவ்வாறுயிருக்கும் போது தற்கால சூப்பர் ஸ்டார் இரசிகர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. எனக்கு தெரிந்து இரசனை மாறாமல் அன்று முதல் இன்று வரை பரிணாம வளர்ச்சியே இல்லாமல் இருப்பவர்கள் நமது தமிழ் சினிமா ரசிகர்கள் தான்.
"

தங்க விக்கிரகம் மாதிரியான பளபளத்த உடம்பு, பட்டு வேட்டி பட்டு சட்டை, நெற்றியில் ஜவ்வாது பொட்டு,காதில் வைரம் பதித்த தோடு, கையில் மிகப்பெரிய தங்க மோதிரம், கணீரென்று பாடும் குரல்வளம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரர் தியாகராஜபாகவதர். "என்னைப் போல் வழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை" என்று சொல்லும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை இந்த பதிவில் அலசுவோம்.
தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆசாரியார், தாயார் மணிக்கத்தம்மாளுக்கு 1-3-1910-ம் ஆண்டு பிறந்தவர் தியாகராஜன். பிறந்த ஊர் மாயாவரம் (ஒரு சூப்பஸ்டார் அங்கு தோன்றியதாலோ என்னவோ அந்த ஊரில் தற்போதைய சூப்பர் ஸ்டாருக்கு ஏக ரசிகர்கள்). தியாகராஜனின் குடும்பம் பிறகு திருச்சி சென்று செட்டில் ஆனவர்கள். பள்ளி படிப்பு மண்டையில் ஏறாமல் துள்ளித் திரிந்தவர் தியாகராஜன். எங்கு சென்றாலும் தன் வசிய குரலில் பாடல்களை பாடி கூட்டம் சேர்த்து விடுவார் தியாகராஜன். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகங்கள் புகழ் பெற்றிருந்த சமயம். அந்த நாடகப் பாடல்களின் மேல் தியாகராஜனுக்கு அபார ஈர்ப்பு. பாட்டெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்த தந்தை அவன் விருப்பத்துக்கே இசைந்தார். முறைப்படி கர்நாடக சங்கீதத்தை ஈடுபாட்டுடன் கற்க ஆரம்பித்தார். தந்தை அவரை நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். முதல் நாடகமான ஹரிசந்திராவில் லோகிதாசனாக நடித்து குரல் வளத்தால் பல பாடல்களை 'ஒன்ஸ் மோர்' கேட்க வைத்தவர்.
திருநெல்வேலியில் ஒரு நாடகத்தில் தியாகராஜன் நடித்துக் கொண்டிருந்த போது எஸ்.ஜி.கிட்டப்பா என்னுடைய அடுத்த வாரிசு தியாகராஜன் தான் என்று பிரகடனப்படுத்தி அவருடைய குரல் வளத்தைப் பாராட்டி 'பாகவதர்' என்ற அடைமொழி அவர் வழங்க அன்றிலிருந்து தியாகராஜ பாகவதர் ஆனார். அவர் நடித்துக் கொண்டிருந்த பவளக்கொடி நாடகம் தமிழகமெங்கும் சக்கைப்போடு போட, அழ.இராம. அழகப்ப செட்டியார் அதை படமாக தயாரிக்க விரும்பினார்.
தமிழில் டாக்கீஸ் எனப்படும் பேசும் படம் முதன் முதலாக காளிதாஸ் உருவில் 1931-ல் வெளிவந்தது. அதற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு 1934-ல் தியாகராஜ பாகவதர் முதன் முதலாக நடித்த பவளக்கொடி வெளிவந்தது. அந்தப் படத்தில் 60 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆரம்ப கால சினிமாக்கள் புராண மற்றும் இதிகாச நாடகங்களை தழுவி வந்ததால் பாடல்களே பிரதானமாக இருந்தன. லைட்டிங் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் வெயிலில் செட் போடப்பட்டிருக்கும். அங்கு தகடுகள் வைத்து சூரிய ஒளியை செட்டில் பாய்ச்ச நடிகர்கள் வெயிலில் நின்று பலபாடல்களை பாட வேண்டும். இந்த நிலையில் எடுக்கப்பட்ட பாகவதரின் பவளக்கொடி சூப்பர் டூப்பர் ஹிட்.
இப்படி வரிசையாக 9 படங்களும் ஹிட் கொடுக்க மற்ற நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ஓடவா வேண்டாம என்று ஓடியது. பாகவதர் புகழின் உச்சிக்கே சென்று விட்டார்.அவரிடம் பணம் தண்ணீர் போல் ஓடியது. 100 சவரன் உள்ள தங்கதட்டில் தான் சாப்பிடுவார். உயர்தர காரில் தான் பவனி வருவார். வீட்டில் ஒரு குதிரை வைத்துக் கொண்டு அதில் தான் சவாரி செய்வார். இருந்தாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கும் நல்ல ஒரு ஸ்டாராக திகழ்ந்தார். பாகவதரின் ஹேர் ஸ்டைல் 'பாகவதர் கிராப்' என்ற பெயருடன் புகழ் பெற ஆரம்பித்தது.
ஹரிதாஸ்
'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை, பாபநாசம் சிவனின் பாடல்கள்,இளங்கோவனின் வசனம், ஜி.மாதவனின் இசை, தியாகராஜ பாகவதரின் பாட்டும் நடிப்பும் என்றால் வெற்றி கூட்டணி என்று பெயர். ஹரிதாஸ் 1944-ல் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலக யுத்தம் உச்சத்திலிருந்தது. ஃபிலிம் ரோல்கள் கிடைப்பதிலும் அதிக டிமாண்ட் இருந்ததால் 11 ஆயிரம் அடிக்கு மேல் படங்கள் எடுக்கக் கூடாது என அரசாங்கம் தடை விதித்தது. அதனால் தான் என்னமோ ஹரிதாஸ் ஜவ்வு மாதிரி இழுக்காமல் விறுவிறுப்பாக எடுக்கப்படிருந்தது. அந்த படத்தில் இடைவேளை வரை பெண் பித்தர், குடிகாரன், பெற்றோரை வெறுப்பவராக வருவர். அப்புறம் திருந்திய உள்ளமாக கலக்கியிருப்பார்.
அந்த படத்தின் "மன்மத லீலையை வென்றார்" உண்டோ என்ற பாடலும், தாசி ரம்பாவாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரியும் முக்கிய காரணம். டி.ஆர்.ராஜகுமாரியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. மயக்கும் விழிகளையும், காந்த புன்னகையும் கொண்டிருந்த முதல் தமிழ் பட நடிகை.
சென்னை ப்ராட்வே தியோட்டரில் 110 வாரங்கள் சளைக்காமல் ஓடியப்படம். ஏன்? தமிழ் திரைப்பட உலகிலேயே முதன் முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய கே,பி.சுந்தராம்பாளின் 'நந்தனார்' படம் ஹரிதாஸின் முன் ஈடுக்கொடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.(நந்தனார் படத்தில் தான் சுந்தராம்பாள் ஒரு லட்சம் வாங்கினார்)
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
லட்சுமிகாந்தன் என்பவர் ஒரு கிரிமினல். ஏகப்பட்ட வழக்குகள் அவன் மேல் பதிவாயிருந்தன. 'இந்து நேசன்' என்ற மஞ்சள் பத்திரிக்கையை நடத்தியவர். அந்த மஞ்சள் பத்திரிக்கையில் புகழின் உச்சியில் இருப்பவர்களை பற்றியும், செல்வந்தர்களை பற்றியும் கிசு கிசு முதல் அசிங்கமாக எழுதி பெரும் பணத்தை அவர்களிடம் பறிப்பது வழக்கம். புகழின் உச்சியில் இருந்த பாகவதரைப் பற்றியும் நிறைய எழுதியவர். இந்த நிலையில் 1944 அக்டோபர் 19-ம் தேதி லட்சுமிகாந்தன் தாக்கப்பட்டார். தான் தாக்கப்பட்டதாக வடிவேல் என்பவர் மீது புகார் கொடுத்தார். பிறகு 1944 நவம்பர் 8-ம் தேதி 10 மணி அளவில் சென்னை வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே இருவரால் கத்தியால் குத்தப்பட்டார். போலீஸிடம் புகார் கொடுத்து விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதுவரையில் தியாகராஜ பாகவதர் மீதோ என்.எஸ்.கிருஷ்ணன் மீதோ எந்த புகாரும் அவர் சொல்லவில்லை. அன்று இரவே லட்சுமி காந்தன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
லட்சுமிகாந்தன் இறந்து 50 நாட்கள் கழித்து 27-12-1944-ல் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். தமிழகமே குலுங்கியது. லட்சுமிகாந்தன் இவர்கள் மேல் எந்த புகாரும் கொடுக்கவில்லையென்றாலும் முக்கிய குற்றவாளிகளின் லிஸ்டில் எம்.கே.டியும், என்.எஸ்.கேவும் சேர்க்கப்பட்டனர்."வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள்" என்று வெளியே வரமுடியாத படி உள்ளேயே வைக்கப்பட்டனர். வழக்குக்காக எம்.கே.டி சொத்துக்களை எல்லாம் விற்க ஆரம்பித்தார். அவர் புகழும் சரிய ஆரம்பித்தது. பல கோர்ட்டுகளில் ஏறி கடைசியாக எம்.கே.டிக்கும் என்.எஸ்.கேக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பல படங்களுக்கு புக்கிங் ஆகியிருந்த பாகவதருக்கு பட அதிபர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். அவர் சொத்துக்களை எல்லாம் இழந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கவில்லை ஆகையால் லண்டனில் உள்ள 'பிரிவில் கவுன்சில்' தான் உச்ச நீதிமன்றம். மேல் முறையீடு செய்து வி.எல்.எத்திராஜ் (எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர்) தன் வாதத்திறமையால் வழக்கை தவிடு பொடியாக்கி இருவரையும் மீட்டார். ஆனால் இன்னமும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு புரியாத புதிராகவே உள்ளது.
30 மாதங்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த பாகவதருக்கு திரும்ப படவாய்ப்புகள் வந்தன. பணம்,புகழ் போன்றவற்றை வெறுக்க ஆரம்பித்தார். படங்களில் நடிக்கப்போவதில்லை என்று மறுத்தார். முழுக்க முழுக்க சங்கீத கச்சேரிகளில் இறங்கப்போவதாக சொன்னார். சங்கீதமும் அவரை வரவேற்கவில்லை. திரும்ப திரும்ப தோல்விகள் தழுவ ஆரம்பித்தன. தானே சொந்தப்படம் எடுக்க முனைந்தார். அவர் சிறையிலிருந்த 30 மாத காலத்தில் தமிழ் சினிமா முக்கிய திருப்புமுனைகளை சந்தித்து வெகுவாக முன்னேறியிருந்தது. புராண படங்களை விட்டு விட்டு சமூக படங்கள் வர ஆரம்பித்திருந்த காலம்.பாகவதரால் சமூக படங்கள் என்ற சட்டத்தில் பொறுத்திக் கொள்ள முடியவில்லை.
சொந்த படங்களும் கையைச் சுட, கிடைக்கும் நேரத்தில் கச்சேரி செய்தே வாழ்க்கையை ஓட்டி வந்தார். எத்தனையோ பேர் அவருக்கு உதவி செய்ய துணிந்தாலும் எதையும் அவர் ஏற்கவில்லை. முக்கூடல் சொக்கலால் ராம் சேட் பீடி கம்பெனி முதலாளி பெரிய பணக்காரர். பாகவதரின் தீவிர ரசிகரும் கூட. அவரிடம் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார். முக்கூடலில் பெரிய பங்களாவை கட்டி 'ஏழிசை மாளிகை' என பெயரிட்டு பாகவதரை தன்னுடனே தங்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதையும் மறுத்தார்.அவர் குருதட்சணையாகக் கொடுத்த எம்.டி.டி 21 என்ற எண்ணுள்ள சவர்லே காரை மட்டும் பாகவதர் கடைசிகாலம் வரை பயன்படுத்தினார்.
இதற்கிடையில் பாகவதரை சர்க்கரை நோய் வேறு வாட்டியது. என்.எஸ்.கேவும் பாகவதரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இருவரும் கொள்கைகளில் நேர் எதிர். பாகவதர் தீவிர கடவுள் பக்தர். என்.எஸ்.கே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் மிக ஈடுபாடு உடையவர்.பாகவதரின் நோய்க்கு மருத்துவரை அதிகம் நாடாமல் தெய்வம் காப்பற்றுவர் என்று வாழ்ந்தவர். கண்பார்வையும் அவருக்கு மங்க ஆரம்பித்தது. பொள்ளாச்சியில் ஒரு கச்சேரி முடிந்ததும், அவருடைய அபிமானி சர்க்கரை வியாதிக்கு ஏதோ மருந்து கொடுத்தார் என பாகவதர் குடிக்க, அது ஒவ்வாமையோ எதோ ஆகி மிக சீரியாஸான நிலமையில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைகள் பலனின்றி 1959 நவம்பர் 1-ம் தேதி 4:30 மணி அளவில் உயிர் நீத்தார்.
பாகவதருடன் எம்.ஜி.ஆர்

அசோக்குமார் என்ற படத்தில் பாகவதருடன் எம்.ஜி.ஆர் அவரின் நண்பணாக நடித்திருப்பார். பாகவதர் மேல் எம்.ஜி.ஆர் மிகுந்த மரியாதை உடையவர். அவர் பாகவதரின் இறுதி சடங்கு சென்னையில் நடக்க வேண்டுமென விரும்பினாலும் பாகவதரின் சொந்த ஊர் திருச்சிக்கே கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற நிலைமையையும், அவருடைய குரலும் என்றுமே மறையாது.
M.K. தியாகராஜ பாகவதர் நடித்த படங்களின் வரிசை

பவளக்கொடி (1934)
நவீன சாரங்கதாரா (1936)
சிந்தாமணி (1937)
சத்தியசீலன் (1938)
அம்பிகாபதி (1938)
திருநீலகண்டர் (1939)
அசோக்குமார் (1940)
சிவகவி (1942)
ஹரிதாஸ் (1944)
ராஜமுக்தி (1948)
அமரகவி (1952)
சியாமளா (1953)
புதுவாழ்வு (1957)
சிவகாமி (1959)
References:
1. இந்த பதிவை எழுதுவதற்கு உதவிய சுரேஷ் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.அவர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கென்றே தனியான வலைத்தளம் வைத்திருக்கிறார். இன்னும் மேலும் சுவையான பாகதவரைப் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்த வலைத்தளத்தை இங்கே சென்று பார்க்கவும்.
2. 'ஏழிசை மன்னர்' தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாறு -மாலதி பாலன் பதிப்பகம்: BOOKS INDIA
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
சின்ன வயசில் ரொம்ப தலைமுடி வச்சிருந்தா என் அப்பா - "என்ன தியாகராஜ பாகவதர்னு நினைப்பா", என்று சொல்வார். பாகவதரின் அந்த பிரத்யேக ஹேர் "ஸ்டைல்" பற்றி ஏதும் மேல் விவரம் உண்டா?
- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
அன்புடன்,
டோண்டு ராகவன்
'சூப்பர்'பதிவு! எங்க வீட்டுலே எம்.கே.டி. கலெக்ஷ்னா அந்தக் காலத்துலே வந்த எல்.பி. ரெகார்ட்ங்க இருக்கு!
நானும் அப்பப்ப 'தூள்.காம்.லே கேக்கறதுண்டு!
நல்லாஇருங்க! வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
துளசி
பி.கு: நடிகை சிநேகாவுக்கு டி.ஆர். ராஜகுமாரி சாயல் கொஞ்சம் இருக்குன்னு எங்க அபிப்பிராயம்!
இதேப் போல் வாழ்ந்து கெட்ட நிறைய நபர்களை தமிழ்சினிமாவில் உதாரணம் காட்டலாம். ஆனால், இன்றளவும் என் மனம் நெருடும் இழப்பு இருவருடையது. ஒருவரும் சிதம்பரம் ஜெயராமன், கணீர் குரலுக்கு சொந்தக்காரர். சிவாஜிக்கு டி.எம்.எஸ் செட்டாகுமுன்பு, பாடலுக்கு குரல் கொடுத்தவர். அற்புதமான பாடல்களை தமிழில் பாடியவர். இறந்த போது கடனை தவிர வேறெதுவ்மில்லை. இத்தனைக்கும், ஜெயராமன் கலைஞர் கருணாநிதியின் மனைவியின் அண்ணன். கைவிடப்பட்டு, காசில்லாமல், செத்துப் போனார். கலைஞர் நினைத்தால் உதவியிருக்கலாம் ஆனால் இல்லை என்றுதான் வரலாறு சொல்லுகிறது (இதுக்கு மேல எழுதினா இது அரசியலாகிவிடும்)
இன்னொருவர் நகைச்சுவை மன்னன் சந்திரபாபு. நிறைய பேர்களுக்கு நாகேஷ் ஒரு நகைச்சுவை ஜாம்பவனாக தெரிந்தாலும், என்னகென்னவோ சந்திரபாபு தான் இன்றளவும் மன்னனாக தெரிகிறார். நாகேஷ் மிக சாமர்த்தியமாக அப்போதிருந்த இரு பெரும் நடிகர்களின் அரவணைப்பில் வாழ்ந்த போது, சந்திரபாபு அதற்கு நேரெதிர். சபாஷ் மீனாவில் சென்னை பாஷை பேசுவாதாயிருந்தாலும் சரி. குங்கும பூவே என பாடும்போதும் சரி. சந்திரபாபு rules the audience. தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் முற்போக்கான சிந்தனையுடையவர். அந்த 7 நாட்கள் என்றொரு பாக்கியராஜ் படம் பார்த்திருப்பீர்கள். அதன் நிஜ கிளைமேக்ஸ் சந்திரபாபுவின் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொண்ட தன் மனைவி வேறொருவனை மனதார விரும்புகிறார் என்று தெரிந்தவுடன், அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தவர் அவர். அவ்வளவு முற்போக்கான சிந்தனை உடையவர், எம்.ஜி.ஆரினை பகைத்துக் கொண்டதால், ஒரு படம் நடிப்பதாக ஒப்புக் கொண்டு கடைசியில் காலை வாரியதால் நஷ்டப்பட்டு, மீண்டும் சொந்தப்படமெடுத்து வீணாய்ப்போனவர். சந்திரபாபு என்று பேசியவுடன் நினைவுக்கு வருவது தேங்காய் சீனிவாசன் அவரைப் பற்றிய சொல்லிய செய்திதான். சந்திரபாபு உச்சத்திலிருந்தபோது தான் தே.சீனிவாசன் தமிழ் திரையில் நுழைந்திருந்தார். மற்ற நகைச்சுவை நடிகர்கள் அவரை மதிக்காதபோது, சந்திரபாபு அவரை அழைத்து நிறைய படங்களும், படத்தயாரிப்பாளர்களிடமும் சொல்லி அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார். பின்னாளில் சீனிவாசன் சொந்தமாக வீடு கட்டி கிரகபிரவேசம் பண்ணியபோது வந்த கூட்டத்தில் கொஞ்சம் கசங்கலாக சட்டையணிந்த ஒருவர், சீனிவாசனை தனியாக அழைத்து, "என்ன தேங்கா, மறந்துட்டியா, சரக்கு இருக்குமாடா, காலையிலிருந்து குடிக்கலை" என்று சொன்னதை கேட்டவுடன் தே. சீனிவாசனின் கண்களில் கண்ணீர் கொட்டியது. அப்படிக் கேட்டவர் சந்திரபாபு.
வாழ்ந்து கெட்ட மனிதர்களைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் இவர்களிருவரும்தான் நினைவுக்கு வருவார்கள். தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரும் அதே ரகமாகதான் தெரிகிறார். நல்ல பதிவு. இந்த வாரம் திருவாரமாக போகுமென்று பட்சி இப்போதே கூவ ஆரம்பித்துவிட்டது.
அனானிமஸ், உங்களின் அக்கறையான காப்பிரைட் பற்றிய கேள்விக்கு ரொம்ப நன்றி. நானும் மிக மிக யோசித்து தான் அதை போட்டேன். எனக்கு தெரிந்த சில பாகவதர் அபிமானிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது பாகவதரின் பாடல்களை ரசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் தவறில்லை என்றார்கள். பாகவதரின் பாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் நிறைய பாடல்கள் தொலைந்து விட்டன. அது போல் அவர் பாடிய கர்நாடக சங்கீதத்தை அந்த காலத்திலேயே அவர் பதிய மறுத்து விட்டதால், அவர் பாடிய கர்நாடக இசைத்தட்டுகள் ரொம்ப rare ஆகிவிட்டது.
பாகவதர் ரசிகர்கள் அந்த மாதிரி பாடல்களை தேடி தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில பாடல்கள் இலங்கை வானொலி தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருந்ததாக சொல்லியிருந்தார்கள். ஒரு சிலரின் முயற்சியில் பாகவதரின் புகழ்பெற்ற பாடல்ல்களை தொகுத்துயிருக்கிறார்கள். காப்பிரைட் எதற்கும் இருப்பதாக தெரியவில்லை. நான் ஏறக்குறைய 10,15 கடைகள் ஏறி இறங்கி பாகவதர் பாடல்களை தேட வேண்டியிருந்தது.எந்த ஒரு கம்பெனியின் ஆடியோ சிடியும் கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்தது MP3 வடிவிலே தான்.
எனக்கு தெரிந்த வரையில் பாகவதர் பாடல்களுக்கு காப்பிரைட் பிரச்சனை இல்லை என்பதாலேயே போட்டிருந்தேன். இதைப்பற்றி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தெரிவிக்கவும். சுட்டியை தூக்கி விடுகிறேன். கவனத்திற்கு கொண்டு வந்த அனானிமஸ்க்கு மீண்டும் நன்றி
உங்களின் பின்னூட்டம் வெரி பவர் ஃபுல்.
அவருடைய வாழ்க்கை வரலாறு ஆவணங்களை தேடி படித்தப் போது 'கையேந்தினார்' என்பதை வன்மையாகவே கண்டிக்கிறது.கடைசிவரை பாகவதர் தன் சொந்தகாலில் இன்று உழைத்து தான் சாப்பிட்டார் என்கிறது அந்த ஆவணங்கள். ஆனால் வறுமையில் உழன்றது என்னவோ நிதர்சனமான உண்மை.
//பாகவதரின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம், மாறிவிட்ட திரையுலகமும் மக்களும், மிதமிஞ்சிய பிடிவாதமும்தான் என்பது என் கருத்து//
இது 100 % உண்மை.
அவர் சிறையில் இருந்த காலத்தில் சுதந்திரத்துக்கு ஒட்டிய காலகட்டத்தில் தமிழ்சினிமா பல மாற்றங்களை கண்டுக் கொண்டுவிட்டது. அதே ராஜா ராணி மனோபாவத்தில் இருந்த பாகவதரால் ஈடுகொடுக்க முடியவில்லை. சொத்தை இழந்தவர் தன்மானம் இழக்கமால் பிடிவாதத்துடனே வாழ்ந்தார் என்பதை சிறு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கியிருந்தார்கள்.
பிற்காலத்தில் 'அம்பிகாபதி' படத்தை சிவாஜிகணேசன் நடிக்க உறுதியானது. ஏற்கனவே பாகவதர் அம்பிகாபதி என்ற படத்தில் அம்பிகாபதியாக நடித்திருந்தார்.தயாரிப்பாளர் பாகவதருக்கு உதவ எண்ணி கம்பர் வேடம் ஏற்க அழைத்தார். பாகவதர் மறுத்தார். சிவாஜியை விட 10000 ரூபாய் அதிகம் தருவதாக கூறினார்கள். பாகவதர் அவர்களிடன் தன்னை அம்பிகாபதியாக ஏற்கனவே மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். திரும்ப அம்பிகாபதியின் தந்தையாக நடிக்க முடியாது என்றார். உண்மையில் பாகவதரின் அம்பிகாபதி தான் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்தது. சிவாஜியின் படம் அந்த அளவுக்கு ஓடவில்லை.
2. இரண்டாவது நிகழ்ச்சி டி.ஆர்.மகாலிங்கம் கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்தார். தன் பையனை பள்ளியில் சேர்க்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ந்திருந்தார். அங்கு பாகவதர் தான் பாடினார். டி.ஆர்.மகாலிங்கம் பாகவதருக்கு உதவ எண்ணி வெள்ளித் தட்டில் 1000 ரூபாய் வைத்துக் கொடுத்தார். பாகவதர் அந்த ஆயிரம் ரூபாயின் மேல் 1 ரூபாயை வைத்து அந்த தட்டை டி.ஆர் பையனுக்கே திருப்பி கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு தங்க பேனாவையும் பிரசண்ட் பண்ணினார் என்று டி.ஆர்.மகாலிங்கம் தன் கடைசி காலத்தில் சொல்லியதாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
காமராஜர் பாகவதரை அரசியலுக்கு அழைத்தும் அரசியலுக்கு வரவில்லை.
உண்மையில் இந்த காலத்திலும் உச்சியில் இருக்கும் சினிமா நடிகர்களும் ஒரு காலத்தில் உரு தெரியாமல் போய் கொண்டுதானிருக்கிறார்கள்.
//நடிகை சிநேகாவுக்கு டி.ஆர். ராஜகுமாரி சாயல் கொஞ்சம் இருக்குன்னு எங்க அபிப்பிராயம்!//
அப்படிப்பார்த்தால், அஞ்சலி தேவியின் உப்பிய கன்னங்கள் போலவே ராதிகாவும் இருப்பார். துளசி, என்ன ஒப்பீடு இதுவென்று புரியவில்லை ;)
ராமராஜன்?!!
மோகன்?!!
கார்த்திக்?!!
மன்னர் பாகவதருக்கு வீட்டை யாரும் விற்கக் கூடாது என்று சட்டமே இயற்றினாராம்.
இவருக்கு அடுத்த தலைமுறையான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் போன்றோர் விழித்துக்
கொண்டார்கள். அதற்கு முன்பு திடீர் கோடீஸ்வரன் என்பதே கிடையாது. கூரையை பிய்த்துக் கொட்டிய
பணத்தைப் பார்த்து, படிப்பறிவில்லாவர்களுக்கு எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் போயிருக்கும். போததற்கு
சுற்றி துதிப்பாடும் அள்ளக்கைகளின் தவறான வழிக்காட்டுதல்கள்.
நல்ல பதிவு விஜய்!
உஷா
துளசியக்கா அவர்கள் டி.ஆர்.ராஜகுமாரி சிரிப்பையும், சினேகா சிரிப்பையும் ஒப்பிடுகிறார் என நினைக்கிறேன். நானும் அவர்கள் இருவரின் சிரிப்பு முகபாவம் ஒன்றாக இருப்பதை கண்டிருக்கிறேன்.
உஷா,
பின்னூட்டத்திற்கு நன்றி. பாகவதர் திருச்சி கண்டோன்மெண்டில் தான் மிகப்பெரிய பங்களா கட்டிக் கொண்டார் என படித்திருக்கிறேன். கோவில் மாதிரி வீடு கட்ட வேண்டும் அதுவும் கலைக்கோவில் மாதிரி இருக்க வேண்டுமென சொன்னதாக படித்தேன்.
சுட்டுவிரல்,
பின்னூட்டத்திற்கு நன்றி.
//எனினும் இந்தக்காலத்திலெல்லாம் ஊதப்பட்ட பலூன்களே உயரங்களென அதிகம் வியக்கப்படுகின்றன. //
:-)
அனானிமஸ்,
கவனத்திற்கு கொண்டுவந்தற்கு நன்றி. டவுன்லோட் சுட்டியை தூக்கி விட்டேன்.
எனக்கும் சந்திரபாபுவைப்பிடிக்கும், அவரது தன்மானம், முற்போக்குத் தனத்துக்காக. அவரது மண வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டபோது அது இன்னும் அதிகமானது. நன்றி நாராயணன்.
பாகவதரின் பாடல்களை பாடி பாடியே டி.எம்.எஸ்-க்கு பாடும் ஆசை வந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
விழும் எரிநட்சத்திரத்தின் சுயதம்பட்டம்
பாடச் சொல்லுகிற உலகம்
மயிலைப் பிடிச்சி கால உடைச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது அப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?"
மனேஜ்மெண்ட் தந்திரம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? வேலையிடத்துல எவனாச்சிம் வேலை வெட்டியில்லாம கதை அளந்துக்கிட்டு இருந்தாங்கன்ன அவனுக்கு எப்படி கூடுதல் பொறுப்பு கொடுப்பது என்பதை மேனேஜர் யோசிப்பார். சும்மா ஒரு கூடுதல் பொறுப்பை கையில கொடுத்தால் அவன் ஒழுங்க அந்த வேலையையும் செய்ய மாட்டான். அவனை கூப்பிட்டு "அய்யா! ராசா! உனக்கு ப்ரமோஷன் கொடுக்கிறேம்பா. நீ ப்ரோமோஷன் ஆகி விட்டதுனால நீ இந்த இந்த வேலை எல்லாம் செய்யனும்" என்று கூடுதல் பொறுப்பை தலையில் கட்டி விடுவார்கள்.அவனுக்கும் ப்ரோமோஷன் ஆகிவிட்டோமே என்ற மயக்கத்தில் இல்லை ஒரு கிறக்கத்தில் கொடுத்த வேலையை செய்ய ஆரம்பிப்பான்.
நான் மேல சொன்னதுல இருந்தே உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நான் என்ன சொல்ல வாரேன்னு. பல நட்சத்திரங்கள் தமிழ்மணம் வானில் மிகுந்த ஒளியுடன் மினுக்கிக் கொண்டிருந்தாலும் வானிலிருந்து விழுந்துக் கொண்டிருக்கும் இந்த எரிகல்லை இந்த வாரத்துக்கு மட்டும் நட்சத்திரமாக மினுக்கி விட்டு அப்புறம் எரிந்து சாம்பலாய் விழு என்றார்கள். பதவி ஆசை யாரை விட்டது? அதனால் ஏற்றுக் கொண்டுவிட்டேன்.
அல்வாசிட்டி.விஜய் ஆகிய நான் என்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறிக்கொள்கிறேன்(தமிழ்மணத்தை பைபாஸில் படிப்பவர்களுக்காக).
என் இயற்பெயர் விஜயகுமார். சொந்த ஊர் திருநெல்வேலி. 30 வயது நிரம்பிய கட்டுத்தொந்தி காளை. திருமணமாகி ஒரு குழந்தையுடன் வாழும் பேமிலி மேன். நிறைய பேர் பண்றாப்புல எழவு நானும் அதே மென்பொருள் பொறியாளன் தான்.
திருமணத்திற்கு முன் அவ்வளவாக கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருந்தேன், திருமணம் ஆன பின் பல நேரங்களில் கடவுளை துணைக்கு அழைக்க முழுநேர ஆத்திகனாகி விட்டேன். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று பைபிள் கூறுகிறது.என்னைப் பொருத்த வரையில் "மனைவிக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்பேன். அப்படியே எனக்கு ஞானம் ஆரம்பம் ஆனது. விஞ்ஞானம், மெய்ஞானம், அஞ்ஞானம் என பல ஞானங்கள் இருப்பதால், அவற்றைக் கண்டு குழம்பி போன குட்டை நான்.ஆக மொத்தம் என் ஊக்க சக்தியாக இருப்பது என் மனைவியே.
எனக்கு தமிழ் இலக்கியம் தெரியாது. அதனால் நான் தமிழில் எழுதுகிறேன். இணையத்தில் இலக்கியம் இல்லை. அதனால் நான் இணையத்தில் எழுதுகிறேன். எனக்கு சமூகம் தெரியாது. அதனால் நான் இந்த சமூகத்தில் எழுதுகிறேன்.எனக்கு உலகம் தெரியாது. அதனால் நான் உலகத்தைப் பற்றி எழுதுகிறேன். முக்கியமாக என் மனைவி எழுதவில்லை. அதனால் நான் எழுதுகிறேன்.
நான் அண்மைக்காலமாக சினிமாவைப் பற்றி நிறைய எழுதிக்கொண்டு வருகிறேன். அதுபோல் நான் அறிந்த நிகழ்ச்சிகளை/விவரங்களை திருநெல்வேலி அல்வா போல சுவையாக முடிந்த வரையில் எழுதி வந்திருக்கிறேன். நட்சத்திரம் என்பதற்காக நான் என் சுயத்தை இழக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.ஆனால் எதுவோ எழுதும் என் கையை பின்னுக்கு இழுக்கிறது. வழக்கமாக எழுதும் அந்த நடையில் சாயம் தெளித்து வைக்கிறது. அதை கொல்ல கொல்ல விஸ்வரூபம் எடுக்கிறது.
எல்லோருமே நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சிந்தித்து எழுதும் போது நான் மட்டும் இந்த வாரம் சில இறந்தகாலத்தையும் எழுத நினைக்கிறேன். பயப்படாதீர்கள். அது என்னுடைய இறந்த காலம் அல்ல. எல்லோரும் ரஜினிகாந்த் சந்திரமுகியில் எந்த பிராண்ட் லிப்ஸ்டிக் மேக்கப்பில் போட்டு வந்தார் என்று விவாதித்து கொண்டிருக்கும் வேளையில் உலக சினிமாவை திசை மாற்றிய இரண்டொரு சினிமாக்களைப் பற்றி பேசுகிறேன். இந்த வாரம் பதில் சொல்லட்டும்.
'நல்ல பண்ணனும்' என்று சொதப்புகிற கோஷ்டிகளில் நானும் ஒருவன். அது என் மேல தப்பில்லை. பழக்கதோஷம். அப்படியே இந்த வாரம் சொதப்பினால் என்னை மன்னிக்கும் படி முன்னமே தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
வாசிக்கும் எங்களுக்கு ஏதாவது போட்டி வைத்து திருநெல்வேலி அல்வா பரிசு கொடுக்கும் திட்டம் ஏதேனுமுண்டா என்பதையு கூறிவிடுங்கள் :-).
அதான் பக்திப்பாட்டு (நட்சத்திர வாரத்தின் முதல் பதிவு) முடிச்சாச்சுல்லே, உங்க வழக்கமான ஸ்டைல்லேயே கலக்குங்க:)
இப்படிக்கு
10 நாட்களுக்கு முன்னாலேயே ஊகித்த சுரேஷ்
/எல்லோரும் ரஜினிகாந்த் சந்திரமுகியில் எந்த பிராண்ட் லிப்ஸ்டிக் மேக்கப்பில் போட்டு வந்தார் என்று விவாதித்து கொண்டிருக்கும் வேளையில் உலக சினிமாவை திசை மாற்றிய இரண்டொரு சினிமாக்களைப் பற்றி பேசுகிறேன்/
;-)
( கொஞ்சம் வருஷம் முன்னாலே, அல்வாசிட்டி என்று ஒரு இணையத்தளம் பார்த்திருக்கிறேன். நீங்க தானா அது? )
இந்தவார எரி நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். நட்சத்திரமா இருக்கிறதவிட எரி நட்சத்திரம் வித்தியாசம்தான்.
வாழ்த்துகள்.
இயல்பா இருந்தாலே போதும். வரவழைத்துக்கொண்ட எந்த பாவனைகளும் யாருக்கும் பிரயோஜனமில்லை..சரியா..??
கலக்குங்க வழக்கம்போல...:-)
ஐகராஸ்,
//கொஞ்சம் வருஷம் முன்னாலே, அல்வாசிட்டி என்று ஒரு இணையத்தளம் பார்த்திருக்கிறேன். நீங்க தானா அது? //
அடியேன் தான். ஊருவிட்டு ஊரு போய் நேரம் கிடைக்காமல் அந்த வலைத்தளத்தை பால் ஊத்தி மூடியாகி விட்டது. இப்போது அது புதுசாய் ப்ளாக்காகி முளைத்திருக்கிறது.
அப்புறம் நீங்க சொன்ன இனிப்பு வரிசையில பருத்திபாலை விட்டுட்டீங்களே... :-)
நன்றி நரேன், டிசே,அன்பு,சுரேஷ்,பெயரிலி,அனானிமஸ்கள்,
செல்வநாயகி,ரோசா,ஐகராஸ்
,வசந்தன்,மூக்கன்
,சம்மி, தங்கமணி மற்றும் முன்பதிவில் பின்னூட்டமிட்ட துளசியக்கா.
அதோட எங்கூரு ஆட்டுக்கால் சூப், கருப்பட்டி மிட்டாய், காராசேவு... இன்னும் இன்னும்....
வாழ்த்துக்கள்.
என்ன, புரிஞ்சுதாலே?
-ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
,பாலாஜி-பாரி,ஈழநாதன்
, மாண்ட்ரீஸர், கருப்பி,இராதகிருஷ்ணன்,
ஆத்மன், இளவஞ்சி.
கருப்பி,
//அல்வாசிட்டி அரட்டையடிக்கிறதை விட்டிட்டு ஒழுங்கா வேலையப் பாருங்க. யாராவது போட்டுக் குடுத்து வேலையப் பிடுங்கீடுவாங்க.
வாழ்த்துக்கள். //
யாராவது வேலையைப் பிடுங்கீக்க வாழ்த்துக்களா ? :-) :-) :-)
ஆத்மன்,
//கலக்கு. நல்லா கலக்கு. அண்டம் அயரும் வரை கலக்கு. கலக்கிகிட்டே.... இரு.
என்ன, புரிஞ்சுதாலே?//
புரிஞ்சிடுச்சி வே. கலக்கு கலக்குன்னு உடம்பு ஓயும் வரை வயிற்றை தான் கலக்குது
விஜய்,
பின்நவீனத்துவம் எழுத ஆரம்பித்துவிட்டீர்க்ளா ? கலக்குங்கள்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
The 400 Blows
படம் : தி 400 ப்ளோஸ்
ஆண்டு : 1959
மொழி : பிரெஞ்சு
ஓடும் நேரம்: 1:39
இயக்குநர் Vs தயாரிப்பாளர் : பிரான்சிஸ் த்ரூஃபா (François Truffaut)
திரைக்கதை : பிரான்சிஸ் த்ரூஃபா, மார்செல் மௌச்சே
விருது : 1959 கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது

அண்டொனி டாய்னல் அதீத கற்பனைவளமும், மிகுந்த விளையாட்டு புத்தியும் மிகுந்தவன். வரி பிசகாமல் ஒப்பிவிக்கும் பள்ளி உலகத்தை விரும்பவில்லை. விளையாட்டு தனம் மிகுதியால் ஆசிரியர்களிடம் தண்டனைகளை பெற்று பள்ளியில் தன் பெயரை சுத்தமாக கெடுத்துக் கொண்டவன்.அதனால் பள்ளியில் எப்போதுமே நிராகரிக்கப்படுகிறான். வீட்டிலும் அதே கதை தான். டாய்னலின் தாய் திருமணம் ஆவதற்கு முன்பே வேண்டா வெறுப்பாக டாய்னலை பெற்றுக் கொண்டவள். குடும்பத்தை விட்டு எவ்வளவு நேரம் வெளியே செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரத்தையும் செலவழிப்பவள். அவள் வீட்டிற்கு வந்தால் எப்போதுமே டாய்னாலின் மேல் 'சள்' என்று விழுபவள்.
டாய்னலின் தந்தையும் அவனிம் மீது அதிக அக்கறை காட்டுவதில்லை. சில நேரம் ஜாலியாக பேசும் அவர் சில நேரம் டாய்னலின் மீது எரிந்து விழுவார்.அந்த மாதிரியான உலகத்திலிருந்து மீள அவனுக்கு மாற்று உலகம் தேவைப்படுகிறது. தந்தையிடம் நைசாக பேசி காசு வாங்கிக் கொண்டு அவனையொத்த நண்பனுடன் விளையாட்டு அரங்கினில் காசு கொடுத்து விளையாடுவதும், சினிமா பார்ப்பதுமாக தனக்கென தனி உலகம் அமைத்துக் கொள்ள விழைகிறான். இந்த லட்சணத்தில் தாய் வேறு ஒருவனுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்து விடுகிறான்.தான் தோன்றித் தனமாக பள்ளிக்கூடம் செல்லாமல் காலம் கழிக்கும் டாய்னல், பள்ளிக்கு திரும்பும் போது, ஏன் விடுப்பு எடுத்தாய் என காரணம் கேட்பார்களே என்று 'தன் தாய் இறந்து விட்டாள்' என ஆசிரியரிடம் பொய் சொல்கிறான்.
பொய் எப்படியோ தெரிந்து கடுமையாக தண்டிக்கப்படுகிறான். இனி வீட்டில் தன்னால் வாழ முடியாது என்று அந்த இரவில் வீட்டுக்கு வரமால் ஓடி விடுகிறான்.பசிக்கு அந்த இரவில் பால் புட்டியை திருடி திருட கற்றுக் கொள்கிறான். மறுநாள் தாய் அவனை கண்டுபிடித்து முதல் முறையாக பரிவாக பேசி படிக்க ஊக்கப்படுத்துகிறாள். டாய்னலோ எனக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை, நான் வேலை செய்ய கற்றுக் கொள்கிறேன் என்பதையும் அந்த தாய் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இருந்தாலும் திருந்த நினைக்கும் டாய்னலுக்கு பள்ளியில் தான் எழுதிய நேர்மையான கட்டுரைக்கும், அவன் மீது இருக்கும் கெட்ட அபிப்ராயத்தால், டாய்னல் யாருடைய கட்டுரையோ திருடி விட்டதாக குற்றம் சாட்டி தண்டிக்க முயற்சிக்கிறார்கள்.

1959-ம் ஆண்டு பிரெஞ்சு சினிமாவில் எழுந்த புதிய அலை சினிமாவில் த்ரூஃபாவின் இந்த படமும் முக்கியமானது. உலகத்து முதல் முக்கிய 100 திரைப்படங்கள் வரிசையில் இதுவும் முக்கியமானதொரு சினிமா. அந்த காலக்கட்டம் வரை எந்த சினிமாவும் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சினிமாவில் எடுத்துக் கையாளவில்லை. சிறுவர்களும், குழந்தைகளும் ஒரு விளையாட்டு/சந்தோச குறியீடாகவே சினிமா பயன்படுத்தி வந்தது.
பதின்ம வயதில் ஏற்படும் மனமாற்றங்களையும்,ஏமாற்றாங்களையும்,அவர்களின் குரல்கள் நிராகரிக்கப்படுவதையும் 'தி 400 ப்ளோஸ்' என்ற சினிமாவின் மூலம் த்ரூஃபா முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார்.
ப்ளாக்கர்களில் அவ்வவ்ப்போது கற்பனை மிக்க சினிமாவுக்கு ஆதரவு குரல்கள் இருக்கும் எப்படியென்றால் 'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று. சில யதார்த்தங்களை வாழ்க்கையில் தவற விட்டுவிடுவதால் சில சமயம் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.அப்போது இந்த மாதிரி யதார்த்த சினிமாக்கள் போகிற போக்கில் போகும் நம் பார்வையை திசை திருப்பி கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.
பதின்ம வயது பிரச்சனைகள் என்பது மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டிய தலைப்பு. தமிழ் சினிமாவில் 'துள்ளுவதோ இளமை, சில பாலுமகேந்திரா (பெயர் ஞாபகமில்லை) படங்களும் முன் வைத்தன. மொத்தத்தில் பதின்ம வயதினருக்கு நிராகரிப்பில்லாத தனி கவனமென்பது கட்டாயம் தேவை. அதை கடந்து வந்த நமக்கும் தெரியுமே.
இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
இந்தப் படம் பார்க்கலை. ஆனாலும் உங்க பதிவைப் படிச்சபிறகு பார்க்கணுமுன்னு இருக்கு!
அது இருக்கட்டும். நீங்க தான் இந்த வாரத்து 'ஸ்டாரா?' தூள் கிளப்புங்க!
வாழ்த்துக்கள்!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
400ப்ளோஸ் மிக மிக அற்புதமான படங்களில் ஒன்று. ஏற்கனவே மாண்ட்ரீஸருடன் இந்த படம் குறித்து பொடிச்சியின் பதிவின் பின்னூட்டத்தில் பேசியுள்ளேன்.
//ளாக்கர்களில் அவ்வவ்ப்போது கற்பனை மிக்க சினிமாவுக்கு ஆதரவு குரல்கள் இருக்கும் எப்படியென்றால் 'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று. //
என்னை பற்றி சொல்லும்போது பெயர் குறிப்பிட்டு எழுதுங்கள், தயவு செய்து.
மேலும் ஒருமைக்கு பண்மையை பயன்படுத்தாதீர்கள்.
அடுத்து நீங்கள் மேலே சொன்ன "'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று நான் சொல்லவில்லை. ஒரு போதும் சொல்லமாட்டேன். என் பார்வை வேறு.சந்திரமுகி விமர்சனத்தில் நான் கேட்ட கேள்வி வேறு. இங்கே திரிக்கப்பட்டிருப்பது முற்றிலும் வேறு. உங்களுக்கு நான் சொன்ன விஷயம் புரியாமல் இருக்கலாம் என்று சந்தேகத்தின் பலனை அளிக்கிறேன். இதை சுட்டி காட்டுவது மட்டுமே என் வேலை. நான் எழுதியதை நேர்மையாய் எதிர்கொள்பவருக்கு மட்டும் அது குறித்து பதில் சொல்ல முடியும்.
மற்றபடி இந்த விமர்சனம் பயனுள்ள பதிவு. நானும் இந்தபடம் குறித்து எழுத உள்ளேன். உலக சினிமாக்களில் மிக முக்கியமான படமாக இதை பார்க்கிறேன்.
அவர் பெயர் த்ரூஃபோ!
அழியாதகோலங்களைச் சொல்கின்றீர்களா? அது Summer 42 இன் திருகிய தமிழ்ப்பதிப்பு. ஆனாலும், நன்றாகவே இருந்தது. (சலீல் சௌத்ரியும் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க)
ரோசா,
//என்னை பற்றி சொல்லும்போது பெயர் குறிப்பிட்டு எழுதுங்கள், தயவு செய்து. //
அய்யோ! அம்மா இப்படி போட்டு உதைக்கிறீங்களே. செம டென்ஷன் பார்ட்டி. அது உங்களை அர்த்தப்படுகிறதா எனத் தெரியவில்லை. வேறு எங்கேயோ பின்னூட்டத்தில் படித்த ஞாபகம்.ஏன் என்றால் இன்னும் வீட்டில் டயல்-அப் இருப்பதால் நுனி புல் மாதிரி தேர்ந்தெடுத்து தான் பதிவுகளை மேய்வேன்.அது உங்கள் பதிவை பார்த்து தான் என் மனதில் வந்தது என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அடுத்த வாட்டி பெயரை போட்டே சொல்லிறலாம். விடுங்க.
//நானும் இந்தபடம் குறித்து எழுத உள்ளேன். உலக சினிமாக்களில் மிக முக்கியமான படமாக இதை பார்க்கிறேன்//
கட்டாயம் எழுதுங்கள். ஆழமான கருத்துக்களை உங்கள் பதிவில் எதிர்பார்க்கலாம்.
விஜய் சொல்வது போல் படம் இளம்வயது பிரச்சனைகளை பேசினாலும், படம் அது குறித்ததாக எனக்கு தோன்றவில்லை. படம் அந்த மைய பாத்திரமான சிறுவனின் தேடல் சார்ந்தது. விஜய் சொல்வது போல் குடும்ப சூழல் மட்டும் அந்த சிறுவனை திருட வைத்ததாக தெரியவில்லை. அதற்கு பின் ஒரு தேடலும் இருக்கிறது. சிறுவனுக்கும், அப்பாவுக்கும் நடக்கும் உரையாடலை கவனிக்கவும்.
'கடலை பார்க்க வேண்டும்' என்ற தேடலே படத்தில் முக்கியமானது என்று நினைக்கிறேன். கடைசியில் சிறையி(அல்லது பள்ளியி)லிருந்து தப்பித்து கடலை தேடி அடைந்து, அது வரை கருப்பு வெள்ளையில் சென்ற படம் நீலமாய் விரிகிறது. கடல் கதையின் மிக முக்கியமான -அற்புதம் அல்லது இலட்சியம், உன்னதம் (ஏதோ ஒன்று) குறித்த தேடலின் - உருவகம். ஞாபகமாய் கடைசி காட்சியின் படத்தை விஜய் போட்டிருக்கிறார்.
இப்போதுதான் கவனித்தேன்
//பிரான்சிஸ் த்ரூஃபா //
அவர் பெயர் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். இந்த பதிவில் சிறுவனின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்திய அளவிற்கு,தேடலை முன்னிலைப்படுத்தவில்லை.அதை நூலிழையாக சொல்லவிழைந்திருக்கிறேன். ஆனால் அந்த தொனி கொஞ்சம் வேறுமாதிரியாக ஒலிக்கிறது. உதாரணத்துக்கு..
//அவனையொத்த நண்பனுடன் விளையாட்டு அரங்கினில் காசு கொடுத்து விளையாடுவதும், சினிமா பார்ப்பதுமாக தனக்கென தனி உலகம் அமைத்துக் கொள்ள விழைகிறான்.//
//சீர்திருத்தப்பள்ளியிலும் அவன் தன் உலகத்தை கண்டுக் கொள்ளவில்லை. //
மொத்தத்தில் அவன் தேடலின் நிராகரிப்பு தான் சொல்லப்பட்டிருக்கிறது.
கடல் குறியீடு அருமை.
அப்பப்பா.. இந்த ப்ரெஞ்சு பெயர்கள் பெரிய தொல்லையாக இருக்கிறதே.ஆங்கிலம் மாதிரியே மொழி(ஒலி)ப்பெயர்க்கிறேன். இனிமேல் பெயரை எழுதுவதற்கு முன் உங்களை அல்லது டோண்டுவை தொடர்புக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அப்படியே பின்னூட்டத்திலும் சரியான பெயர் உச்சரிப்பை சொல்லி திருத்துங்களேன்.
///என்னை பற்றி சொல்லும்போது பெயர் குறிப்பிட்டு எழுதுங்கள், தயவு செய்து.
மேலும் ஒருமைக்கு பண்மையை பயன்படுத்தாதீர்கள்.
அடுத்து நீங்கள் மேலே சொன்ன "'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று நான் சொல்லவில்லை. ஒரு போதும் சொல்லமாட்டேன். என் பார்வை வேறு.சந்திரமுகி விமர்சனத்தில் நான் கேட்ட கேள்வி வேறு. இங்கே திரிக்கப்பட்டிருப்பது முற்றிலும் வேறு. உங்களுக்கு நான் சொன்ன விஷயம் புரியாமல் இருக்கலாம் என்று சந்தேகத்தின் பலனை அளிக்கிறேன். இதை சுட்டி காட்டுவது மட்டுமே என் வேலை. நான் எழுதியதை நேர்மையாய் எதிர்கொள்பவருக்கு மட்டும் அது குறித்து பதில் சொல்ல முடியும்.////
விஜய்,
நல்லா இருக்கு. தொடருங்கள்.
ரோசா,
விஜய் சொல்லியிருப்பது நான் சொன்னதை.
http://muthukmuthu.blogspot.com/2005/04/not-for-mature-audience.html
இன்னும் எனக்கு கார்ட்டூன் படங்களும், டாம் அண்ட் ஜெர்ரியும் ரொம்பவே பிடிக்கும்.
டேஸ்ட் ஆளாளுக்கு மாறுபடத்தான் செய்கிறது, ஆனால் எது நல்லது,தரமானது என்பதில் அனைவருக்கும் பொதுக்கருத்து உண்டுதான்.
அண்ணை,
சம்மர் 42 -ஐ இப்போது கூட 2 வருடங்களுக்கு முன் பார்த்து -மனதை ரிகன்சைல் செய்துகொண்டேன். என்ன படம் !!! என்ன படம்!!! அந்த காலத்திலே (90 களில்) எனக்கு அது கனவுப்படம். பார்க்குப்போது ஒரு சிவ்வு வரும் பாருங்க!!. அழியாத கோலங்கள் பார்க்கவில்லை.
பெயரிலி, விரிவான கருத்து கொடுத்ததற்கு நன்றி. ஃபாரன்ஹீட் 451ஐ பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். :-(
விஜய், இதில் 'நல்லவேளை' என்று சொல்ல என்ன இருக்கிறது. என்னை பற்றி சொல்லியிருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் நீங்கள் சொன்னதும், முத்து சொல்வதும் என் கருத்து அல்ல. அதை நான் சொல்லவில்லை. எனக்கு அது ஒப்புதலும் இல்லை. அதை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதால் எழுதினேன். அவ்வளவே!
400 blows: இந்நிபந்தனைகள் அற்றது(வை)
[ Balzac இன் உருவத்துக்குப் பால்சாக்கு என்பது தமிழிலே பொருத்தமே; ஆனால், cannibal என்னும் மாமிச உண்ணிக்கு, கனிபால் என்று தாவரசகவாசம் மட்டும் செய்வது நியாயமில்லை:-) ]
அட விடுங்க ரோசா.
//Balzac இன் உருவத்துக்குப் பால்சாக்கு என்பது தமிழிலே பொருத்தமே//
BTW யார் இந்த பால்சாக்கு. பிரான்சில் புகழ் பெற்றவரா? இந்த அசட்டு கேள்விக்கு மன்னிக்கவும்.
//cannibal என்னும் மாமிச உண்ணிக்கு, கனிபால் என்று தாவரசகவாசம் மட்டும் செய்வது நியாயமில்லை//
:-))))))))))
Jules et Jim, 1961
[Jules and Jim]
Le Dernier Métro 1980
[The last Métro ]
La Femme d'a cote, 1981
[The Woman Next Door]
Vivement Dimanche ! ;1983
[Confidentially Yours]
இதில் vivement dimanche அவரின் கடைசிப் படம். 1983 ல் கறுப்பு/வெள்ளையில் எடுக்கப்பட்டது.
//அப்படியே பின்னூட்டத்திலும் சரியான பெயர் உச்சரிப்பை சொல்லி திருத்துங்களேன்//
Antoine doinel = அந்துவான் துவானல்
balzac பற்றி இங்கே
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
வெளாட்டு
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
- ஆத்மன்
பி.கு. நீங்க எவ்ளோ பாயின்ட்ஸ் எடுத்தீங்க? அதை ஃபர்ஸ்ட் சொல்லுங்க.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
வெல்வெட் பூச்சி
அடுத்த ப்ரீயட் ஆரம்பிப்பதற்கு முன் கிடைத்த இடைவெளியில் அந்த தீப்பெட்டி டப்பாவை திறந்தான். நாலு ஐந்து வெல்வெட் பூச்சி பிலு பிலுவென்றிருந்தது. அந்த பூச்சி பார்க்க செக்க செவலென்று கச்சிதமாக வெல்வெட் சட்டையை போட்ட மாதிரி ரொம்ப அழகாக இருந்தது. பார்க்க பார்க்க ரொம்ப ஏக்கமாக இருந்தது. எனக்கும் ஒன்று வேண்டும் வேண்டுமென்றது என் மனது. நான் மெதுவாக அவன் கிட்ட கேட்டேன்.
"சீனி எனக்கு ஒரு பூச்சி தாடா, நான் ஒன்னும் வளர்க்கிறேண்டா"
"தூரப்போ, நானே எவ்வளவு கஷ்டப்பட்டு பிடிச்சிட்டு வந்திருக்கேன். ஒன்னும் தரமுடியாது போ"
"சீனி சீனி ரொம்ப ஆசையா இருக்கு. இந்த வாட்டி மட்டும் ஒன்னே ஒன்னு தாடா"
சராலென்று திரும்பிக் கொண்டான்.
பூகோள ஆசிரியர் உள்ளே வந்து ஏதோ பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார். நான் திரும்பவும் சீனியை அரிக்க ஆரம்பித்தேன். மெதுவாக அவன் தொடையை தோண்ட ஆரம்பித்தேன். "ஒன்னே ஒன்னு தாடா, நான் அப்புறம் கேட்கவே மாட்டேன்".
"அடி வாங்க போறே! போடா பன்னி. வெல்வெட் பூச்சி வேணுமா? போடா பூ* ". கெட்டவார்த்தை போட்டு மெதுவாக மெல்லிய குரலில் வாத்தியாருக்கு கேட்காத மாதிரி திட்டினான்.வகுப்பில் பாடத்தில் மனம் லயிக்கவில்லை. கீழே குனிந்து என்னுடைய பாக்ஸில் பென்சில் சீவ வைத்திருந்த அந்த மொட்டை பிளேடு எடுத்து என்னுடைய டெஸ்கில் 100க்கனக்காகில் செதுக்கி வைத்திருந்த பெயர் கூட்டத்தில் என் பெயரையும் செதுக்கிக் கொண்டிருந்தேன். Vijay 4E என்று E-யை செதுக்கி முடித்து பேனா மையை அதில் தடவ வேண்டுமென நினைத்திருந்த போது ஒரு முரட்டுக்கை என் காதை திருகியது.
"கொமாரு, விசய கொமாரு என்னடா பண்ணிக்கிட்டுயிருக்கே" என்று சொல்லிக் கொண்டே அந்த வாத்தியார் என் இடது காதை நமுட்டிக் கொண்டேயிருந்தார். நான் "சார் சார் சார்" என்று வலியால் முனங்கிக் கொண்டே அவர் காதை பிடித்து நமுட்டிய இடைவெளியை குறைக்க முற்பட்டேன். பிடித்து இழுத்தால் காது ரொம்ப வலித்தது. "ஆ ஆ ஆ" என்று கத்திக் கொண்டே இருந்தேன். அவர் அப்படியே காதை பிடித்து இழுத்துக் கொண்டே போனார். நானும் ஈடுக்கொடுக்க முடியாமல் பெஞ்சிலிருந்து எழுந்து அவர் பின்னாடியே சென்றேன். காதுக்குள் இருந்த ஜவ்வு எல்லாம் வலித்தது. அவர் மேஜைக்கு முன் என்னை நிற்க வைத்து, அடிஸ்கேலை எடுத்தார். கூடப் படிக்கிற எல்லா பயலுவ எல்லாம் என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளங்கைய காமிக்க அவர் ஸ்கேலாலேயே கைய திருப்பச் சொன்னார். கைமொளியை பார்த்து 'நட்டுங்' என்று ஸ்கேலை பக்கவாட்டில் திருப்பி ஒன்று போட்டார். என் கை சிறிது நேரம் செயல் இழந்ததைப் போன்ற உணர்வு.
க்ளாஸ் முடியிற வரை முட்டிக்கால் போட்டு நிற்க சொன்னார். சொர சொர தரையில் நிற்க முடியாமல் காலுக்கு போட்டிருந்த செருப்பை முட்டிக்கு இடையில் வைத்துக் கொண்டேன். பூகோள வகுப்பு முடிந்ததும் "போடா" என்றார் அந்த வாத்தியார். கூனி குறுகி போய் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். எல்லா கண்களும் என்னை பார்த்து ஏளனப்படுத்தியது. திரும்ப அந்த வெல்வெட் பூச்சியின் தீப்பெட்டி மேல் என் நினைவு சென்றது.
என் நிலையை கண்டு கொஞ்சம் இரக்கப்பட்டு சீனி சொன்னான் "நான் வெல்வெட் பூச்சியை தார்றேன். ஒரு பூச்சி நாலண. காசு கொடு நான் பூச்சி தர்றேன்".
"நாளைக்கு எடுத்து வர்றேன். கட்டாயம் எனக்கு பூச்சி தரனும்"
எப்படி நாலணவை தேத்துவது. எப்பவாச்சிம் அதிசயமா அம்மா 10 பைசா தருவாங்க. நாலணா எப்படி கிடைக்கும் என்ற யோசனை தான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போகும் வரையில்.
அம்மா சமயலறை பக்கம் போயிருந்த சமயம் பார்த்து ரேடியோ இருந்த அலமாரியைத் தேடிபார்த்தேன். ஒரு பைசாவும் தேறவில்லை. யோசனையாய் பக்கத்து வீட்டுக்கு சென்றேன். சும்மா பேப்பர் படிக்கிற சாக்கில் நோட்டம் விட்டேன். சின்ன யானை உருவம் இருந்தது. கிச்சனில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த அந்த அக்காவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, யானை உருவத்தை பிடித்து இழுத்தால் நடுவில் ஒரு அழகான அழி ரப்பர். முகர்ந்துப் பார்த்தேன். நல்ல வாசமாக இருந்தது. சுத்தும் முத்தும் பார்த்தேன். யாருமில்லை. அப்படியே அந்த அக்காவிடம் விடைப்பெற்றுக் கொண்டு அந்த யானை உருவ அழிரப்பரை ஜேப்பில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டினேன். எப்படியாவது இத கொடுத்து நாலு அஞ்சி பூச்சி வாங்கிறனும். ஏன்னா இந்த ரப்பர் எப்படியும் ஒரு ரூபாய்க்கு மேல இருக்கும் என்ற யோசனையில் வீட்டில் இருந்த சுவற்று பொந்தில் ஒளித்து வைத்தேன்.
சிறிது நேரத்தில் கிஷோர் தேடிவந்தான். அவன் அந்த பக்கத்து வீட்டு அக்காவின் தம்பி. வந்தவன் என்னை பார்த்தான். நேராக அந்த பொந்து பக்கம் போனான். அப்போது தான் ஞாபகம் வந்து தொலைத்தது எதாவது நானும் அவனும் சுட்டால் அங்கு தான் வைப்போம் என்று. அந்த யானை அழிரப்பரை எடுத்து ஓடிவிட்டான்.
நேராக அந்த அக்காவுடன் கிஷோர் வந்தான். "தொங்கன கொடுக்கா!!" என்று தெலுங்கில் எதோ சொல்லிவிட்டு நேராக பின்கட்டில் இருந்த என் அம்மாவிடம் சென்றார்.காளியாக அவதாரம் எடுத்திருந்த என் அம்மா முட்டை கண்ணுடன் என்னை முறைத்துக் கொண்டே வந்தார். இப்போது மாட்டியது என் வலது காது "எடுப்பியா? எடுப்பியா? என்ன பழக்கம் இது திருட்டுபயலே" என்று முதுகில் நாலு தோசை சுட்டார்.
மூலையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன். ஹாலுக்கு வந்து அந்த தூணுக்கு கீழ் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். பின்கட்டில் என் அம்மாவின் புலம்பல் இன்னும் கேட்டது. தற்செயலாக தூணில் கண்ணை ஓட்டிய போது என் அப்பாவின் சட்டை கண்ணில் பட்டது. மெதுவாக சட்டைப்பையில் கையை விட்ட போது நிறைய சில்லறைகள் தட்டுப்பட்டது.
"வெளியே கைய வச்சா அடி வாங்கி கொடுத்துட்டு போறாங்க. வீட்டுக்குள்ளே கைய வச்சா யாருக்கு தெரிய போது?. அப்பாவுக்கு எவ்வளவு சில்லறை பாக்கெட்டுல இருந்தாச்சுன்னு தெரியுமா... என்ன? பெரிய அழிரப்பர்... எங்க அப்பா பாக்கெட்டுல நிறைய சில்லறையிருக்கு. குதிரை யானை சிங்கமுன்னு விதவிதமா அழிரப்பர் வாங்குவேன்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், நாலணாவும், பத்து பைசாவும் தான் கையில் மாட்டியது. வேகமாக ஒரு டவுசர் பாக்கெட்டில் 10 பைசாவையும் இன்னொரு பாக்கெட்டில் நாலணாவையும் போட்டுக் கொண்டு, 'ஒன்னும் தெரியாத பாப்பா, போட்டாலாம் தாழ்ப்பா" மாதிரி உட்கார்ந்துக் கொண்டேன்.
என்ன சத்தமே காணொமென்று என் அம்மா மெல்ல எட்டிப்பார்த்தார். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஒரு திருப்தி அவர் முகத்தில். மறுநாள் பள்ளிக்கு போகும் போது 10 பைசாவுக்கு ஒரு "ஏர் உழவன்" தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு போகிற வழியில் உள்ளேயிருந்த தீக்குச்சிகளையெல்லாம் சக்கடையில் தூர எறிந்து விட்டுச் சென்றேன்.
சீனி வந்திருந்தான். அவனிடம் நாலணாவைக் கொடுத்து ஒர் வெல்வெட் பூச்சியை வாங்கி தீப்பெட்டிக்குள் விட்டுக் கொண்டேன். வெல்வெட் பூச்சிக்கு பசிச்சா??? "சீனி, எனக்கும் கொஞ்சம் புல்லு கொடுடா. பூச்சிக்கு பசிச்சா சாப்பிடட்டும்" என்று புல்லை வாங்கி, தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்தேன்.
அன்று மாலை என் தம்பிகளுடனும் நண்பர்களுடனும் சேர்ந்துக்கொண்டு வெல்வெட் பூச்சியை தொட்டு தொட்டு விளையாண்டுக் கொண்டிருந்தோம். தலைகுப்புற அந்த பூச்சியை படுக்கப்போட்டு எப்படி வெளிக்கு போகும்? எப்படி ஒன்னுக்கு போகுமென? அனடாமி படித்துக் கொண்டிருந்தோம்."இந்தா பார்ரா கால் கூட வெல்வெட்டு மாதிரியிருக்குன்னு" வியந்தோம். அப்படியே ஆளாளுக்கு வெல்வெட் பூச்சியை எடுத்து கையில் ஓட விட்டோம். மெத்து மெத்தென்று பூப்போல நடப்பதை ஆளாளுக்கு வியந்து ரசித்தோம். "டேய் இதப்புடிச்சா கையில குஷ்டம் தான் வரும்" என்ற சோமேஸை "குஷ்டம்னா உங்கவீட்டுக்கு ஒன்னும் பிச்சை எடுக்க வரமாட்டோம்" என்று அவனை ஓட ஒட விரட்டினோம். 'உங்க புத்தியையும் பாத்துக்கிட்டேம்ல" என்று கத்திக் கொண்டே சென்றான் சோமேஸ்.
அன்று இரவு உணவு இறங்கவில்லை. வெல்வெட் பூச்சி வெல்வெட் பூச்சி தான் என்னுடைய நினைவில். கொஞ்சம் சோத்துப் பருக்கையையும் எடுத்து தீப்பெட்டிக்குள் போட்டேன்.
மறுநாள் காலை ஆசையோடு தீப்பெட்டியை திறந்த போது கால்கள் சுருண்டு போய் வெல்வெட் பூச்சி கிடந்தது. அதை எடுத்துப் போட்டு விரலால் அங்குமிங்கும் தட்டிப்பார்த்தேன். எதிர்வினை எதுவுமில்லை பூச்சியிடம். வெல்வெட் மேல்புறமும் நிறமிழக்க ஆரம்பித்திருந்தது. வெல்வெட் பூச்சி செத்துப் போயிருந்தது மெதுவாக விளங்கியது. குற்ற உணர்வு ஆட்டிப்படைத்தது.
"சோறு போட்டதனாலே செத்துப் போச்சோ? இல்லென்னா புல்லு இப்படி தீப்பெட்டிக்குள்ள அடைச்சி வச்சிருந்ததாலே செத்துப் போச்சோ? சீனிக்கு மட்டும் எப்படி இந்த வெல்வெட் பூச்சி பலநாள் உயிரோட இருக்கு? என்னோடது ஏன் செத்துப் போச்சி?" அழுகை அழுகையாக வந்தது. சோகம் பல நாள் கவ்விக்கொண்டிருந்தது.
சில நாளில் அதே அந்தோனியார் ஸ்கூலில் 4ம் வகுப்பு E பிரிவில் மூன்றாம் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சீனி மெல்ல பாடபுத்தகத்தை திறந்தான். உள்ளே அழகான மயிலிறகு இருந்தது. மயிலிறகு இருந்த பக்கத்திலேயே இரண்டு அரிசி வைத்திருந்தான்.
"சீனி மயிலிறகு நல்ல இருக்குதுடா. அரிசி ஏன்?" என்றேன்.
"இப்படி மயில் றெக்கைக்கு பக்கத்துல அரிசி போட்டா மயில் றெக்கை குட்டிப் போடும். இப்படி தான் என்கிட்ட குட்டிப்போட்ட மயில் றெக்கை நிறைய இருக்கு" என்று என்னிடம் இறக்கையில் இருந்து இரண்டு துணுக்குகளை பிய்த்து கொடுத்தான்.
நானும் பாடபுத்தகத்துக்கு இடையில் இறக்கையை வைத்துக் கொண்டு "றெக்கைக்கு பசிக்கும். போய் அரிசி போடனும். கொஞ்ச நாள்ல குட்டி போடும் பார்க்கனும்" என்ற புதிய நம்பிக்கையோடு வீட்டிற்கு நடைப்போட்டேன்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
'கொசுவர்த்திச் சுருள்'( அதாம்பா நினைவலைகள் ஃப்ளாஷ் பேக் வர்றதுக்கு முன்னாலே வட்டவட்டமாய்
சுத்துமே) ஏத்திட்டீங்களே!
எனக்கும் வத்தலகுண்டுலே இருந்தப்ப இந்த 'வெல்வெட் பூச்சி' மேலே ஒரே ஆசை! எங்க அண்ணந்தான்
எப்பவும் பொன்வண்டு,விதவிதமான பூச்சினங்க எல்லாம் கொண்டுவந்து தருவாரு!
நல்லா எழுதியிருக்கீங்க. நானும் கொஞ்சம் 'பின்னாடி' போய் பழைய வாழ்க்கையை ரசிச்சுட்டு வந்தேன்!
என்றும் அன்புடன்,
அக்கா
நன்றி துளசியக்கா, சத்தியராஜ்குமார்.
சத்தியராஜ்! இப்போ சீனி எங்கேன்னு கூட தெரியாது. ஆனா அந்த பூச்சியும், நிகழ்வும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.நாய் குட்டி சம்பவமும் நடந்திருக்கிறது :-(
பாலு, பாளையங்கோட்டையும், வத்தலக்குண்டும் பாதித்த அளவு சிங்கப்பூர் இன்னும் என்னை பாதிக்கவில்லை. இன்று வரை ஒட்ட மறுக்கிறது. ஒரு வேளை நான் இந்தியா திரும்பிய பிறகு சிங்கப்பூர் நிழலாடுமோ என்னமோ?
//தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள். அன்புட, ஜெயந்தி //
தொடர்ந்து அவஸ்தை படனும்னு சொல்றீங்க. தலையெழுத்தை யாராலே மாத்த முடியும் :-))))))))))))))))
ம்ம்ம்ம்...இதான் உங்க ஆட்டோகிராப்பா?
"ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே..."
என்று எழுதினாலும் அந்தச் சின்னவயசில்
பூச்சி பிடிச்ச அனுபவம் ரெம்பப்பேருக்கு
பொது போல இருக்கு....:-)))
ஒங்க ஆட்டோ கிராப்புல கையெழுத்து போட்டுட்டேன்.
அன்புடன்,
ஆல்பர்ட்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
மெத்த படித்தவர்கள்
அந்த காட்டில் நிறைய காட்டுமிராண்டிகள் வசித்து வந்தனர். அவர்கள் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள்.காட்டுமிராண்டிகளை நாட்டு மிராண்டிகளாக்கியே தீருவேன் என ஒரு தொண்டன் சபதம் எடுத்து எப்படியோ காட்டுமிராண்டிகளுக்கு நண்பன் ஆகிவிட்டான். அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டினால் நரமாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்று எப்படியோ சில இளைஞர்களை காம்பிரமைஸ் செய்து கல்வி பெறுவதற்கு அனுப்பினான் அந்த தொண்டன்.
காட்டுமிராண்டிகளும் கல்வி அறிவுப் பெற்று நாகரீக மனிதர்களாக காட்டுக்கு திரும்பினர். வயதான காட்டுமிராண்டிகளுக்கு தன் புள்ளையாண்டாங்கள் திரும்ப வந்துவிட்டனர் என்று ஒரே சந்தோசம். சில வருடங்கள் கழித்து அந்த தொண்டன் காட்டுபக்கம் போய் படிப்பறிவு பெற்ற Ex-காட்டுமிராண்டிகளை காண வந்தான். அவர்கள் திரும்பவும் நரமாமிசம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
தொண்டன் கேட்டான் "ஏன்டா இந்த எழவை தின்னக் கூடாதுன்னு தானே படிக்க அனுப்பிச்சேன். இன்னும் என்னடா இது?"
படித்த காட்டுமிராண்டிகள் சொன்னார்கள் "ஆமாம் முன்னாடி நரமாமிசத்தை கையால் சாப்பிட்டோம். இப்போ ரொம்ப டீசண்டா முள்கரண்டி, ஸ்பூன்ல சாப்பிடுறோம்ல"
"@@#%&**()"
---------------------------------------------------------------------------
நகரத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு விவசாயியின் மகன் தன் தந்தையைப் பார்க்க கிராமத்திற்கு வந்திருந்தான்.
"மவனே இன்னிக்கு நான் வயல்ல புல் அறுக்கப் போறேன். புல்லை அறுக்க நீயும் ஒரு வறண்டியை எடுத்துட்டு வாடா. சேர்ந்து புல்லு அறுப்போம்!" என்று தகப்பனார் பையனிடம் சொன்னார்.
ஆனால் பையனோ விவசாய வேலை செய்வதையே விரும்பவில்லை. "நான் மெத்த படித்தவன். இந்த விவசாயிங்க பேசுறதே எனக்கு புரியிறதில்லை.மறந்தும் போய்விட்டது. ஆமா வறண்டி என்றால் என்ன?" என்று திரும்ப அப்பாவிடமே கேட்டான்.
"இவனை திருத்தவே முடியாது" என்று தந்தை வேலையை தொடர்ந்தார்.
அப்படியே முற்றத்திற்கு போன பையன் கீழே கிடந்த ஒரு வறண்டியை மிதிக்க, அதன் மறுமுனை எழும்பி முகத்தில் உள்ள மூக்கில் "னொங்கென்று" இடித்தது.அப்போது தான் வறண்டி என்றால் என்ன என்று ஞாபகத்துக்கு வந்தது. அவன் மூக்கை தடவியப்படியே "இந்த வறண்டியை எந்த முட்டாள் தரையில் போட்டு வச்சிருக்கோ?" என்றான்.
(இது லியோ டால்ஸ்டாய் சொன்ன கதைன்னு யாரோ சொன்னாங்க)
----------------------------------------------------------------------
ஒரு ஜோக்கு
மனைவியை கண்டு பயந்து வாழ்க்கையே வெறுத்து அவன் குடிப்பழக்கத்தை மேற்கொண்டான். ஒரு நாள் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியவன் குடிமயக்கத்தில் முறைத்து கொண்டு நின்ற மனைவியின் இரண்டு உருவங்களைக் கண்டான். அவ்வளவு தான் அன்றிலிருந்து குடிப்பதையே நிறுத்திவிட்டான்.
---------------------
என்னாது இது? (வடிவேலு ஸ்டைலில்)
சும்ம்ம்ம்ம்மா.... (அதே வடிவேலு ஸ்டைலில்)
வேலை ஜாஸ்தியிருந்ததால் ஒரு ஒப்பேத்தல் பதிவு.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு வெள்ளைக்கார பாதிரியார் சென்று அவர்களுடன் தங்கியிருக்கிறார். திடீரென்று ஒரு பிரச்சினை. அதாவது அவர்கள் தலைவனுக்கு ஒரு வெள்ளிக்காரக் குழந்தை பிறந்துவிடுகிறது. காரணம் நீங்கள் நினைப்பதேதான். தலைவன் கோபத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருகிறான். பயந்து போன அவர் உளற ஆரம்பிக்கிறார். "இதோ பாரப்பா, குழந்தையின் நிறம் என்பது கடவுள் செயல். உன்னுடைய ஆட்டுக்கு எல்லாமே வெள்ளைக் குட்டிகள்தான். திடீரென்று இம்முறை கறுப்பு குட்டிகள் பிறக்கவில்லையா?" என்று கேட்கிறார். தலைவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கூறுவான்: "சரி சரி, குழந்தையைப் பற்றி நான் கேட்கவில்லை, நீயும் குட்டிகளை மறந்து விடு".
அன்புடன்,
டோண்டு ராகவன்
இருந்தாலும் அந்த குடிகார கணவன் ஜோக் கொஞ்சம் ஓவர்!
இளவஞ்சி, நன்றி தலீவா.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
கொர்ர்ர்ர்ர்ர்ர் பாடல்
(இசை)
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
(பாடுவதற்கு முன் ராகத்தில் குரலை இழுப்பார்களே, அந்த இழுப்பு கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது)
ம்ம்ம்ம்ம்......
(இசை)
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
ஆ... ஆ... ஆ... (இனிய கர்நாடக சங்கீத ராகத்தில் இந்த வார்த்தைகள் இழுக்கப்படுகிறது)
(இசை)
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹங்...ஹங்... ஹங்....
(பாடல் ஆரம்பம் ஆகிறது)
நான் ராகத்தில் பாட வந்தேன்
இசை எனும் நதியில் ஓடம் போல மிதக்க வந்தேன்
(இசை)
ஹஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ஹஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... (பஸ்ஸை நிப்பாட்டிய பிறகு ஏர் ரிலீஸ் செய்வார்களே அந்த மாதிரியான சவுண்டுடன்)
(பாடல்)
நான் பாடும் ராகத்தில் நனைய நீ வா என் ராணி
நான் கொண்ட மோகத்தில் தாளமிடுகிறேன் நீ வா என் தேவி
(இசை)
கொர்ர்ர்ர்ர்ர்ர்.... கொர்ர்ர்ர்ர்ர்ர்... (இப்படி அடித்தொண்டையிலிருந்து நீங்கள் சொல்லும் போது தொண்டையில் உள்ள சளி அடைத்துக் கொண்டால் எப்படி சத்தம் கேட்கும் அது மாதிரி)...ஹல ஹல ஹல... (ரூட் கிளியர் ஆகி) கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
(பாடல்)
மனம் பாடும் மோகனத்தில் நான் பாட வந்தேன்
சுகம் தரும் மெட்டுக்கட்டி இதமாக பாடுகின்றேன்
(இசை)
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
கொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... (கொசு காதில் பாடினால் வரும் சத்தம் மாதிரி)
ரீட்டு ரீட்டு ரீட்டு ரீட்டு ரீட்டு... (சுவர் கோழி கத்தும் சத்தத்தில்)
(பாடல்)
நான் ராகத்தில் பாட வந்தேன்
இசை எனும் நதியில் ஓட வந்தேன்
(சிந்து பைரவியில் ஜேசுதாஸ் வாய்ஸை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.... (வாய்ஸ் ஹைபிட்சில் ஏறுகிறது) ஆஆஆஆஆஆஆ... (லோ பிட்சில் இறங்குகிறது.) ஆஆஆஆஆஆஅ....(திரும்ப ஹைபிட்ச்)
(இசை)
ஙம் ஙம் ஙம்.... (திரும்ப தொண்டை சளி அடைத்துக் கொண்ட மாதிரி)...ஹல் ஹல் ஹல்... (ரூட் கிளியர் ஆகி) கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ஙம் ஙம் ஙம்.......
(அலறல்)
பே பே. சீ சீ சீ சீ.... [என் மேல் ஒரு கரப்பான்பூச்சி பொத்தென்று விழுந்ததால் நான் போட்ட சத்தம் இந்த வரி]
பாட்டு நல்லயிருந்ததா? மேல் சொன்ன பாடல் வரிகளுக்கு இசை போல் வந்த புர்ர்ர், ஹஸ்ஸ்ஸ், புஸ்ஸ்ஸ்,ஹல, ஹல எல்லாம் என் கூட தங்கியிருந்த என் நண்பனின் குறட்டை ஒலி. இரவில் தூங்க நினைத்த எனக்கு நண்பனின் குறட்டை ஒலியும்,கொசுவின் கொய்ங்ங் சத்தமும், சுவர்கோழியின் ரீட்டு ரீட்டு சத்தமும் இனிய இசைக் கலவையைத் தந்துக் கொண்டிருந்தது. அந்த இசை கலவைக்கு இட்டு கட்ட நினைத்து மனதில் இனிய பாடல்களை இரவு முழுவதும் உறங்காமல் பாடிக் கொண்டிருந்தேன்.
பொழுதும் புலர்ந்தது.....
"என்னடா! நைட்டு நல்ல தூங்கினியா?" நண்பன் கேட்டான்.
"ஓ! யாரோ நல்ல தாலாட்டுப் பாடுன மாதிரி இருந்திச்சா, தலைய கீழே வச்ச உடனே தூங்கிட்டேன். தூக்கமுன்ன தூக்கம் அப்படி ஒரு தூக்கம்" இது நான்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
மார்த்தாண்டம் : லக லக லக லக...
மூர்த்தி கவலையே படாதீங்க. அது நீங்க இல்லை. வேறொரு நண்பர்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
மும்பை எக்ஸ்பிரஸ்-விமர்சனம்(ஆறிப்போய்)
3 முட்டாள் பசங்க சேர்ந்து ஒரு பணக்கார குழந்தைய கிட்நாப் பண்ண போறாங்க.அதுல கமல் ஒருத்தரு. அப்புறம் ஒரு எல்.ஐ.சி முட்டபயல் ரமேஷ் அர்விந்த் சேர்ந்து ஜால்ரா அடிக்கிறார். கடத்தல் நடத்த போகும் போது நடக்கும் தப்புகள் சாதக பாதகமாக அமைவது தான் கதை.
சிரிச்சி சிரிச்சி வந்த சீனா தானா தான் கதை. சிரிப்போ சிரிப்பு. அடுத்த கணமே மறந்தும் போகிறது.எல்லாம் நினைச்சி சிரிக்க கூடிய வசனங்கள், காட்சிகள் அல்ல. ஸ்பாண்டேனியஸாக சிரிச்சி மறக்க கூடியவைகள் தான் எல்லாமே. வழக்கம் போல கமல் நல்ல நடிச்சிருக்கார். வையாபுரிக்கும்,பசுபதிக்கும் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அப்புறம் என்னவோ டிஜிட்டல் டெக்னாலஜி படப்பிடிப்பு என்றார்கள்.அப்படின்னா என்னா? நிறைய இடத்தில் சொதப்பியிருக்கு கேமரா. திரை முழுக்க நிறைய இடத்தில் பிக்சல் பிக்சலாக தெரிகிறது. லைட்டிங் வேற ஒரு மாதிரியிருக்கு. என்ன எழவு டெக்னாலஜியோ.
அப்புறம் க்ளைமாக்ஸ் என்னான்னே தெரியல. திடீரென்று பாய்ந்து எங்கேயோ போய் படம் முடிஞ்சிடுச்சி. கத்திரி ஏதாவது வச்சிட்டாங்களா?
அப்புறம் எப்படி தான் இந்த மாதிரி ஜாங்கிரி மாதிரி திரைக்கதை அமைக்கிறாங்களோ? சுத்தோ சுத்துன்னு சுத்தியிருக்கு திரைக்கதை. அதுல கமலை பாராட்டலாம். அப்படின்னா படம் எப்படியிருக்கு. இதோ கீழேயிருக்கிற ஜாங்கிரி மாதிரி தான் இருக்கு. சுத்தி சுத்தி பின்னி பினஞ்சி நகைச்சுவை என்ற ஸ்வீட் ஓவராக, நெய் கொஞ்சம் வழ வழ கொழ கொழான்னு இருக்கிறதுனால நெஞ்சில ஒட்டவே இல்லை.

உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
இதென்ன அல்வா போட்ட ஜாங்கிரியா?
எனக்கு ஜாங்கிரிதான் ரொம்பப் பிடிக்கும்.
அது சரி, சினிமாப் பாக்கரது என்னத்துக்கு? அறிவை வளர்த்துக்கவா? :-)))
என்றும் அன்புடன்,
துளசியக்கா
:-))
விமர்சனத்தை விட இதை ரொம்ப ரசிச்சேன்.
அய்யய்யோ அய்யய்யோ! துளசியக்கா இப்படி கேட்டுட்டீங்களே, சினிமா என்னாத்துக்குன்னு? மூளை இருந்த தானே அறிவ வளர்த்துக்கிறதுக்கு. ;-)))))))))))))))))))) தியோட்டரில் குடியிருக்கும் தமிழ்நாட்டு ஜனங்களை(என்னையும் சேர்த்து தான்) கேட்டுப் பாருங்க தெரியும்.
(ps: i like MMKR, Avvai Shanmughi.. is this movie of the same class?)
Baby's Day Out வாடை அடிக்கிற மாதிரி இருக்கே? கமல் படம்ன்னாலே ஏதாவது ஆங்கிலப்படம் நினைவுக்கு வந்து தொலையுது...
நேர்மையாளனாக விட்டு விட்டீர்கள் போலும்.
மணிசித்ரதாழ் கதை உலகத்திற்கே தெரியும். அதற்கு , இவ்வளவு சிரமப்பட்டு , Flash போட்டு investigative journalism (?) செய்த
நீங்கள் , மும்பை எக்ஸ்பிரஸ் பற்றி வித்தியாசமாக அதன் மூலம் என்ன என்று ஆராய்ச்சியை மற்றவர்கள் சொல்லும் முன் ஆரம்பியுங்களேன்.
மெய்யப்பா! போட்டுத் தாக்குறாயேப்பா... ப்ளாஷ் போட்டதை பார்த்து டென்ஷன் ஆகிட்டீங்க போல. அதெல்லாம் நமக்கு ஜீஜீபி. இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலிஸம் அப்படி இப்படின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.மனதில் தோனியது. போட்டுத் தாக்கப்பட்டது.கவலையே படாதீங்க. பார்த்துக்கிட்டு இருக்கிற 100 கணக்கான படத்தில கமலின் மும்பை எக்ஸ்பிரஸோட மூலம் மாட்டாமல் போய் விடுமா?
சொந்த சரக்கு காலி ஆகிட்ட சுட்ட சரக்கு சொந்த சரக்கு.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
மணிசித்ரதாழு & சந்திரமுகி
இங்கு இயக்குநர்களின் நேர்மையும், திறந்த மனதும் புலனாகிறது. அதே போல் மகேந்திரன் உதிரிபூக்களை புதுமைபித்தனின் கதையிலிருந்து தழுவியது என நேர்மையாக டைட்டிலில் போட்டார். இன்றைய காலக்கட்டத்தில் எங்கிருந்து உருவப்பட்டாலும் நேர்மையற்ற தன்மை தான் திரைஉலகில் நிலவுகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சந்திரமுகி. சந்திரமுகி கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் P.வாசு என வெட்கமில்லாமல் போட்டு கொண்டிருக்கிறார். சந்திரமுகியின் உண்மை கதைக்கு சொந்தக்காரர் மது முட்டம் என்பவர். சந்திரமுகி படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மணிச்சித்ரதாழு என்ற மலையாள படத்தின் கதை என வந்ததிகள் பரவியது. பி.வாசு அங்கிருந்து சில காட்சிகள் தான் உருவப்பட்டன என்று அதற்கு சந்திரமுகிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
அது அந்த காலக்கட்டத்தில் கதை வெளிப்பட்டு விட கூடாது என பி.வாசு மறுத்திருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. படம் வெளிவந்த பிறகு காட்சிக்கு காட்சி மணிச்சித்ராதாழை சந்திரமுகியாக போட்டோ காப்பி போல ஈ அடிச்சான் காப்பி பண்ணி வைத்திருக்கும் பி.வாசு படத்தின் டைட்டிலில் கதை, திரைக்கதை தன் சொந்தம் என்று கொண்டாடுவது எ ந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. உண்மை மூலத்தை சொன்னால் தன் திறமை மீது மக்களுக்கு சந்தேகம் வந்து விடுமோ என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். சினிமாவில் இப்போது நேர்மை என்பது நகைப்பு உரியது ஆகிவிட்டது.
நான் ரீமேக் படங்களை வெறுப்பவன் அல்ல. நல்ல கதையின் தமிழ் வெர்சனை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். பி.வாசுவின் நேர்மையற்ற நடத்தையை கண்டு தான் மனம் வெறுக்கிறது.
இப்போது மணிசித்ரதாழு படத்தைப் பற்றி பார்ப்போம்.
மொழி: மலையாளம்
வெளியான ஆண்டு: 1993
டைரக்ஷன் : பாசில்
தயாரிப்பு : அப்பச்சன்
கதை-திரைக்கதை-வசனம் - மது முட்டம்
இசை : எம்.ஜி.ராதாகிருஷ்ணன்
நடிகர்கள்:
மோகன்லால், சுரேஷ் கோபி,ஷோபனா,நெடுமுடி வேணு, திலகன்
தெளிந்த நீரோடை போன்ற அற்புதமான கதை. யாருக்கும் மிகைப்பட்ட நடிப்பு இல்லை. எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சீராகச் செல்லும் திரைக்கதை. ஏற்கனவே பாசில் இந்த மாதிரி சஸ்பென்ஸ் டைப் பங்களா காட்சிகளை "கிளிபேச்சு கேட்க வா,கண்ணுக்குள் நிலவு" போன்ற படங்களில் புகுத்தியிருந்தார்.அதற்கு முன்னோடி மணிசித்ரதாழு படத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
கதையை தெரிந்துக் கொள்ள விரும்பினால் கீழ் சொல்லப் போகும் நடிகர்களின் மாறுதல்களுடன் என்னுடைய சந்திரமுகி விமர்சனத்தைப் பார்க்கவும்.
மோகன்லால் - ரஜினிகாந்த்
சுரேஷ் கோபி - பிரபு
ஷோபனா - ஜோதிகா
கொடுமுடி வேணு - நாசர்
உங்களுக்காக மணிசித்ராதாழிலிருந்து சில காட்சிகள். நீங்கள் சந்திரமுகியை பார்த்திருந்தால் காட்சிகள் டிட்டோவாக இருப்பதை கண்டு இரசிக்கலாம்.
மணிசித்ரதாழுலிருந்து சந்திரமுகி கீழ்கண்ட வகையில் மட்டுமே மாறுபட்டுள்ளது.
1. ஹீரோ துதி மணிசித்ராதாழில் இல்லை. ரஜினிக்காக சேர்க்கப்பட்ட முதல் பகுதி.
2. மோகன்லால் இடைவேளைக்கு பக்கத்தில் தான் படத்தில் அறிமுகம் ஆவார். சந்திரமுகியில் படம் முழுக்க ரஜினி.
3. சந்திரரமுகி தெலுங்கில் பேசுவார். மணிசித்ரதாழில் சந்திரமுகிக்கு பதிலாக நாகவல்லி தமிழ் பேசுவார்.
3. சந்திரமுகியில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வேட்டைய ராஜாவாக நடித்து ஜோதிகாவை குணப்படுத்துவார். ஆனால் மணிச்சித்ரதாழில் மோகன்லாலின் உதவியுடன் சுரேஷ் கோபி சங்கரன் தம்பியாக (வேட்டைய ராஜா) நடித்து ஷோபனாவை குணப்படுத்துவார்.
4. சந்திரமுகியில் வேட்டைய ராஜா பொம்மை எரிக்கப்படும். மணிசித்ரதாழில் சங்கரன் தம்பி பொம்மை வெட்டப்படும்.
இதை தவிர மற்றவை எல்லாம் டிட்டோ.
சந்திரமுகி சில வகையில் உயர்ந்து நிற்கிறது. Ofcourse 1. ரஜினி 2. இசை 3. கலை: தோட்டாதரணி 4. கிராபிக்ஸ் போன்றவை அருமை. திரைக்கதை சொதப்பல் & குப்பை.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
EverythingI agree with everything in your post Vijay. Except with
//சந்திரமுகி சில வகையில் உயர்ந்து நிற்கிறது. Ofcourse 1. ரஜினி 2. இசை 3. கலை: தோட்டாதரணி 4. கிராபிக்ஸ்//
I havent seen Chandramukhi. Might do it for Jothika. Might... But, Manichithrathaazu's music is way way way better than Chandramukhi's.
-Mathy
நன்றி ரோசாவசந்த். கொஞ்ச நாள் முன்பு வரை ஜீன் ரினாயர் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் எஸ்.ரா 'ழான் ரெனார்' என்கிறார். நீங்கள் 'ரென்வா' என்கிறீர்கள். அப்புறம் ஜீன் ஏன் ழான் ஆகிறது பிரெஞ்சில். டோண்டு,ரோசா பதில் சொல்வீர்களா?
நன்றி இராதாகிருஷ்ணன். ரொம்ப சொரணை கெட்டுப் போய்ச்சே அதான் மோசமான நிலமை.
அப்புறம் மதி, இசை என்று சொன்னது பின்னனி இசையை. க்ளைமாக்ஸ் அற்புதமான சவுண்ட் எபெக்டில் வருகிறது சந்திரமுகியில். ஆனால் மணிசித்ராதாழு பாடல்கள் மிக மெல்லின வகையை சேர்ந்தது. அருமையாக இருக்கிறது. அது போல் சந்திரமுகி கலை ரொம்ப பிடிச்சிருக்கு.
'கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத்தூக்கித் தொட்டிலில் போடுன்னானாம்!'
இப்படி போகுது கதை இங்கே!!!!
//கொடுமுடி வேணு - நாசர்//
அது சரி நெடுமுடியைக் 'கொடுமுடி'யாக்கிய காரனம் என்னவோ?:-))))))
ஆனா, பாட்டுன்னா அது 'மணிச்சித்திரத்தாழு'தான் பிடிச்சிருக்கு! அதுலேயும் அந்த
'ஒருமுறை வந்து பார்த்தாயா?...அடடா.. அருமை!!!!
என்றுமன்புடன்,
துளசி.
அது ரென்வாதான். வா என்றால் வா இல்லை. உஆ என்பதுபோல். oiஎன்பது இப்படி வ்வா என்று உச்சரிக்கப்படும்.
டைட்டில் கார்டில் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் P.வாசு என்று மட்டும்தான் வெட்கமில்லாமல் போட்டு கொண்டிருக்கிறார். ஏனோ, கூச்சத்தில் 'கதை'யை விட்டு விட்டார்.
தோட்டா தரணியின் கலை வெகு இயல்பு அருமை.
கிராஃபிக்ஸ்: அந்தப் பட்டம் சுழற்றுவதைத்தானே சொல்றீங்க ;-))
Eventhough I am Rajini's fan and I have not seen the movie so far. But as a gut feeling no way Rajini can perform better than Mohanlal in that role.
Venkat M
மனிசந்திராதாழின் டிட்டோ என் சொல்லிவிட்டு சந்திரமுகியை மட்டும் சரியில்லை என விமர்சிப்பது நல்ல ஜோக்.
ரஜினி யை பற்றி திட்டுவது எழுதுவது என் ஆரம்பித்தபிறகு லாஜிக் பார்ப்பது தவறு.
தேன்மாவின் கொம்பு விற்கு கிடைக்காத வறவேற்பு முத்து விற்கு கிடைத்தது(ஜப்பான் வரை).
பாவம் கஷ்டப்பட்டு மனிசந்திரதாழ் கிளிப்பிங்ஸ் எல்லலாம் போட்டு ரஜினியை திட்டுமளவிற்கு ரஜினியின் வளர்ச்சி.
Fanatic-களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
க்ளிப்பிங்ஸ்களுக்கு என்னமோ ரொம்ப கஷ்டப்பட்டதா சொல்றீங்க. 10 நிமிஷம் போதும் சார் எனக்கு. என்னுடைய மத்த ப்ளாஷ் க்ளிப்பிங்ஸை போய் பாருங்கண்ணா.
கொஞ்சம் உங்களுக்கு நினைவிருந்தால் 1993-க்கு நினைவை ஓட்டிப் பாருங்கள். கேராளவில் சக்கைப்போடு போட்டது மணிசித்ரதாழு. அத்துடன் சிறந்த நடிகை(ஷோபனா), சிறந்த மேக்-அப்(பி.என்.மணி), மற்றும் சிறந்த டைரக்டர் (பாசில்) போன்றவர்களுக்கு அந்த படம் விருதுகளை வழங்கிச் சென்றது.
அது சரி தான்..ஆனால் யாருக்கு என்பது தான் பிரச்சனை..ரஜினி படம் மட்டும் தான் உலகத்திலே உண்டுன்னு நினைக்குற உங்களை போல ரஜினி பக்தர்களுக்கு சந்திரமுகிக்கு முன்னால் மனிசந்திர தாழ் தெரியாமல் இருக்கலாம்..எல்லோரையும் உங்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டாம்.
மூலக்கதை : ஸ்வர்க்க சித்ரா
அப்படின்னு போட்டிருந்தாங்களே கவனிச்சீங்களா?
நான் பத்திரிக்கையில் படித்த வரையில் மது முட்டம் இதைக் கண்டு கொதித்து கேஸ் போட தீவிரம் ஆகியிருக்கிறார் என்று படித்தேன்.
//கேராளவில் சக்கைப்போடு போட்டது மணிசித்ரதாழு//
கேரளாவில் மட்டும்தானே
விஜய் உங்களுடைய coutesy பற்றி பெருமை அடைகிறேன். மனிசந்தரதாழ் படத்தை தான் கன்னடத்தில் ஆப்தமித்ராவாக P.vaasu கொடுத்தார். அப்போது நீங்கள் விமர்சித்திருந்தால் உங்களுடைய ஆதங்கம் சரியே. அதை ஏன் செய்ய வில்லை ராசா. ஆப்தமித்ரா பற்றி தெரியாது என் கூறி உங்களுடைய அறிவுஜீவியை குறைத்து கொள்ளாதீர்கள். கன்னடத்க்தில் 200 நாட்கல் ஓடிய வெற்றிப்படம் அது.
Repeattu- உங்களுக்கெல்லாம் எப்படி தான் புரிய வைக்கிறதோ.
ரஜினி பக்தர்கள் என்று சொன்னதற்கு நன்றி.
எத்தனையோ படம் வந்தாலும் சந்திரமுகிக்கு மட்டும் விமர்சனம் இனயதளதிலும் அதிகம் வருவது ரஜினி மட்டுமே நடிகர் என நீங்கள் நினைத்து கொண்டீர்கள் என வைத்துக் கொள்ளலாமா/
P.Vasu..u can better stop directing and pls stop calling this movie an entertainer..
Ramakrishnan, New Delhi
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
மயக்கமா? கலக்கமா?
சிறிது நேரம் முன்பு வரை தூக்கத்துக்காக கட்டிலில் புரண்ட போதும், தூக்கம் என்னை தழுவ மறுத்தது. மெல்லன குரலில் இசையை ரசிக்கத்தூண்டியது என் மூளை. மெதுவான குரலில் P.B.சீனிவாசை பாடவிட்டு தலையணையை கவ்வினேன்.அலைந்துக் கொண்டிருந்த மனதும் ஒருவசப்பட்டு போனது கண்ணதாசா!!.

என்னை தூண்டிய பதிவுக்கு தூண்டிய அந்தப் பாடல்
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் புழுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
ஆசைத் தோறும் வேதனை இருக்கும்
வந்தத் துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடிவிடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் கவிப்பாடு.
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு
இனிய சாறாக வழிந்தோடும் உந்தன் தாலாட்டுடனும் சாந்த மனதுடனும் நிம்மதியாக தூங்கப் போகிறேன்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
கண்ணதாசன் பற்றி நான் சொல்லிக் கேட்ட ஒரு விஷயம். ஒரு முறை அவர் ஒரு பள்ளி விழாவிற்கு சென்றிருந்தாராம். அங்கு பல மாணவர்களும் அவர் முன்னால் அவர்தம் கவிதைகளை வாசித்தார்களாம். வழக்கமான கை தட்டலும் இருந்ததாம். கடைசியாகக் கவிஞர் அவருடைய கவிதையை வாசித்தபொழுது, பலத்த கரகோஷம் வானைப் பிளந்ததாம். கைதட்டல் அடங்கிய பிறகு கவிஞர் சொன்னாராம் : "இது நான் எழுதிய கவிதையே அல்ல. முன்பு கவிதை வாசித்த ஒரு மாணவர் எழுதியது. அவர் வாசித்ததுதான் நான் எழுதிய கவிதை. ஆனால் யாருக்கு கிடைத்தது பலத்த கை தட்டல்? 'இதுதான் உலகம்' " என்றாராம்.
முன்பு நான் ஒரு பின்னூட்டத்தில்,
// விஜேய், நீங்கள் மகேந்திரன் பற்றியும் இந்த இரான் படம் பற்றியும் எழுதியதை ஒரு சுஜாதாவோ அல்ல புஷ்பா தங்கதுரையோ தாங்கள் எழுதியாக குமுதத்துக்கோ ஆனந்த விகடனுக்கோ அனுப்பிருந்தால் நிச்சயம் உடனே பிரசுரம் செய்திருப்பார்கள்.//
என்று எழுதியது "இந்த உலகம் இப்படித்தான்" என்ற யதார்த்தத்தை உணர்த்தத்தான். அதை நீங்கள் அப்பொழுது சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்பது சந்தேகமே !
- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
சந்திரமுகி - திரைவிமர்சனம்(சுட சுட)

படம் ஆரம்பித்து எதற்கு எடுத்தாலும் விசில். பெரிய லெவல் ரோடு காண்ட்ராக்டராக பிரபுவை காண்பிக்க தொழில் பொறாமைக் கொண்ட வில்லன் அடியாட்களை அனுப்ப, பிரபு வருவதற்குள் திரையில் ஒரு ஷூவின் அடிப்பாகம் மட்டும் திரையில் குளோசப்பில் காண்பிக்கப்படுகிறது. அப்புறம் பக்கவாட்டில் கவிழ்த்து போட்ட Y எழுத்து மாதிரி காலை அந்தரத்தில் தூக்கி நின்று புருஸ்லீ, ஜாக்கிசான் ஸ்டைலில் ரஜினி காந்த் போஸ் கொடுக்கிறார். விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சில பேர் திரைக்கு ஓடிச் சென்று ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டு விட்டு வருகிறார்கள். ரஜினி தொட்டாலே போதும் அடியாட்கள் பறக்கிறார்கள். தலைகீழாக சுற்றுகிறார். மேல் கீழாக குதிக்கிறார். என்னனவோ செய்கிறார். வில்லன்கள் அடித்து ரஜினியால் துவம்சம் பண்ணப்படுகிறார். அய்யகோ... இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு அருமையான பைட்டு சிக்குவென்ஸ்.
அப்புறம் தான் புரிகிறது ரஜினி அமெரிக்காவிலிருந்து இறங்கிய உலகப் புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர்.பெயர் சரவணன். பிரபுவுக்கு உற்ற நண்பன். "யாமிருக்க பயமேன்,இந்த சரவணன் இருக்க பயமேன்" இது தாங்க ஒரு சில இடத்துல ரஜினி பயன்படுத்துற பஞ்ச் (பஞ்சு) டயலாக். பிரபு ஜோதிகாவை காதலித்து கல்யாணம் புரிந்தவர். அம்மா கே.ஆர்.விஜயா. பிரபு சொந்த ஊரில் உள்ள வேட்டையப்ப ராஜா அரண்மணை வாங்க போகிறேன் என்று சொல்ல கே.ஆர்.விஜயா பதறுகிறார். பிறகு அந்த ஊரில் உள்ள சொந்தங்களாக அகிலாண்டேஸ்வரி, நாஸர் பத்தியெல்லாம் சொல்கிறார்.அவர்களிடமிருந்து பல வருடம் முன்பு பிரிந்து வந்தவர்கள் பிரபு பேமிலி. அகிலாண்டேஸ்வரியைப் பற்றி ஒரு பெரிய பில்ட்-அப் கொடுக்கிறார்கள். நானும் வழக்கம் போல ரஜினி பட வில்லி என்று நினைத்தேன்.கடைசியில் அந்த கேரக்டரும் தொஸ்ஸ்ஸ்ஸ்....
ரஜினி முதலில் அந்த பங்களாவைப் பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு வருகிறார். வடிவேலுவும் நாசருக்கு ஒரு மாப்பிள்ளை முறையாக வேண்டும் அந்த படத்தில். ரஜினி வடிவேலுவுடன் சேர்ந்து சில காமெடிகளை செய்கிறார். பங்காளவைப் பற்றி சொன்னதும் எல்லாரும் நடுங்கிறார்கள். நடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பில்ட்-அப் கொடுத்தக் கொண்டே இருக்கிறார்கள். ரஜினியும் வடிவேலுவும் காமெடி என்ற பெயரில் அவஸ்தை பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். போதும்டா சாமி இந்த கொடுமை. இடையிடையே பாட்டு வேற.
பங்களா பற்றிய பில்ட்-அப் என்னவென்றால் வேட்டையப்ப ராஜா சந்திரமுகி என்ற நாட்டியகாரியின் மேல் ஆசைக் கொண்டு அவளை தூக்கிக் கொண்டு வர, அவள் ஏற்கனவே ஒருவனை காதலித்து வருகிறாள். ராஜா பொறாமைக் கொண்டு காதலனை கொன்று விட்டு சந்திரமுகியை எரித்து விடுகிறார். அப்புறம் சந்திரமுகி அந்த பங்களாவில் ஆவியாக 150 வருடமாக வேட்டையப்ப ராஜாவை கொல்ல அலைகிறார். இது தான் பில்ட்-அப்.
ரஜினி அந்த பங்காளவை ஆராய்ந்து பேய் எல்லாம் ஒன்னும் கிடையாது என பிரபுவுக்கு ரைட் கொடுக்க, பிரபு பேமிலி உறவினர்களுடன் சர்வ ஜாக்கிரதையாக அந்த பங்களாவுக்கு குடியேறுகிறது. அப்புறம் ரஜினி வெளியூர் போகிறேன் என்று காணாமல் போகிறார். இதற்கிடையில் ஜோதிகா ஆர்வம் மிகக் கொண்டு பங்களாவில் ஒரு பகுதியில் பூட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையப்ப ராஜாவின் அறையை திறக்கிறார். அதிலிருந்து வீட்டில் அமனுஷ்யமாக பல கெட்டவைகள் பிரபுவுக்கும் சுத்தி இருப்பவர்களுக்கும் நடக்கின்றன.
ரஜினி வந்து சேருகிறார். துப்பறிகிறார். கண்டுபிடிக்கிறார். மனோதத்துவ ரீதியாக இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டியின்(Split personality) அட்டகாசம் என்கிறார். நிகழந்த அட்டூழியங்களுக்கு ஜோதிகாவை நோக்கி கையை காட்டுகிறார். அவரை எப்படி குணப்படுத்துகிறார் என்பதே சந்திரமுகி.
டிவியில் வந்துக் கொண்டிருந்த 'விடாது கருப்பு'(இந்திரா சௌந்தராஜன் எழுதியது என நினைக்கிறேன்???) அப்படியே சந்திரமுகி ஆகியிருக்கிறது. படத்தில் ரஜினிக்கு சுருதி ரொம்ப குறைவு. படு இளைமையாகத் தெரிகிறார். இருந்தும் என்ன பயன்? பாபாவுக்கு ஒரு படி மேல் என்று சொல்லலாம் இந்த படத்தை. ரசிகர்களுக்காக முதலிலேயே வழக்கான ரஜினியை காண்பித்து விட்டு, படம் பூராவும் அவரை மிஸ் பண்ணி விடுகிறார்கள். உற்சாகத்துடன் வந்த ரசிகர்கள் படம் கொஞ்ச நேரம் ஓட ஆரம்பித்ததும் ஆங்காங்கே கொட்டாவி விடுவதும், பாடலுக்கு பாத்ரூமைத் தேடி போவதுமாக இருக்கிறார்கள்.
இடைவேளை வரை இந்த படத்தை பேய் படமாக காட்ட வேண்டுமா? இல்லை சஸ்பெண்ஸ் படமாக காட்ட வேண்டுமா? என்ற குழப்பம் பி.வாசுவுக்கு. சும்மா அந்த பங்களாவை சுத்தி சுத்தி கேமிரா சுழட்டி அடிக்கிறது. கூட சேர்ந்து நமக்கும் தலை சுத்துகிறது.
சில ரசிகர்களிடம் அப்பிராயம் கேட்ட போது இடைவேளை வரை தான் ரஜினி படமாக தெரிந்தது என்றார்கள்.எனக்கு என்னமோ இடைவேளைக்கு பிறகு தான் படம் நன்றாக போனதாக நினைப்பு. காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனத்தை ஆங்காங்கே ரஜினி அள்ளி விடுகிறார்.
படத்தில் என்னதான் நிறைவு இருக்கிறது? நிறைவும் நிறைய இருக்கிறது.
பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை(தமிழ் பட தரத்தை அளவுக்கோல்களாக வைத்தால்). 'கொஞ்ச கொஞ்ச நேரம்' பாடல் துருக்கி இஸ்தான்புல்-ல் எடுத்ததாகக் கேள்விப் பட்டேன். தமிழ் படத்தில் இது வரை வராத லொக்கேஷன். ரஜினியும் நயந்தாராவும் அருமையாக தெரிகிறார்கள். அடுத்த பாடல் "அண்ணணோட பாட்டு" இதுவும் வெகு அருமையாக எடுத்துருக்கிறார்கள். "கோழி பறபற" பாடலும் அருமை.
அப்புறம் ராஜகமாளிகை. அருமையான செட்டிங்ஸ். அற்புதமாகத் தெரிகிறது அந்த மாளிகை. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கலை யார் என்று கவனிக்கவில்லை.
அப்புறம் படத்தின் கிளைமாக்ஸ். மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்.
அப்புறம் ஜோதிகா. கலக்கி அள்ளியிருக்கிறார். கிளைமாக்ஸில் ஜோதிகாவின் நடிப்புக்கு முன் ரஜினியால் ஈடு கொடுக்க முடியாமல் திணறியிருந்தார். சொத்தை சொள்ளையாக படத்தின் ஆரம்பித்தில் வந்துக் கொண்டிருந்த ஜோதிகா ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக மாறியதும் சந்திரமுகியாக ஜொலித்திருக்கிறார். அவருடைய மேக்-அப் வெகு அருமை. இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது ஜோதிகாவின் அந்த க்ளைமேக்ஸ் நடிப்பு. சபாஷ் நல்ல திறமையிருக்கு ஜோதிகா.
நயந்தாரா? ரஜினிக்கு நாயகி மட்டுமே. வேஸ்ட் செய்திருக்கிறார்கள். நாசருக்கும் கோமாளி வேடம். வேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
படம் முழுக்க தோய்வு.எப்படியோ க்ளைமேக்ஸை மட்டும் சரி கட்டியிருக்கிறார் பி.வாசு.
ரஜினி ரசிகர்களுக்கு இதுவும் சரியான படம் அல்ல என நினைக்கிறேன். அவர்கள் தான் சொல்ல வேண்டும் அவர்களின் பார்வையை. ரஜினி நடித்திருக்கிறார். அவ்வளவே....
அப்ப படம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... டமார் (க்ளைமாக்ஸ்)
குறிப்பு: படம் பார்த்த சூட்டில் எழுதியது, தூக்கம் கண்ணை சுழட்டுவதால் மூளையின் மேல்டாப்பில் வந்ததை போட்டுத் தாக்கியிருக்கிறேன். மற்ற விசயங்கள் மற்றொரு பதிவில் மெதுவாக. மும்பை எக்ஸ்பிரஸை கொஞ்சம் ஆறப்போட்டு சனிக்கிழமை பார்க்கலாமென இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
Á¨Ä¡Çò¾¢ø "Á½¢îº¢òÃò¾¡Ø" À¡÷ò¾Å÷¸ÙìÌ ÒâÔõ.
¸¨¾ «§¾¾¡ý.
«¾¢ø §Á¡†ýÄ¡ø ¼¡ì¼÷ ¬¸ ÅÕÅ¡÷. §„¡ÀÉ¡ split personality ¬¸ «üÒ¾Á¡¸ ¿Êò¾¢ÕôÀ¡÷.
Å¢¼¡Ð ¸ÕôÒ «¾üÌôÀ¢È̾¡ý Åó¾Ð.
Malayalathil "manichithrathazhu" parthavargalukku puriyum.
kathai atheethan. Rajinikku bathil Mohanlal. Shobhana "split personality" aga arputhamaga nadithiruppar.
விமர்சனத்தைப் பார்த்தால் படம் பார்க்கலாம்போல்தான் தெரிகிறது. வரும் ஞாயிறு நாங்கள் இங்கு பார்க்கத் திட்டமிட்டுள்ளோம். விமர்சனத்துக்கு நன்றிகள் பல, தொடரட்டும் உங்கள் சேவை :-).
அதே, அதே இயக்குனர் பாசில். மலையாளத்தில் நாகவல்லி, தமிழில் சந்திர முகி. மனோத்துவ நிபுணர் மோகன்லால் அமேரிக்கா பிராட்லியின் சிஷ்யன்.
அதே, அதே இயக்குனர் பாசில். மலையாளத்தில் நாகவல்லி, தமிழில் சந்திர முகி. மனோத்துவ நிபுணர் மோகன்லால் அமேரிக்கா பிராட்லியின் சிஷ்யன்.
இது 'மணிச்சித்திரத்தாழ்'கதையேதான்!!!!
அதுலே 'ஷோபனாவொட ஒரு டான்ஸ் தமிழ்ப் பாட்டில் வரும். 'ஒரு முறை வந்து பார்த்தாயா?... அருமையான பாடல் & நடனம்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
ரிலீசுக்கு முன்னால என்னல்லாம் சொன்னாரு?
P. வாசு மலையாளப் படமே பார்க்கமாட்டாரு போல ;)
If I remember right, P Vasu was denying in all his interviews that the story of Chandramukhi. He even went to the extent that they paid huge money to a greedy Fazil, though the story was nowhere close to Manichitrathazh. P Vasu, if at all you are listening, Tamils arent very naive as you guys have thought us to be.
Prince
முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சந்திரமுகி 'மணிசித்ரதாழ்'ழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமே என்று படம் எடுப்பதற்கு முன்பாகவே கேள்விப்பட்டேன். படம் எடுத்து முடிச்ச பி.வாசு, 'மணிசித்ரதாழ்' எடுத்த பாசிலுக்கு ராயல்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என்றாராம். என்ன பெரிய மனசு. மணிசித்ரதாழ் பார்க்கததால் விமர்சனத்தில் நான் குறிப்பிடவில்லை. அதற்கு பதில் 'விடாது கருப்பு' என்றேன்.
படம் பாபாவைப் போல் கேவலமாக இல்லையென்றாலும் பார்த்து முடித்தவுடன் நெஞ்சில் நிற்கிறது. ரஜினி ரசிகர் அல்லாதோற்க்கு இது ஒகே டைப்படம். ரசிக கண்மணிகளுக்கு தான் ஏமாற்றமாக இருக்குமென நினைக்கிறேன். முதல் பாதி தவிர வேறு எங்கும் ரஜினிக்கு ஸ்டைலோ, பஞ்சு டயலாக்கோ பேச வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. அது போல் கொஞ்ச நேரம் ரஜினியின் ரோலுக்கும் முக்கியதுவம் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
அந்த தெலுங்கு பாடலில் வரும் 'லக்க லக்க லக்க' என்ற ஓசை கலக்கியிருக்கிறது. படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
அபூ முஹை சொன்னது போல ரஜினியும் இதில் பிராட்லிக்கு அடுத்த கலக்கல் மனோதத்துவ நிபுணர் என்கிறார்கள்.
--------------------------------
சந்திரமுகி கண்டிப்பாக ஒரு ரஜினி படம் அல்ல. ஆனால் ஒரு நல்ல படம். விஜய் சொன்னது போல நிறைவுகள் நிறைய இருக்கின்றன. படத்தில் ஜோதிகா கொஞ்சம் ரஜினியை ஒவர்டேக் செய்திருக்கிறார். பஞ்ச் டயலாக் மற்றும் முகஸ்துதி இதில் மிஸ்ஸிங் அதுக்காக ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால் கொஞ்சம் ஏமாற்றம் அடையலாம் ஆனால் அவர்களை ரஜினி ஏமாற்றவில்லை. படம் ஒரு நல்ல தரமான படம். ரஜினி இளமையாகத் தெரிகிறார். பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் அற்புதம். கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர். விஷயம் இதுதான் ரஜினியின் சவாலையும் ஸ்டண்டையும் எதிர்பார்த்து போனீர்கள் என்றால் படம் பிடிக்காது. ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்தீர்கள் என்றால் சந்திரமுகி ஒரு சபாஷ் போடலாம். நிச்சயம் படம் 100 நாட்கள் ஓடுமெனபது என் கருத்து. கண்டிப்பாக பாபாவை விட இது ஆயிரம் மடங்கு தேவலாம் ஆனா அதே சமயம் பாட்ஷா அளவுக்கோ படையப்பா அளவுக்கோ இல்லை. அது சரி ரஜினியும் திருந்தனுமில்ல. இப்போத்தான் ஜெயா டிவி பக்கம் போயிருக்காரு முதல் படமே flop அயிட்டா எப்படி?
-----------------------------------
ஒப்பனீங் சாங் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே.
அனானிமஸ் பாபா படத்தை விட 100 மடங்கு நல்ல இருப்பது என்னவோ உண்மை. சவால் விடாத விசுக் விசுக்கென்று கைய ஆட்டாத அமைதியான ரஜினி. அவைகள் என்னமோ ரஜினியின் ஆரம்ப கால கலக்கல் படங்களை நினைவூட்டியது.
என்ன நடக்குது இங்க.. ? ஹிட் ரேட் உங்க வலைப்பூவுக்கு எகிறிடுச்சு போலிருக்கே. 1200 பேருக்கு மேல் நேத்து மட்டும் பார்த்திருக்காங்க. :-)
இதெல்லாம் கான்பிடென்ஷியல் மேட்டராச்சே. உங்க வலைப்பூவை பார்த்து netstad போட்டது தப்பா போச்சே. :-) எடுத்துர்றேன் :-))))))
ஆமாம் நேத்து யார் யாரோ பார்த்திருக்காங்க... ஹிட்டு எகிறிடுச்சி... ரஜினி படம் ஹிட் ஆகுதோ இல்லையோ நேத்து இந்த வலைப்பதிவு சூப்பர்ஹிட்டு... :-))))
Oru hittum Oru floppum ;)
நீங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்று கேட்பதிலிருந்தே நீங்கள் ரஜினி ரசிகர் இல்லை என்பது தெரிகிறது.வாசுவின் திரைக்கதியில் குழப்பமில்லை. உங்களுக்குத்தான் பட விமர்சனத்தை எப்படி எழுதுவது என்று குழம்பிப் போயிருக்கிறீர்கள்.
ரஜினி ஜோதிகாவுடன் போட்டி போட முடியாமல் திணறுகிறார் என்று கூறியிருக்கிறீர்கள்.சினிமாவின் "அண்டர் பிளே" இலக்கணங்கள் தெரியாத உங்களைப் போன்ற விமர்சகர்கள் இருக்கும் வரை தமிழ் திரையுலகம் உருப்படாது.
உங்களைப் போன்ற ஆட்களை தொடர்ந்து ஏமாற்றும் வரை ரஜினி படம் பிரமாதமாக ஓடும்.
ஆல் த பெஸ்ட் நெக்ஸ்ட் டைம்.
என்னப்பா ராஜ்குமாரு பதிவு பதிவா போய் சந்திரமுகி பத்தி சொன்னவங்களையெல்லாம் போட்டுத்தாக்கிட்டு வர்றீங்க போல. உங்கள் உணர்ச்சி வேகம் புரியுது. இப்படி திட்டி திட்டி தான் மனசை ஆத்திகிடனும் :-). அனேகமா பாபாவுக்கும் இப்படி தான் அநேகமாக குரல் விட்டுருப்பீங்க. உண்மை என்றுமே கசப்பானது தான். அப்புறம் ஒரு மேட்டர் நான் ஒன்றும் பத்திரிக்கைளுக்கான செர்டிபைட் (certified) விமர்சகன் அல்ல.அதை முதல்ல புரிஞ்சிக்குங்க. என் பதிவு. என் பார்வை. என் கருத்து. உங்களுக்கு பிடிச்ச எனக்கு படம் பிடிக்குனும்னு எதிர்பார்க்கிறது என்னப்பா நியாயம்.
அன்டர்ப்ளேயா இருக்கட்டும் ஓவர் ஆக்டிங்க இருக்கட்டும் நான் என் கருத்து சொன்னதில் ஏனைய்யா பொத்துக் கொண்டு வருகிறது.நான் சொல்லி திரைஉலகம் உருப்படாமல் போகப்போகிறதா??? ஆகா நல்ல அப்செர்வேஷன் உங்களுக்கு. நான் ஒன்றும் திரைஉலகை தூக்கிட்டு நிற்கும் தூண் அல்ல. வெறும் திரை ரசிகனே. அப்புறம்
//உங்களைப் போன்ற ஆட்களை தொடர்ந்து ஏமாற்றும் வரை ரஜினி படம் பிரமாதமாக ஓடும்.//
இது அப்படியல்ல இப்படி
"உங்களைப் போன்ற ஆட்களை ரஜினி தொடர்ந்து ஏமாற்றும் வரை ரஜினி படம் பிரமாதமாக தியோட்டரை விட்டு ஓடும்"
அப்புறம் திரைக்கதையில் குழப்பம் இல்லையா? :-) சுட்டாலும் உருப்படியா சுடனும்.
அய்யா! Fan-க்கும் Fanatic-க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
ஒரே பின்னூட்டம் தானா எல்லா பதிவுலேயும்...ஹி ஹி ஹி...இங்கே போய் உங்க பின்னூட்டத்தை பாருங்க தலீவா
http://raasaa.blogspot.com/2005/04/x.html
தவறுதலா அங்கே போட்ட பின்னூட்டத்தையே போட்டுட்டு அழிக்க முடியாம திண்டாடிட்டிருக்கேன்..சாரி தலைவா! (notepad-ல type பண்ணி copy பண்ணதால வந்த வினை!)
இங்க நான் சொல்ல வந்தது இது தான்....
விஜய்,
நீங்க உடனே மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துட்டு வந்து தாறுமாறா திட்டி ஒரு விமர்சனம் எழுதுங்க..அப்ப தான் ராஜ்குமார் உங்கள ரஜினி ரசிகன்னு ஒத்துக்குவார்.
என்னை ரஜினி அல்லது கமல் ரசிகன் என்று சொல்லிக் கொ(ல்)ள்வதை விட நல்ல சினிமா ரசிகன் என்று சொல்லிக் கொள்ள தான் விரும்புவேன்.சனிகிழமை தான் போறேன் மும்பை எக்ஸ்பிரஸ்க்கு.இடைப்பட்ட நாட்களில் வேலை வந்து விட்டதால் கொஞ்சம் டூ லேட் . குறை நிறைகள் சுட்டி காட்டுவதால் நான் ஒருவருக்கு மட்டுமே ரசிகன் ஆகிவிட முடியாதே.10 படங்கள் அந்த நேரத்தில் வந்திருந்தாலும், வித்தியசமாக ஏதாவது செய்திருக்கிறார்களா என்று ஆனானப்பட்ட "உப்பு" படத்துக்கே $14 போட்டு விசிடி(ஒரிஜினல் தானுங்கோ) வாங்கி பார்த்தவன்.
Fanatic-களுக்கு புரிய வைக்கிறது கஷ்டம் தலீவா.
அது சரி..உங்க ஊட்டு பக்கம் வீடியோ லைப்ரரி எதுவும் இல்லியா..நம்ம ஊட்டு பக்கம் ஒரு சீனா காரம்மா தமிழ் வீடியோ லைப்ரரி வச்சிருக்கு .புதுசு வந்தவுடனே போன் பண்ணி சொல்லும் .$3 -ங்கரதால நிறைய படம் பாக்குறது .(உப்பு-ம் அதுல ஒண்ணு) .மத்தபடி கமல்,ரஜினி,சேரன் படங்கள் தான் theatre-la பாக்குறது .நான் கமல் ரசிகன் தாங்கோ !ஆனா ரஜினி-யயும் பிடிக்கும். இந்த வார கடைசில ரெண்டு படத்தையும் பாக்குறாப்புல plan.
நம்ப கிட்டயும் கொஞ்சம் collection இருக்கு .ஆனா சொன்னா அடிக்க வருவீங்க .எல்லாம் பழைய சிவாஜி படம்..நான் ஒரு சிவாஜி பைத்தியம்..(அடப்பாவி ..இந்த காலத்துல இப்படி ஒரு லூசா-ன்னு திட்டாதீங்க!)
தியெட்டரை விட்டு ரஜினி படம் ஓடும் என்று எழுதியிருப்பதிலிருந்தே எந்த எதிர்பார்ப்போடு நீங்கள் படம் பார்த்தீர்கள் என்பது தெரிகிறது.
படம் சரியில்லை என்றால் "நெஞ்சில் நிற்கிறது, ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்ற பாசாங்கெல்லாம் எதற்கு? உருப்படியாக திரைக்கதியை சுட்டு இருக்கிறார்களா என்பதற்கு "மணிச்சித்திரத்தாழ்" பார்த்திருக்கிறீர்களா நீங்கள்.
விமர்சிப்பது உங்கள் உரிமை. ஆனால் சில பின்னூட்டங்களில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதற்கும், மெயின் விமர்சனமாக எழுதியிருப்பதற்குமே முரண்பாடு இருக்கிறது.
நீங்கள் ரஜினி ரசிகராக இல்லாத பட்சத்தில் விமர்சகர் கோணத்தில் மட்டும் எழுதுங்கள். ரசிகர்கள் பற்றிய கவலைகள் தேவையில்லை.
எப்படியோ, ரஜினியை திட்டுவதற்காவது முதல் நாள் பார்த்ததற்கு நன்றி.
பி.கு: எல்லா இடத்திற்கும் சென்று பிம்குறிப்பு தரும் அளவுக்கு வேலை வெட்டி இல்லாதவன் அல்ல. உருப்படியானவர்கள் என்று நினைத்த பிளாகிற்கு மட்டும்தான் பின்னூட்டம்.என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமா சொல்லுங்கள்.
இப்படி சொல்லி என்னை உங்க பரம ரசிகனாக்கிட்டிங்க, இனி தினமும் உங்க வலைப்பதிவை படிக்காமல் இருக்கவே முடியது. தாக்குதல் தொடரட்டும். இறுதியில் நன்மை உண்டாகட்டும்! வாழ்த்துக்கள்! (கொஞ்சம் ஒவர் ice வச்சதுக்கு மன்னிக்கவும்)
மனிச்சந்திர தாழ், ஆப்தமித்ரா வை வெருக்கதாவர்கள் சந்திரமுகி யை விமர்சிப்பது ரஜினியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே.
தலைவர் வழியில் வெண்ணிலவை மின்மினிகள் தடுத்திடுமா என்பது போல் மக்கள் படத்திற்கு கொடுக்கும் ஆதரவை உங்கள் இனையதள விமர்சனத்தால் தடுக்க
மனிச்சந்திர தாழ், ஆப்தமித்ரா வை வெருக்கதாவர்கள் சந்திரமுகி யை விமர்சிப்பது ரஜினியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே.
தலைவர் வழியில் வெண்ணிலவை மின்மினிகள் தடுத்திடுமா என்பது போல் மக்கள் படத்திற்கு கொடுக்கும் ஆதரவை உங்கள் இனையதள விமர்சனத்தால் தடுக்க முடியாது
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
